Skip to main content

நெருங்கிய விஜிலன்ஸ்... நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி..! பரபரப்பு பின்னணி! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

Close vigilance .. Edappadi Palanisamy in crisis!

 

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சக்தி வாய்ந்த முகமாகத் திகழ்ந்த மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் விஜிலன்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். 

 

சென்னையில் உள்ள இளங்கோவனுக்கு நெருக்கமான நண்பர்கள் வீடுகளிலும் விஜிலன்ஸ் சோதனை நடத்தியிருக்கிறது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இளங்கோவன் 25 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குச்சந்தைகளிலும், 45 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டுப் பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். 5.50 லட்சம் ரூபாய்க்கு அந்நிய செலாவணி வர்த்தகம் நடந்திருப்பதாகவும் சொல்கிறது விஜிலன்ஸ். சரியான சோர்ஸ் காட்டாத பட்சத்தில் இளங்கோவன் மீது ஃபெமா சட்டத்தின் கீழும் வழக்குப் பாயக்கூடும் என்கிறார்கள்.

 

இளங்கோவன் குறித்து பேசிய சில ர.ர.க்கள், ''ஆத்தூர் இளங்கோவன் சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாயார், வேகவைத்த பலாக்கொட்டை வியாபாரம் செய்தார். இளங்கோவனை சித்தப்பாதான் வளர்த்துள்ளார். பூர்வீக சொத்து என்பது 1.50 ஏக்கர் தரிசு நிலம். பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில்தான் படித்தார். சேலத்தில் பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இளங்கோவனின் மாமா கருப்பையா நடத்திவந்த டீக்கடையில் வேலை செய்தார். டீக்கடையும் இந்திய அரசியலும் சென்ட்டிமெண்ட்டானவை.

 

எம்ஜிஆர் ஆட்சியின்போது, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த அன்பரசு என்பவருக்கு உதவியாளரானபோது, அரசியல் தொடர்பு ஏற்பட்டது. உள்ளூரில் சில அரசு ஒப்பந்தப் பணிகளை இளங்கோவன் பெயரில் எடுத்து செய்துவந்தார் அன்பரசு. பின்னர், மா.செ.வான டி.எம். செல்வகணபதி மூலம், 2011 உள்ளாட்சித் தேர்தலில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்யாண கிரி வார்டில் எப்படியோ சீட் வாங்கி, செல்வகணபதியை வரவைத்து வாக்குறுதியுடன் பிரச்சாரம் செய்யச் செய்து, வெற்றியும் பெற்றார் இளங்கோவன். பின்னர் மா.செ.வான மஞ்சினி முருகேசனிடம் ஒட்டிக்கொண்டு, அவருக்குத் தேவையானதை நிறைவேற்றினார். மஞ்சினியிடம் எல்லா வகையிலும் திறமையான ஆள் ஒருவர் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவர, இளங்கோவனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தேவையானவற்றை நிறைவேற்றித் தந்தார் இளங்கோவன். எடப்பாடி பழனிசாமி மூலமாக செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன், ராவணன் எனத் தொடர்பு ஏற்பட்டு, ஜெ. வரை அறிமுகம் கிடைத்தது. 2013இல் இளங்கோவனுக்கு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவியையும் வாங்கிக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை 'பெரியவர்' என்றும், இளங்கோவனை 'சின்னவர்' என்றும் சொல்லும் அளவுக்கு செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

 

அதிமுகவில் இருக்கும் 'சித்தப்பு' நடிகர் ஒருவருக்கும் இளங்கோவனுக்கும் நல்ல நெருக்கம் உண்டு. அதன் மூலம் பெரிய மனிதர்களின் பசிக்கான தேவைகளும் நிறைவேற்றப்பட்டன. 2016 தேர்தலில், பறக்கும் படையினரே யூகிக்க முடியாத வகையில் கூட்டுறவு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்து, அங்கிருந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து எடப்பாடி பழனிசாமியை அசத்தினார் இளங்கோவன். 2017இல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் இளங்கோவனின் அதிகாரம் பெரிய அளவில் கொடிகட்டி பறந்தது.

 

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நேரத்தில், இளங்கோவன் தன்னிடம் 'லிக்விட்' ஆக இருந்த பணத்தை எல்லாம் ஆத்தூரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மூலமாக சிலருக்கு மருத்துவமனைகள் கட்டுவதற்கும், சில பைனான்ஸ் அதிபர்களுக்கும், நகைக்கடை உரிமையாளர்களுக்கும் முதலீடாக கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்போது விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கியுள்ள இளங்கோவனின் வலதுகரமான குபாய் என்கிற குபேந்திரனும்கூட பண மதிப்பிழப்பு காலத்தில்தான் பெரிய அளவில் நகைக்கடைகளை விரிவாக்கம் செய்திருக்கிறார். உஷாராக முன்கூட்டியே ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும், ரெய்டில் விடுபட்டவர்களையும் தோண்டித் துருவும்போது, எடப்பாடி பழனிசாமிவரை சிக்கல் நீளும்" என்கிறார்கள் இளங்கோவனை அறிந்தவர்கள். தனக்கு மிகவும் நெருக்கமான இளங்கோவன் வரைக்கும் விஜிலன்ஸ் ரெய்டு நடந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி ஒருவித அச்சத்தில் இருக்கிறார் என்கின்றனர் அவரது வட்டாரத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழப்பத்தில் சிக்கிய அதிமுக தேர்தல் அறிக்கை!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 AIADMK election report in confusion

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. திமுக இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை கொடுத்திருந்த நிலையில் அதிமுக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தது.

அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒருவரை பிரதமராக முன்னிறுத்தும் பட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மோடியையே மீண்டும் பிரதமர் முகமாக கொண்டு வர இருக்கிறது. இந்தநிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வலியுறுத்தி பெற்றுத் தருவோம் மற்றும் சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவோம் உள்ளிட்ட வாக்குறுதிகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு பின் பாஜகவை அதிமுக ஆதரிக்குமா அல்லது இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் உருவாகும் மத்திய அரசிடம் வலியுறுத்துமா? என அரசியல் வியூகர்களாலும், சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Next Story

'ஒரு இடத்தில்கூட எடப்பாடி வெற்றி பெற முடியாது'- ஓபிஎஸ் பேட்டி

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
'Edappadi cannot win even in one place' - OPS interview

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வேடசந்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளருமான சுப்பிரமணி முன்னிலை வைத்தார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் பேசுகையில், 'நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழு எந்த குழுவாக இருந்தாலும் அந்த குழு டம்மி குழு. அவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.  இந்தியா கூட்டணி  ஆண்டிகளின் மடம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடந்த பத்தாண்டு காலம் இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் .

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய நாட்டை யார் ஆள வேண்டும் முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை.  இந்த தேர்தலில் பத்தாண்டு காலமாக சிறப்பாக ஆட்சி செய்த பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல கருத்து இந்தியா முழுவதும் வலுப் பெற்று இருக்கிறது ஆகவே பாஜக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி இந்தியாவை ஆள முடியாது. ஒருங்கிணைக்க கூடிய சக்தி அவர்களிடம் இல்லை. அது நிரூபிக்கப்பட்டுள்ளது. . எங்களுடன் யார் கூட்டணி என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கூட்டணியின் தலைமை  பாஜக தான் அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். இன்னும் நிறைய கட்சிகள் அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளது'' என்றார்.