Skip to main content

35 அமைச்சர்களுக்குப் பதில்  12 பேர் போதுமே! கி.வீரமணி 

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
K. Veeramani



கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதில் கவனம் செலுத்துவதுதான் தமிழ்நாடு அரசின் முக்கிய கடமையாகும்; அமைச்சர்களின் எண்ணிக்கை, துறைகளின் எண்ணிக்கையை குறைத்திடுக; தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிப்பதில் முக்கிய கவனம் தேவை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.  
 

அறிக்கை வருமாறு:
 

பொருளாதார வறட்சி என்ற பேரபாயம்!
 

கரோனாவின் பாதிப்பு மக்களுக்குத் தொற்று, நோய்க் கொடுமை, பலியாவது போன்ற கொடுமைகள் ஒருபுறம்; ஆனால், அதன் தவிர்க்க இயலாத விளைவுகள், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு உள்பட பல்துறைகளையும் அதல பாதாளத்தில் பொருளாதார வறட்சி என்ற (Depression) நிலைக்குத் தள்ளும் பேர பாயம் மறுபுறம் உள்ளது.
 

மத்திய - மாநில அரசுகள் இதனை எப்படி எதிர்கொண்டு நிதி நிலைமையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், சுகாதாரத்தையும் சீரடையச் செய்யப் போகின்றன என்பது நாட்டோர் முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்!
 

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் எப்படி யார், யாருக்குப் பயனளிக்கும் என்று நிபுணர்களும், தலைவர்களும், அரசியல் பொருளியல் அரங்கில் உள்ள மேதைகளும் ஆராய்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.
 

அறிவித்துள்ள தொகைகள் எங்கிருந்து, எப்படிப்பட்ட நிதி ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் (Financial Sources) என்பது விளக்கப்படவில்லையே என்பது ஒரு விவேகமுள்ள கேள்வியாகும்!
 

தமிழக அரசின் கவனத்திற்கு....
 

மத்திய - மாநில அரசுகளின் வருமான நிதி வரவுகள் சுருங்கிவிடும் நிலையில், அதிலும் மாநில அரசின் நிலையோ பெரும் வருவாய் இழப்பை சமாளிக்கக் கூடிய மிக மிக இக்கட்டான நிலையில் உள்ளதால், ஏற்கெனவே பெரிய பதவிகளை வகித்து, பல இக்கட்டான நெருக்கடிகளில் முந்தைய அரசுகளுக்கு உதவிய ஓய்வு பெற்ற நிர்வாகப் பெருமக்களின் கருத்துகளை கேட்டுத் திரட்டியுள்ளவற்றை நாம் தமிழக அரசின் கவனத்துக்கும், செயலாக்கத் திற்கும், பரிசீலனைக்கும் வைக்க விரும்பு கிறோம்.
 

நிதி ஆதாரங்களைப் பற்றி ஆராய்ந்து, பரிந்துரைகளைத் தர மேனாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட ஒரு குழுவைத் தமிழக அரசு போட்டு, அவர்கள் தங்களது பணியையும் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு ஆராய்ந்து செயல்பட இந்தக் கருத்துரைகள் பெரிதும் பயன்படக்கூடும்.
 

மத்திய அரசுடன் போராடியாவது  விலக்குப் பெற முயற்சிக்கவேண்டும்
 

‘ஹெல்த் கேர்’ என்ற மக்கள் நல்வாழ்வுப் பிரிவை மேலும் விரிவாக்கிட - அதன் அடிக்கட்டுமானமாகிய மருத்துவர்கள் எண்ணிக்கை, செவிலியர்கள், லேப்டெக்னீஷியன்கள் உள்ளிட்டோரை அதிகப்படுத்தி, வசதிகளைப் பெருக்கி பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு நிதிப் பெருக்கத்தை அளிக்க நாம் ஆவன செய்ய வேண்டும்.


செவிலியர்கள் கல்லூரி, மருத்துவக் கல்லூரி இடங்களில், நீட் தேர்வு போன்ற முறைகளைத் தவிர்த்து, நுழைவுத் தேர்வுகள், மாணவர் சேர்ப்பு ஆகியவற்றை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கு விடு வதன்மூலம் - கரோனா போன்ற தொற்றுகள் - பொது நோய்கள் தடுப்புக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் அடிக்கட்டுமானம் வலுப்பெறவும் செய்ய முடியும். மத்திய அரசுடன் போராடியாவது விலக்குப் பெற முயற்சிக்கவேண்டும்.
 

