Skip to main content

தமிழக பா.ஜ.க. கட்சி அரசியலுக்காக வரவேற்கக் கூடாது..." -கொ.ம.தே.க. ஈஸ்வரன்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

E.R.Eswaran

 

 

"ஓ.பி.சி. இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் உயர்நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என்பதை இங்கு தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர் உறுதிப்படுத்த வேண்டும்." என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழக பா.ஜ.க.வுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் அவர்கள் மத்திய அரசு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப் படி 3 மாத காலத்தில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் முடிவெடுத்து மத்திய அரசு அறிவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க இங்குள்ள தமிழக பா.ஜ.க. அழுத்தம் கொடுக்க வேண்டும். 

 

தமிழக பா.ஜ.க. தலைவர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மட்டும் வரவேற்றால் போதாது. அதை மத்திய அரசு நடைமுறைப்படுத்த குரல் எழுப்ப வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் தமிழகம் வென்றிருக்கிறது. ஓ.பி.சி. பிரிவினருக்கு மாநில அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டின் படி மத்திய அரசும் வழங்கிட முன்வர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் கடந்த 4 ஆண்டுகாலமாக ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்காமல் மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது. இதனால் ஓ.பி.சி. பிரிவினருக்கான உரிமை பறிபோய் இருக்கிறது. நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்திற்கு பிறகு ஓ.பி.சி. பிரிவினருக்கான உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. 

 

மத்திய அரசு நீதிமன்றத்தைக் காரணம் காட்டிதான் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியது. ஆனால் இப்போது நீதிமன்றமே இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனத்தைக் கலைத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனே ஓ.பி.சி. பிரிவினருக்கான  இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக பா.ஜ.க. எடுத்துள்ள நிலைப்பாடு அரசியலுக்காக எடுத்தாக இருந்து விடக்கூடாது. ஓ.பி.சி. பிரிவினருக்கான உரிமையை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசிடம் இருந்து தமிழக பா.ஜ.க. பெற்றுத் தந்திட வேண்டும். அதேபோல இவ்வழக்கில் மத்திய அரசு மேல்முறையீட்டிற்கு போகாது என்ற உறுதியையும் தமிழக பா.ஜ.க. தலைவர் அளிக்க வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.