Skip to main content

“ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தைத்தான் தன்னுடைய சொற்களில் மருத்துவர் இராமதாஸ் கூறுகிறார்..” - கி. வெங்கட்ராமன் கண்டனம்

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

"Dr. Ramadass says in his own words the opinion of the Aryan RSS." Venkatraman condemned

 

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் இந்தக் கருத்து முற்றிலும் தமிழினத்திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! 

 

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் கோரிக்கையாக இருந்துவந்தது. அண்ணல் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக் கோரிக்கையாகவும் அது அப்போது இருந்தது. இதற்கு முன்னோட்டமாகத்தான், சென்னை மாகாணமாக இருந்த காலத்திலேயே 1920களில் காங்கிரஸ் கமிட்டி, மொழிவழி தேசிய இன அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று சீரமைக்கப்பட்டது. 

 

‘மாநிலம்’ என்பது வெறும் நிர்வாக அலகு (Administrative Unit) அல்ல – ஆட்சிப் பகுதி (Teritory) அல்ல என்பதை அப்போதே காந்தியடிகள் தெளிவுபடுத்தினார். மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்படும் என்று இரண்டாம் உலகப்போர் காலத்திலேயே காங்கிரஸ் தலைமை உறுதி கூறியது. ஆயினும், சுதந்திரத்திற்குப் பின்னால் அந்த வாக்குறுதியை மீறியதால், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்டு பல்வேறு தேசிய இனப் பகுதிகளில் கடும் போராட்டங்கள் எழுந்தன. அவற்றின் விளைவாக மாநிலச் சீரமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. 

 

இந்த மாநில சீரமைப்புக் குழு, மாநிலத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கோட்பாடு வளப் பகிர்வா, வளர்ச்சிப் பகிர்வா, மொழிவழி தேசிய இனத் தாயக ஏற்பா என்பது குறித்தெல்லாம் விவாதித்து, மொழிவழி தேசிய இனத் தாயகம் என்பதுதான் மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு அடிப்படைக் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதனடிப்படையில் மாநிலங்களை உருவாக்கப் பரிந்துரைத்தது. அதனடிப்படையிலேயே 1956 நவம்பர் 1 அன்று மொழிவழி தேசிய இன மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டது; பல்வேறு மாநிலங்களும் உருவாக்கப்பட்டன. 

 

அன்றைக்கே கூட ஆர்.எஸ்.எஸ்.சும், அன்றைய இந்து மகா சபையும் மொழிவழி மாநிலங்கள் கூடாது, இந்தியா முழுவதையும் ‘ஜன்பத்’ என்ற பெயரால் பல்வேறு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியது. ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தைத்தான் தன்னுடைய சொற்களில் மருத்துவர் இராமதாஸ் கூறுகிறார். 

 

அவ்வாறு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தீர்க்கப்படாத மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்த பல்வேறு மொழிவழி தேசிய இனங்களும், இனக்குழு மக்களும் தங்களுடைய தாயகம் தனி மாநிலமாக ஏற்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். தமிழ்நாட்டை மூன்றாகக் கூறுபோடலாம் என்ற தனது கோரிக்கைக்கு ஆதரவாக மருத்துவர் இராமதாஸ் முன்வைப்பதெல்லாம் இவ்வாறான மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் இனக்குழு மக்களின் கோரிக்கைகள்தான்! 

 

எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசத்தில் ஆவத்பிரதேசம், புந்தல்கண்ட் போன்ற கோரிக்கைகள் இருப்பதைக் குறிப்பிடுகிறார். அவத்தி மொழி, அந்த மொழி பயிலும் மக்களின் தாயகம் ஆகியவை தனித்தன்மையானவை. அந்த அவத்தி மொழியை இந்தி மொழி என்று கபளீகரம் செய்து, உத்திரப்பிரதேசத்தில் இணைத்தபோது அவத்தி மொழி பேசும் சற்றொப்ப நான்கரை கோடி மக்கள் தங்களுடைய மொழித் தாயகம் ‘ஆவத்பிரதேசம்’ எனத் தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என்று கோரினர். இன்றும் கோரி வருகின்றனர். இந்தி மொழி இராமாயணம் என்று சொல்லப்படும் துளசிதாசர் இராமாயணமே அவத்தி மொழியில் எழுதப்பட்டதாகும். அது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டதால், அதை இந்தி என்று சொல்லி விழுங்கிவிட்டார்கள் என்பது அம்மக்களின் ஆவேசக் குரலாக இருக்கிறது. 

