Skip to main content

நான்கு தொகுதியிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்த்து! உற்சாகத்தில் முன்னாள் அமைச்சர்...

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
natham r viswanathan

 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரித்து கட்சி வளர்ச்சிக்காக புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் நியமித்து வருகிறார்கள். அதுபோல்தான் திண்டுக்கல் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த மருதராஜ்க்கு கழக அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துவிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், வனத்துறை அமைச்சர் சீனிவாசனுக்கும் மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்து இருக்கிறார்கள்.

 

இதில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை மேற்கு மாவட்டமாக பிரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர். அதுபோல் மீதமுள்ள நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை கிழக்கு மாவட்டமாக பிரித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர். இப்படி திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மேற்கு என உருவாக்கி கட்சி வளர்ச்சியை பலப்படுத்தி இருப்பதை கண்டு ர.ர.க்களும் புது தெம்புடன் இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில்தான் புதிதாக கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

இதனைக் கண்ட விஸ்வநாதன், கரோனா காலம் என்பதால் வீட்டுக்கு வரச்சொல்வதை தவிர்த்துவிட்டு தொகுதியில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் நத்தம் அருகே உள்ள தனது என்.பி.ஆர். காலேஜுக்கு வாழ்த்து தெரிவிக்க வருமாறு கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து தான் நான்கு தொகுதிகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் சாரை சாரையாக என்.பி.ஆர். காலேஜ்க்கு படையெடுத்து சமூக இடை வெளியுடன் முககவசம் அணிந்து நத்தம் விஸ்வநாதனுக்கு சால்வை மாலைகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

இதில் தீவிர ஆதரவாளர்களான பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் முன்னாள் திண்டுக்கல் மாநகர கவுன்சிலர் திருமாறன் உள்பட சில ர.ர.க்கள் ஜெயலலிதா, இபிஸ், ஓபிஎஸ், விசுவநாதன் மற்றும் அவரது மாப்பிள்ளையான நத்தம் யூனியன் சேர்மன் கண்ணன் படங்களையும் முககவசத்தில் போட்டு அதை அணிந்தவாறு  பெருந்திரளாக வந்து வாழ்த்து பொக்கேக்களை வழங்கினார்கள். இப்படி வந்த கட்சி பொறுப்பாளர்களுக்கு ஸ்வீட், காரத்துடன் பாட்டில் தண்ணீர் மற்றும் டீ, காபியும் கொடுத்து அனுப்பி வைத்தனர். 

 

ஆரம்ப காலத்திலிருந்து விஸ்வநாதன் கட்சியில் இருந்து வந்ததால் சாணார்பட்டி யூனியன் சேர்மனை தொடர்ந்து, நத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நான்கு முறை தொகுதியை தக்கவைத்து, இரண்டு முறை முப்பெரும் துறை அமைச்சராக இருந்து தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுத்து நத்தம் தொகுதியை அதிமுக கோட்டையாக உருவாக்கி வந்தார்.

 

அதோடு மாவட்ட செயலாளராக இருந்ததாலும் மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களுக்கு டாஸ்மாக் பார் மற்றும் காண்ட்ராக்ட் பணிகளையும் கொடுத்தார். அதன் மூலம் கட்சி பொறுப்பாளர்களும் தங்களை வளர்த்துக்கொண்டு விசுவாசியாக மாறி வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சசியின் சதியால் தொகுதி மாறி ஆத்தூர் தொகுதியில் போட்டியிட ஜெ. சீட் கொடுத்ததின் மூலம் திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

 

அப்படியிருந்தும் மனம் தளராமல் தொடர்ந்து நத்தம் சட்டமன்ற தொகுதி மக்களின் நல்லது கெட்டதில் கலந்துகொண்டு, கோரிக்கைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்து கொடுத்ததுடன் மட்டுமல்லாமல், தன்னால் முடிந்த பண உதவிகளையும் செய்து கொண்டு தொகுதியில் ஒரு சிட்டிங் எம்எல்ஏ போலவே செயல்பட்டு வருகிறார். அதைக்கண்டு ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் கழக அமைப்பு செயலாளர் பதவியையும் கொடுத்தனர். அதன்பின் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட எடப்பாடி  வலியுறுத்தியும்கூட விஸ்வநாதன் மத்திய அரசியல் வேண்டாம் என்று மாநில அரசியல் போதும், அதுவும் உங்களோடும், துணை முதல்வரிடமும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி எம்.பி. சீட் வேண்டாம் என்றுகூறி தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்தார்.

 

இந்த நிலையில்தான், திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அதில் நான்கு தொகுதிகளை கொண்ட கிழக்கு மாவட்ட செயலாளராக நத்தம் விஸ்வநாதனை ஒபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் நியமித்தை கண்டு தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் நன்றியை மறக்காமல் வந்து வாழ்த்து கூறி, அவர்களிடம் தொடர்ந்து கட்சி பணியாற்றுங்கள் தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறேன் என்று  கூறி இருக்கிறார். அதை கண்டு பொறுப்பில் உள்ள  ர.ர.க்களும் உற்சாகத்துடன் தொகுதிகளில் களம் இறங்கி வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.