கரோனா நிவாரணத்துக்கான செலவினங்களை யோசித்து, எம்.பி.க்களின் சம்பளத்தை 30% குறைப்பதோடு, அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை, இரண்டு வருடத்துக்கு நிறுத்தப் போவதாகவும் மத்திய அரசு அதிரடியாக கூறியது.
அதோடு, எம்.பி.க்களின் சம்பளக் குறைப்பு, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்த வேண்டும் என்று அதிரடி காட்டும் பாஜக அரசு, தங்கள் தரப்பின் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த முன் வருமா என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசி வருகின்றனர். அதேபோல், கம்யூனிஸ்ட் தரப்பினர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்குத் தனி விமானங்களை ஏற்பாடு செய்வதால், பலகோடி செலவாகுது என்று சுட்டிக்காட்டினர். அதனால் வி.வி.ஐ.பி.க்களின் தனி விமானப் பயணங்களை நிறுத்தும் முடிவுக்கு வந்திருக்கும் பாஜக அரசு, மத்திய அமைச்சர்களும், மூணு மாதங்களுக்கு வெளி மாநில பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும் கரோனாவுக்காக கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் பாதிப்பால், இந்தியத் தொழில் நிறுவனங்கள், இதுவரை ஏறத்தாழ 8 லட்சம் கோடிவரை இழப்பைச் சந்தித்துள்ளது. அதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்துவிடும் என்று பொருளாதார நிபுணர்கள், மத்திய நிதி அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதனால் அதற்கு மாற்று வழி என்ன என்பது பற்றி நிபுணர்களுடனும், நிதித்துறை அதிகாரிகளுடனும் வீடியோ கான்ஃப்ரன்ஸில் விவாதிக்க, பிரதமர் மோடியிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி கேட்டிருகிறார் என்று கூறுகின்றனர்.