 

அதேபோல், புந்தல்காண்ட் என்பது உத்திரப்பிரதேசத்தில் ஆறு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் ஏழு மாவட்டங்கள் அடங்கிய தனித்த இனக்குழு மக்களின் தாயகமாகும். மாநில சீரமைப்பு நடந்த காலத்திலேயே புந்தல்காண்ட் தனி மாநிலமாக உருவாக்குவது பற்றி பரிவோடு பரிசீலிக்கலாம் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களே கூறியிருக்கிறார். 

 

அதேபோல், பீகாரில் மைதிலி மொழி பேசக்கூடிய சற்றொப்ப 3 கோடியே 80 இலட்சம் மக்கள் தங்களுக்கு மிதிலை மாநிலம் தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்கள். போஜ்புரி மொழி பேசும் சற்றொப்ப 5 கோடி மக்கள், தங்கள் மொழிக்கு அங்கீகாரத்தையும், தங்கள் தேசிய இனத்திற்குரிய போஜ்புரி மாநிலத்தையும் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். போஜ்புரி மொழிக்கு சாகித்திய அகாதெமியில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, அவர்களுடைய தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த சிறிய வெற்றியாகும்! 

 

மருத்துவர் இராமதாஸ் கூறும் போடோலோந்து கோரிக்கையும் இவ்வாறு இனத்தாயகம் சார்ந்த கோரிக்கையாகும். போடோலாந்து மக்கள் தனிநாடு கோரி போராடி, அது கிடைக்கவில்லை என்ற நிலையில், அசாமிலிருந்து தனி போடோலாந்து மாநிலம் வேண்டுமென்று போராடுகிறார்கள். 

 

ஏற்கெனவே மருத்துவர் இராமதாஸ் கூறும் சார்க்கண்ட், உத்தரகண்ட், சத்தீஷ்கார் ஆகிய மாநில உருவாக்கங்களும் தனித்த பண்பாடு – வரலாறு கொண்ட இனக்குழு மக்களின் தாயக ஏற்பாகும். அதுபோல், தெலங்கானாவும் தனித்த மொழி உச்சரிப்பும், பண்பாடும், வரலாறும் கொண்ட அம்மக்களின் தொடர் போராட்டத்தால் உருவானதாகும். 

 

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் எடுத்துக்காட்டியுள்ள அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் மொழிவழி தேசிய இனங்கள் – இனக்குழுக்கள் தாயகம் படைப்பதற்குத்தான் எடுத்துக்காட்டுகளே தவிர, தாயகத்தைக் கூறுபோடுவதற்கான எடுத்துக்காட்டுகள் அல்ல! 

 

அவர் கூறுவதுபோல் தமிழர் தாயகமான தமிழ்நாட்டைக் கூறுபோட்டுத் தனித்தனி மாநிலம் ஆக்கினால், வரலாறு அற்றவர்களாக – தாயகம் அற்றவர்களாக தமிழர்கள் மாற்றப்படுவார்கள். அவ்வாறு கூறுபோடப்படும் மூன்று மாநிலங்களிலுமே மிக விரைவில் தமிழர்கள் சிறுபான்மையினராக மாறிப் போவார்கள். இந்திக்காரர்களும், மார்வாடிகளும், பிற மாநிலத்தவரும் ஆதிக்கம் செய்யும் ஆட்சிப்பகுதியில் உரிமையற்ற கொத்தடிமைகளாக அனைத்துச் சாதி தமிழர்களும் ஒடுக்கப்படுவார்கள். 

 

மதத்தைக் காட்டி காஷ்மீரிகளின் வரலாற்றுத் தாயகமான ஜம்மு காஷ்மீரை இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதியாக மோடி அரசு சிதைத்தது. மருத்துவர் இராமதாஸ், சாதியை முதன்மைக் காரணியாகக் கொண்டு, தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தை மூன்றாகக் கூறுபோடுவதற்கு வழி ஏற்படுத்த முயல்கிறார். இதற்கு நிர்வாகச் சீரமைப்பு, வளர்ச்சிப் பங்கீடு என்று பட்டாடைப் போர்த்தப் பார்க்கிறார். 

 

மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் என்ற நிலையில் இருக்கும்வரைதான் அந்தந்த மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தவாவது முடியும். அது இல்லையென்றால், பா.ஜ.க.வின் ஒற்றை இந்தியா என்ற டாங்கிகளின் பல் சக்கரத்தில் சிக்கி தமிழ்நாடு அழிந்து போகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! 

 

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டுமென்ற மருத்துவர் இராமதாஸின் தமிழினப் பகைக் கருத்துக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.