Skip to main content

விவசாயிகளுடைய அனைத்து விதமான கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கொமதேக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

E.R.Eswaran


ஊரடங்கு சமயத்தில் மக்களுக்கு உணவளித்த விவசாயிகளுடைய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கொமதேக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்களோடு காணொலி காட்சி மூலம் கலந்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவர்கள் செவிலியர்களைப் போல மற்றும் காவல்துறை அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்களைப் போல விவசாயிகளும் கரோனா பாதிப்பைப் பொருட்படுத்தாமல் விவசாய விளைபொருட்களை அறுவடை செய்து காய்கறி சந்தைகளுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். 
 

ஊரடங்கு நேரத்தில் அனைத்து மக்களுக்கும் தடையில்லாமல் அத்தியாவசியப் பொருட்களை கிடைக்க செய்ததில் விவசாயிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதிக்கின்றது. ஆனால் விவசாயிகள் அந்தப் பொருட்களைச் சந்தைக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது கரோனா பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படும் என்பதை அரசு யோசிக்க மறந்து இருக்கிறது. 
 

விவசாயிகள் ஊரடங்கு நேரத்தில் உற்பத்தி செய்யலாம், பொருட்களைச் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம் என்று அறிவித்திருப்பது விவசாயிகள் நலன் கருதியா? அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுவார்கள் என்ற எண்ணம் கொண்டா? விவசாயிகளும் கரோனாவுக்குப் பயந்து வீடுகளிலேயே தங்களை முடக்கி கொண்டிருந்தால் பல லட்சக்கணக்கான பேர் பசியாலும் பட்டினியாலும் உயிர் இழந்திருப்பார்கள். 
 

கரோனா தனக்குப் பாதித்தாலும் பரவாயில்லை என்று அனைத்து மக்களுக்கும் உணவளித்த விவசாயிகளுடைய தியாகத்தை அரசுகள் எண்ணிப் பார்ப்பதில்லை. நாடு முழுவதும் மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி செலுத்த உத்தரவிட்ட பாரத பிரதமர் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப் பாராட்டத் தவிர்த்தது ஏன்? பேச்சுக்குப் பேச்சு மருத்துவர்களுடைய தியாகத்தைக் குறிப்பிட்டு பேசுகின்ற தமிழக முதலமைச்சர் விவசாயிகளுடைய தியாகத்தைக் குறிப்பிடாதது ஏன்?

 

அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல தடைகளையும் அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாமல் ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் அனைவரும் கரோனாவை எதிர்த்து போராடுகின்ற வேள்வியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறார்கள். விவசாய தியாகிகளுக்கு அரசு தெரிவிக்கின்ற நன்றி என்பது அவர்கள் பயன் பெற கூடியதாக இருக்க வேண்டும். 
 

வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் தானும் தன் குடும்பமும் என்ன ஆவோம் என்று தத்தளித்துக் கொண்டிருக்கின்ற விவசாயிகளுக்கு வாங்கிய கடனிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும். விவசாயிகள் வாங்கி இருக்கின்ற அனைத்து விதமான கடனையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். 
 

http://onelink.to/nknapp

 

தேர்தல் நேரத்தில் தேர்தல் வெற்றிக்காக விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று அறிவிக்கிறவர்கள் இந்த நேரத்தில் கரோனா போரில் முன்னணியில் நின்று மக்களைக் காப்பாற்றி கொண்டிருக்கின்ற விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்யக்கூடாதா? விவசாயிகள் வாங்கி இருக்கின்ற அனைத்து விதமான கடனையும் தமிழக அரசு தள்ளுபடி செய்து நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

கொ.ம.தே.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு! - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
DMK Allotment of a constituency to kmdk in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி ம.தி.மு.க., இ.யூ.மு.லீ., கொ.ம.தே.க. ஆகிய 3 கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (24.02.2024) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த முறை கொ.ம.தே.க. போட்டியிட்ட நாமக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த முறை நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது போன்றே இந்த தேர்தலிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.