Skip to main content

எவ்வளவு பேர் உயிரிழந்தால் உயிரிழப்பு அதிகம் என்று முதலமைச்சர் ஏற்றுக்கொள்வார்? ஈஸ்வரன் கேள்வி

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
eps

 

கரோனாவால் தமிழகத்தில் உயிரிழப்பு குறைவு என்று முதலமைச்சர் பேசியிருப்பது தமிழக மக்களுக்கு வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஒரு நாளைக்கு தமிழகத்தில் எவ்வளவு பேர் இறந்தால் இது அதிக உயிரிழப்பு என்று முதலமைச்சர் ஏற்றுக் கொள்வார். தமிழக அரசு அதற்கு ஏதாவது இலக்கு வைத்திருக்கிறதா? என கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசு உயிரிழப்புக்களை மெத்தனமாக எடுத்துக்கொள்வது வேதனையளிக்கிறது. கரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் ஒருவர் அல்லது இருவர் இறந்த போது தமிழக முதலமைச்சரும், சில அமைச்சர்களும் தமிழகத்தில் உயிரிழப்பு குறைவுதானே என்று பேசி தாங்கள் திறமையாக செயல்படுகிறோம் என்று சொன்னார்கள். அரசின் கவனக்குறைவால் இப்போது ஒவ்வொரு நாளும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதும் முதலமைச்சர் தமிழகத்தில் உயிரிழப்பு குறைவு என்று பேசியிருப்பது தமிழக மக்களுக்கு வருத்தமளிக்கிறது. ஒரு நாளைக்கு தமிழகத்தில் எவ்வளவு பேர் இறந்தால் இது அதிக உயிரிழப்பு என்று முதலமைச்சர் ஏற்றுக் கொள்வார். தமிழக அரசு அதற்கு ஏதாவது இலக்கு வைத்திருக்கிறதா?. 

ஆரம்பத்தில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று பேசினார். தினசரி 50 பேர் உயிரிழக்கும்போது இது குறைவு என்று மெத்தனமாக இருப்பது கரோனா பரவலின் தீவிரத்தை அரசு புரிந்து கொள்ளாத நிலையையே காட்டுகிறது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் காவல்துறை 13 பேரை சுட்டு கொன்ற போதும்கூட தமிழக அரசினுடைய நிலைப்பாடு இப்படிதான் இருந்தது. 

சாத்தான்குளத்தில் தந்தையையும், மகனையும் ஒரே நாளில் காவல்துறை அடித்து கொன்ற செய்தி அறிந்து தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் போதும்கூட சர்வ சாதாரணமாக அப்பாவுக்கு நெஞ்சு வலி மகனுக்கு மூச்சு திணறல் என்று அறிக்கை விட்டு பொருளாதார உதவிகளை அறிவித்திருக்கிறார்கள். 

கோவை மாவட்டத்தில், சாமளாபுரத்தில் ஒரு காவல்துறை அதிகாரி நடுரோட்டில் போராடிய ஒரு பெண்ணை ஓங்கி கன்னத்தில் அறைந்த போதும்கூட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு பதவி உயர்வை தமிழக அரசு கொடுத்தது. சாத்தான்குளத்தில் அடித்து இரண்டு உயிர்களை கொன்ற குற்றவாளிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தமிழகத்தையே உலுக்கிய மாபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை இப்படி அடிக்கவில்லை. நாகர்கோவிலில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட காசி போன்ற குற்றவாளிகளை காவல்துறை இப்படி அடிக்கவில்லை. ஊரடங்கு காலத்தில் தங்கள் வியாபார கடையை 10 நிமிடம் தாமதமாக மூடினார்கள் என்பதற்காக அப்பாவையும் மகனையும் அடித்து கொன்றிருக்கிறார்கள். இதற்குகூட தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்காமல் உயிரிழந்த குடும்பத்திற்கு உதவி என்ற அறிவிப்போடு கடந்து செல்கிறது என்றால் அரசின் நோக்கத்தை எப்படி புரிந்து கொள்வது. 

தமிழகத்தில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தினசரி கூடிக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டு உயிரிழப்பு அதிகம் என்பதை அரசு ஒப்புக் கொண்டால்தான் அரசு இயந்திரம் தீவிரமாக செயல்படும். அரசினுடைய நடவடிக்கைகளை பார்த்து பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்படைந்து அமைதி இழந்து கொண்டிருக்கிறார்கள். அந்த உஷ்ணத்தை வெகுவிரைவில் தமிழக அரசு புரிந்து கொள்ளும்.  

தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று அறிவித்த முதலமைச்சர் மாவட்டம் மாவட்டமாக தானே ஊரடங்கை மீறி பயணிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 85,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு வரும் என்று அறிவிக்கின்ற முதலமைச்சர் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கான திட்ட ஒப்பந்தங்களை முடிவு செய்வதன் அவசியம் என்ன? 

சாலை திட்டங்களும் கட்டிட திட்டங்களும் நிதி இல்லாத நேரத்தில் செயல்படுத்த முயல்வது அவசியமா, அதற்கு தேவையான வருமானத்திற்காக தான் உயிரிழப்பு அதிகமாகும் என்று தெரிந்திருந்தும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதா?.'' இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.

\

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.