Skip to main content

விவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது... ஈ.ஆர். ஈஸ்வரன் எச்சரிக்கை...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
E.R.Eswaran

 

 

டெல்லியை சுற்றி நடக்கின்ற விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைவதற்கு முன் தீர்வு காண வேண்டும். விவசாயிகளுடைய மனநிலையையும், உணர்வுகளையும் மத்திய அரசு புரிந்துகொண்டு அமைதியான முறையில் பிரச்சினைகளை பேசி தீர்க்கவில்லை என்றால் நாட்டில் விவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விவசாயிகள் தங்களுடைய பிரச்சனைகளை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு வகையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 

 

விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுக்களை வாங்கி மத்தியிலே ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 6 ஆண்டுகளாகியும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல புதிய வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை மத்திய அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 6 ஆண்டுகளாக பொறுமை காத்து வந்த விவசாயிகள் மத்திய அரசினுடைய கவனத்தை விவசாயிகள் பக்கம் திருப்புவதற்காக டெல்லி நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 'டெல்லி நோக்கி செல்' என்பதை தாரக மந்திரமாக வைத்து பல தடைகளையும் மீறி டெல்லிக்குள் ஊடுருவிக் கொண்டு இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மூலமாக அதை தீர்ப்பதற்கு பதிலாக அடக்குமுறை மூலமாக முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு மத்திய அரசு களமிறங்கி இருக்கிறது. 

 

ஜனநாயக முறைப்படி விவசாயிகளுடைய போராட்ட கோரிக்கைகளை மத்திய அரசு அணுக வேண்டும். அடக்குமுறை மூலமாக என்றைக்குமே விவசாய போராட்டங்களை அடக்கிவிட முடியாது. ஆனால் தமிழக விவசாயிகள் 100 நாட்கள் போராட்டம் செய்த போதும் சந்திக்க மறுத்தவர்தான் பாரத பிரதமர். 

 

டெல்லி காவல்துறையும், துணை ராணுவமும் போராடும் விவசாயிகளை அடக்குவதற்காக நடத்தி கொண்டிருக்கின்ற சர்வாதிகாரதனத்தை தொலைக்காட்சிகள் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அனைத்து மாநில விவசாய சங்கங்களும் கண்டித்திருக்கிறார்கள். டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதித்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூகமாக தீர்வு காண மத்திய அரசு முன் வர வேண்டும். அதைவிட்டு அடக்குமுறை மூலமாக விவசாயிகளை பயமுறுத்துவது தொடர்ந்தால் போராட்டம் அதி தீவிரமடையும். 

 

இந்தியா முழுவதும் இருக்கின்ற அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லி நோக்கி வந்து போராட்டத்தில் கலந்துகொள்ள தயாராகி கொண்டிருக்கிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

 

விவசாயிகளுடைய மனநிலையையும், உணர்வுகளையும் மத்திய அரசு புரிந்துகொண்டு அமைதியான முறையில் பிரச்சினைகளை பேசி தீர்க்கவில்லை என்றால் நாட்டில் விவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது. விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு துணைபோகும் மாநில அரசுகளும் விவசாயிகளுடைய எதிர்ப்புக்கு ஆளாகி பாதிப்பை சந்திப்பார்கள்'' என எச்சரித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - சுனிதா கெஜ்ரிவாலின் புதிய பிரச்சாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Sunita Kejriwal launched a new campaign 'Blessing Kejriwal'

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ் அப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இதற்காக கெஜ்ரிவாலுக்கு மக்கள் ஆதரவு கூறுவதற்காக வாட்ஸ் ஆப் எண் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “நாங்கள் இன்றில் இருந்து ‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ என்று ஒரு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். இந்த வாட்ஸ் ஆப் எண்ணின் மூலம் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்த்து மற்றும் ஆசிர்வாதங்களை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்” என்று பேசியுள்ளார்.

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.