Skip to main content

தினகரன் கட்சியின் முக்கிய புள்ளிக்கு தூது அனுப்பிய எடப்பாடி... கடும் கோபத்தில் இருக்கும் எடப்பாடி!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

அ.ம.மு.க.வில் இருந்து பலரும் அ.தி.மு.க.வில் இணைந்துகொண்டிருக்கும் நிலையில்... "அக்கட்சியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வந்தால் மட்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்' என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. "பல்வேறு கட்சிகளுக்கு பழனியப்பன் தூது அனுப்பிக்கொண்டிருப்பதால்தான், அவரை எடப்பாடி வெறுக்கிறார்' என்கிறார்கள். அதேநேரத்தில் எதிர் தரப்பினரோ, "அனுப்பிய தூதுவர்களை எல்லாம் பழனியப்பன் துரத்திவிட்டதால்தான் அவர் மீது எடப்பாடி வெறுப்பை காட்டுகிறார்' என்கிறார்கள்.

 

admk



அ.ம.மு.க.வுக்கு சென்றுவிட்ட பழனியப்பன், ஆர்.ஆர்.முருகன் ஆகிய இருவரையும் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக எடப்பாடி முயற்சி எடுத்துள்ளார். பாண்டிச்சேரியில் 18 எம்.எல்.ஏக்கள் இருந்தபோது பாப்பிரெட்டிப்பட்டி வரலட்சுமி கிழங்கு மில் உரிமையாளர் அன்பழகன் மூலமாக எடப்பாடி தூது அனுப்பியிருக்கிறார். பல மில்களின் ஓனரான இந்த அன்பழகன் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்துவருவதாகச் சொல்கிறார்கள்.
 

admk



பழனியப்பன், அண்ணா தொழிற்சங்க சிறப்புத் தலைவராக இருந்தபோது வரலட்சுமி கிழங்கு மில்லில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு போதிய ஊதிய உயர்வு கொடுக்காமல் இருந்திருக்கிறார் அன்பழகன். இந்த விவகாரம் பழனியப்பனிடம் சென்றபோது, அவர் இது தொடர்பாக அன்பழகனை அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லை என்றாகிவிட்டது. இப்படி முன்விரோதம் இருந்த நிலையில்தான், எடப்பாடி சொன்னதற்காக தூது சென்றிருக்கிறார் அன்பழகன். பகைமை மறந்து பாண்டியில் கைகுலுக்கிய அன்பழகன், ""நான் இப்போது கட்சி விசயமாக பேச வந்திருக்கிறேன். நீங்களும் முருகனும் அ.தி.மு.க.வுக்கு வந்தால்போதும். நீங்கள் கேட்பது நிச்சயம் கிடைக்கும்''’என்று சொல்ல, அந்த டீலிங்கை மறுத்துள்ளார் பழனியப்பன். அடுத்தகட்டமாக சேலம் மேற்கு எம்.எல்.ஏ.வான வெங்கடாச்சலம் மூலமாக தூது அனுப்பியுள்ளார் எடப்பாடி. அப்போதும் பழனியப்பன் செவி சாய்க்காத நிலையில்தான், பழனியப்பனை மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார் எடப்பாடி.

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது நிறுவனங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாமக்கல் மோகனூர் ஆசிரியர் குடியிருப்பில் வசித்துவந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு காண்ட்ராக்டருமான சுப்பிரமணியம் என்பவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.


இந்த சோதனை நடந்த சில நாட்களில் சுப்பிரமணியன் தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது, விசாரணையில் பழனியப்பன் பெயரையும் இணைத்து மிரட்டியுள்ளார். அதிலும் பழனியப்பன் பணிந்து வராததால்தான், அவர் மீதான ஆத்திரத்தில், பல்வேறு கட்சிகளுக்கு தூது அனுப்பும் அவர் அ.தி.மு.க.வுக்கு வந்தால் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி'' என்கிறார்கள்.

இதுதொடர்பாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பழனியப்பனிடம் நாம் பேசிய போது,

"நான் எந்தக் கட்சிக்கும் தூது அனுப்பவில்லை. முதல்வர்தான் எனக்கு தூது அனுப்பினார். அதற்கான விசயத்தை நான் வெளிப்படையாக சொல்கிறேன். அன்பழகன் மட்டுமல்ல, இன்னும் யார், யார் மூலமாக எனக்கு தூது அனுப்பினார் என்றும் என்னால் சொல்ல முடியும். அதேபோல அவரால் சொல்ல முடியுமா? நான் அவருக்குத் தேவை. அதனால், இழுத்துப் பார்த்தார் முடியவில்லை, அதனால் ஏதேதோ அவிழ்த்துவிடுகிறார்''’என்கிறார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.