Skip to main content

“முதல்வர் பழனிசாமி, கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் எனக் கனவு காண்கிறார்” - கௌதம சிகாமணி!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

DMK MP gowthamasigamani speech at 'thamizhagam meetpom'


தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாகக் காணொளி காட்சி மூலம், தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டம் வாரியாக, தி.மு.க நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. 


இந்த விழாவில் கலந்துகொண்ட கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதம சிகாமணி பேசியபோது, “தி.மு.க தலைவரின் தமிழகம் மீட்போம் என்ற இந்தத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம், எட்டு வழிச்சாலை கொண்டுவந்து விவசாயிகளின் வயிற்றில் அடித்த எடப்பாடியின் ஆட்சியை வீழ்த்திட, மாணவர்களின் கல்விக் கனவுகளைச் சிதைத்த எடப்பாடியின் ஆட்சியை வீழ்த்திட, கரோனா கொடிய நோய் மூலம் கோடி கோடியாகக் கொள்ளையடித்த எடப்பாடியின் ஆட்சியை வீழ்த்திட, மிக எழுச்சியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 


தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் எடப்பாடியின் கொடுங்கோல் ஆட்சியை, விரைவில் தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திலேயே, கடந்த பாராளுமன்றத் தேர்தலில், நாம் வரலாறு காணாத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, மூன்று சட்டமன்றத் தொகுதிகளில், சுமார் 2,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்பது அழியா வரலாறு. 


இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பிரச்சாரம் செய்த நமது தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்தத் தேர்தலிலும் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கிய முதல் நாளே, இந்த அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தில் தடுத்து நிறுத்தி, பல தடைகளைப் போட்டுள்ளது. இந்தத் தடைகளை தாண்டி, நாம் வரும் தேர்தலில் வரலாறு காணாத 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கழகத் தலைவரை, முதலவராக்குவது உறுதி என்பதைத்தான், மிகச் சிறப்பாக நடந்து வரும், இந்தத் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டங்கள் உணர்த்தி வருகின்றன.  

 

ஆங்கிலத்தில் ஒரு சிறந்த வரிகள் உண்டு, ஆங்கில அறிஞர் ஜேம்ஸ் ஃப்ரீ மேன் கிலார்க் கூறிய "A politician thinks about the next election, a statesman (leader) thinks of next generation" இந்த வரிகளுக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி சராசரி அரசியல்வாதியாக, தான் கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தை வைத்துக்கொண்டு வரும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என கனவு காண்கிறார்.

 

cnc


ஆனால், நமது தி.மு.க தலைவர் அடுத்த தலைமுறையான இளைஞர்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் தொடர்ந்து சிந்திப்பதால்தான், மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்து, அவர்களின் படிப்புச் செலவையும், திராவிட முன்னேற்றக் கழகமே ஏற்கும் என்று அறிக்கை விடுத்து, தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றியுள்ளார். விரைவில் தி.மு.க ஆட்சி மலரும், நமது தலைவர் முதல்வராவார்” என உரையாற்றினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்