Skip to main content

“சசிகலா அ.தி.மு.க.வில் இணைய 100% வாய்ப்பே இல்லை..” - முதல்வர் பழனிசாமி அதிரடி

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

Edappadi palanisamy press meet after met PM Modi
                                                             கோப்புப் படம் 


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக நேற்று (18/01/2021) காலை 11.55 மணிக்கு டெல்லி புறப்பட்டார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (19 ஜன.) காலை பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.  

 

மோடியை சந்தித்தப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்துவைக்க அழைப்பு விடுத்தேன். அதேபோல் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அவரும் அதனை ஏற்றுகொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கோதாவரி காவிரி இணைப்புத் திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். 

 

தமிழகத்தில் தென்மாவட்டங்கள் அதிகம் பயன் பெறும் காவிரி குண்டாறு திட்டம் மற்றும் காவிரி ஆற்றை தூய்மை செய்யும் திட்டம் ஆகிய இரண்டிற்கும் மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் ஜனவரி மாதம் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை கிலோவுக்கு 99.60 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். தமிழ்நாட்டின் பல முக்கிய திட்டங்களுக்குப் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாரம் பெறுவதற்குத் தகுந்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மருந்துகள் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கருவிகள் பூங்கா அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். ஏற்கனவே மத்திய அரசு, சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஓசூர் ஆகிய இடங்களில் ராணுவத் தளவாடங்களை அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதனை விரைந்து செயல்படுத்துமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளேன்.    

 

எனது கோரிக்கையை ஏற்று இலங்கை சிறையில் இருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 12 மீனவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுவிக்கக் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். மீன்வள உள்கட்டமைப்பு நிதியில் மீன்பிடி துறைமுகங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அரசுக்கு கருத்துரு தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளேன். மேலும் துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன். இவற்றை எல்லாம் பிரதமர் மோடி பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

 

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கூட்டணி குறித்தும் அரசியல் ரீதியாகவும் ஏதும் ஆலோசித்தார்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “நான் வந்தது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டு மக்கள் வைத்த நீண்டகால கோரிக்கைகளுக்காகவும். அரசியல் எதுவும் பேசவும் இல்லை, அது பேச உகந்த நேரம் இதுவுமில்லை” எனத் தெரிவித்தார். 

 

சசிகலா வெளியே வந்தால் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “100 சதவீதம் வாய்ப்பே இல்லை, அவர் அ.தி.மு.க. கட்சியிலேயே இல்லை. அவருடன் இருந்த பல பேர், அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். சிலர் மட்டும்தான் அவருடன் இருக்கிறார்கள். ஜெயலலிதாவே அவரை பல ஆண்டுகளாக நீக்கி வைத்திருந்தார். ஜெயலலிதா இறந்த பிறகுதான் அவருக்குப் பதவியே வழங்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது அவர் கட்சியிலேயே கிடையாது” என்று தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.