Skip to main content

''திமுகவை வம்புக்கு இழுக்கக்கூடாது... காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு ஒரே வாரத்தில் மறந்தவர்கள்...''ஆர்.எஸ்.பாரதி பேட்டி!   

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

 "DMK should not be dragged into a fuss... Those who fall on their feet and get office and forget within a week..." RS Bharti interview!

 

வழக்குகள், வாதங்கள், விசாரணைகள் என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

 

அப்பொழுது ஓபிஎஸ் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்த எடப்பாடி பழனிசாமி,  ''ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கமும், அவரோடு உறவு வைத்திருந்த முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்'' எனத் தெரிவித்திருந்தார்.
 

 

dmk

 


இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது, ''இது அவர்களுக்குள் இருக்கும் சண்டை. இதற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனவே எடப்பாடி பழனிசாமி கோபப்பட வேண்டியது யார் மீதோ. வருமானவரித்துறை சோதனையெல்லாம் நடத்தப்படுகிறது. வருமான வரித்துறை என்ன எங்கள் கையிலா இருக்கிறது. வருமான வரித்துறை மத்திய அரசின் கையில் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் தாக்கி பேசுவது எடப்பாடிக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர் எப்படி இந்த பொதுக்குழுவை நடத்தினார் என்பது எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக தெரியும்.

 

எம்ஜிஆர் காலத்திலோ. ஜெயலலிதா காலத்திலோ பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்களா? சென்னையில் இந்த ஐந்தாறு   5 ஸ்டார் ஓட்டல்களில்  நாட்களாக இடமே இல்லை. ஆனால் அதைப்பற்றி நாங்கள் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அது அவரது சாமர்த்தியம். ஆனால் மீண்டும் திமுகவை வம்பிற்கும் இழுக்கக்கூடாது. எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக பல விபத்துகளைச் சந்தித்து வருகிறது. இதுகூட நிலையான பிரிவு இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் சேர்ந்துவிடுவார்கள். சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு ஒருவாரத்தில் சசிகலாவை மறந்தவர்கள். எனவே இதை பெரியதாக எடுத்துக்கொள்ள முடியாது' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.