Skip to main content

“என் சிந்தனையில் தோன்றிய திட்டம்; 564 பேர் பயன்பெற்றுள்ளனர்” - எடப்பாடி பழனிசாமி

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

Edappadi Palaniswami said that 7.5% internal allocation came to my mind

 

சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த சிறுவாச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

 

இவ்விழாவில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஆட்சியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளைப் புறக்கணித்து வருகின்றனர். விவசாயிகள் கிராமங்களில் தான் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். கிராமம் செழிக்க வேண்டும். வளர வேண்டும் என்பதற்கு எந்த திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை. ஆனால் அதிமுக குடிமராமத்து திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான சிறப்பான திட்டத்தை செயல்படுத்திய அரசு அதிமுக அரசு. விவசாயிகளை பாதுகாக்காத அரசு திமுக அரசு. நான் அறிக்கை வெளியிட்டு விவசாயிகளும் போராட்டம் செய்த பின்புதான் இந்தாண்டு பொங்கலுக்கு திமுக அரசு முழுக் கரும்பு கொடுத்தது.

 

திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள் என்ன நன்மையை பெற்றார்கள். விளம்பரம்தான் மிச்சம். விளம்பரத்திற்கு நூற்றுக்கணக்கான கோடியை செலவழித்துக் கொண்டுள்ளனர். கிராமத்தில் ஏழை எளியோர் அதிகமாக இருக்கின்றனர். விவசாயிகள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்துக்கொண்டு உள்ளனர். அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் மருத்துவர்கள் ஆகவேண்டும். ஆனால் நீட் தேர்வுகளில் நம் மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு அதிகமான மதிப்பெண்களை பெற முடியாத காரணத்தினால் நான் எண்ணிப் பார்த்தேன்.

 

கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் 7.5% உள் ஒதுக்கீட்டினை செயல்படுத்தினோம். இதை எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை; மக்கள் கோரிக்கை வைக்கவில்லை; என் மனதில் தோன்றியது. சிந்தனையில் தோன்றியது. அதன் மூலம் இந்த வருடத்தில் 564 பேர் மருத்துவம் பயிலுகின்றனர்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.