மருத்துவப் பல்கலைக் கழகங்கள், மற்ற பல்கலைக் கழகங்களில், மருந்தியல் துறைகளில் ஆராய்ச்சி பெருக, ஊக்கப்படுத்த - பல்வேறு தகுதியுள்ள பல்கலைக் கழகங்களுக்கு உதவி, செயல் ஊக்கம் தர, முடிவை எதிர்நோக்கிய (Result Oriented) திட்டம் தீட்டவேண்டும்.
 

கரோனா ஊரடங்கால் தொழிற்கூடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மாற்றும் வகையிலும், போதிய உதவிகளை அதன் தொழிலாளர்களுக்குப் பயன்படும் வகையிலும் மாநில அரசு தரவேண்டும்.
 

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்குப் பதில், இங்குள்ள வேலை வாய்ப்பைத் தேடி அலையும் இளைஞர்களை, அனைத்து வேலைகளுக்கும் பயிற்சி அளித்து ஒரு தெளிவான Labour force  உருவாக்கிடத் திட்டமிட்டு, உடனடியாக உரிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அப்பணிகளைத் தொடங்கவேண்டும்.
 

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடத் திட்டமிடுதல் அவசர அவசியம்!
 

அரசுப் பணிகள் - கட்டுமானப் பணிகள் - சாலைகள் செப்பனிடுதல் - சீரமைத்தல் போன்ற பணிகளில் தொடங்கி, கணினி தொழில்நுட்பப் பணிகளுக்குப் பயிற்சி அளித்து பல துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடத் திட்டமிடுதல் அவசர அவசியமாகும்!
 

வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் எந்தத் தொழில்நிறுவனமும் அவர்களது தங்கும் வசதி உள்பட பலவற்றை கண்காணிக்கும் வகையில் சட்டத் திருத்தம்தான் தேவை.

 

nakkheeran app

 

35 அமைச்சர்களுக்குப் பதில்  12 பேர் போதுமே!
 

எல்லாவற்றையும்விட முக்கியம் ‘சிக்கனக் கோடரி’ என்ற ஒரு சொற்றொடர் முக்கியம்  (Austerity measures)
 

1. முதலில் அது அமைச்சரவையிலிருந்து தொடங்கவேண்டும். 35 அமைச்சர்களுக்குப் பதில் 12 பேர் போதுமே!
 

இதனால் பல வகையில் நிதிச் செலவு பலவும்கூட (பி.ஏ.,க்கள், காவலர்கள், வீடுகள்) குறையும் வாய்ப்பு ஏற்படும்.
 

அரசு அதிகாரிகள் இனிவரும் காலங்களில் பயணங்களை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் தேவை. மேல் வகுப்புகள் தருவதைக் குறைக்கலாம்.
 

தேவையற்ற பல கமிஷன்கள் போட்டு, வேலை செய்யாமலே பல மாதங்களுக்கான சம்பளம் பெறுவது போன்று, மக்களின் வரிப் பணம் வீணாகும் நிலை இப்போது!
 

பலப்பல கமிஷன்கள் -  புதிய நியமனங்கள் தேவையில்லை!
 

உதாரணத்திற்கு ஜெயலலிதா அவர்களது மரணம்பற்றி ஆராயும் கமிஷனால் என்ன பயன்? இப்போது அது செயல்படாத நிலையில், அதனை முடித்து வைக்கலாம். (Wind up all the Unnecessary Commissions) அதுபோல, பலப்பல கமிஷன்கள் உள்ளன. இனி புதிய நியமனங்கள் தேவையில்லை.
 

அரசு இலாக்காகளைக் குறைப்பதுபற்றியும் ஒரு சீர்மை ஏற்படுத்த, ஒரு சிறு குழு அமைத்து உடனடியாக அதன் பரிந்துரை களுடன்,  தேவையற்று பெருகிய துறைகளைக் குறைத்து, அதில் பணிபுரிகிறவர்களை மற்ற பணிகளுக்குப் பயன்படுத்தி - வெளியே அனுப்பாமல் செய்யலாமே!
 

கரோனா காலத்தின் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணும் வகையில், எப்படி திருமணங்களுக்கு 20, 30 பேருக்குமேல் கூட வேண்டாம் என்று கட்டுப்படுத்துகிறீர்களோ, அதுபோல், தேவையற்ற அரசு நிகழ்வுகளை நடத்தாமல், குறிப்பிட்ட துறைகள், குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்குரிய Monitoring Cell  என்ற கண்காணிப்புக் குழுக்களை - ஏற்கெனவே உள்ள அதிகாரிகளையே பொறுப்பாளர்களாக்கி செய்யலாம்.
 

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை (குறள் 478).
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.