Skip to main content

விவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது... ஈ.ஆர். ஈஸ்வரன் எச்சரிக்கை...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
E.R.Eswaran

 

 

டெல்லியை சுற்றி நடக்கின்ற விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைவதற்கு முன் தீர்வு காண வேண்டும். விவசாயிகளுடைய மனநிலையையும், உணர்வுகளையும் மத்திய அரசு புரிந்துகொண்டு அமைதியான முறையில் பிரச்சினைகளை பேசி தீர்க்கவில்லை என்றால் நாட்டில் விவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விவசாயிகள் தங்களுடைய பிரச்சனைகளை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு வகையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 

 

விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஓட்டுக்களை வாங்கி மத்தியிலே ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 6 ஆண்டுகளாகியும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல புதிய வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை மத்திய அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 6 ஆண்டுகளாக பொறுமை காத்து வந்த விவசாயிகள் மத்திய அரசினுடைய கவனத்தை விவசாயிகள் பக்கம் திருப்புவதற்காக டெல்லி நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 'டெல்லி நோக்கி செல்' என்பதை தாரக மந்திரமாக வைத்து பல தடைகளையும் மீறி டெல்லிக்குள் ஊடுருவிக் கொண்டு இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மூலமாக அதை தீர்ப்பதற்கு பதிலாக அடக்குமுறை மூலமாக முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு மத்திய அரசு களமிறங்கி இருக்கிறது. 

 

ஜனநாயக முறைப்படி விவசாயிகளுடைய போராட்ட கோரிக்கைகளை மத்திய அரசு அணுக வேண்டும். அடக்குமுறை மூலமாக என்றைக்குமே விவசாய போராட்டங்களை அடக்கிவிட முடியாது. ஆனால் தமிழக விவசாயிகள் 100 நாட்கள் போராட்டம் செய்த போதும் சந்திக்க மறுத்தவர்தான் பாரத பிரதமர். 

 

டெல்லி காவல்துறையும், துணை ராணுவமும் போராடும் விவசாயிகளை அடக்குவதற்காக நடத்தி கொண்டிருக்கின்ற சர்வாதிகாரதனத்தை தொலைக்காட்சிகள் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அனைத்து மாநில விவசாய சங்கங்களும் கண்டித்திருக்கிறார்கள். டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதித்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூகமாக தீர்வு காண மத்திய அரசு முன் வர வேண்டும். அதைவிட்டு அடக்குமுறை மூலமாக விவசாயிகளை பயமுறுத்துவது தொடர்ந்தால் போராட்டம் அதி தீவிரமடையும். 

 

இந்தியா முழுவதும் இருக்கின்ற அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லி நோக்கி வந்து போராட்டத்தில் கலந்துகொள்ள தயாராகி கொண்டிருக்கிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

 

விவசாயிகளுடைய மனநிலையையும், உணர்வுகளையும் மத்திய அரசு புரிந்துகொண்டு அமைதியான முறையில் பிரச்சினைகளை பேசி தீர்க்கவில்லை என்றால் நாட்டில் விவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது. விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு துணைபோகும் மாநில அரசுகளும் விவசாயிகளுடைய எதிர்ப்புக்கு ஆளாகி பாதிப்பை சந்திப்பார்கள்'' என எச்சரித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.