Skip to main content

பேரிடர் நேரத்திலும் இடையறாத கரப்ஷன் - கமிஷன் - கலெக்‌ஷன்! - எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்! 

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 

mks

 

பேரிடர் நேரத்திலும் இடையறாத 'கரப்ஷன் - கமிஷன் - கலெக்‌ஷன்!' ‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்!" என முதலமைச்சர் பழனிசாமி அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம் தொடங்கி, உச்சநீதிமன்றம், மருத்துவர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் புறக்கணித்து, மூன்று நாளில் கரோனா ஒழிந்துவிடும் என ஆரூடம் சொல்லி, இப்போது கடவுளுக்குத்தான் தெரியும் எனச் சொல்லிக் கைவிரிக்கும்  தமிழக ஆட்சியாளர்கள், மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாமல், பேரிடர் நேரத்திலும் ஊழல் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

 

சீனாவிலிருந்து ரேபிட் கிட் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் நீதிமன்றம் வரை சென்று அம்பலப்பட்ட நிலையில், அவற்றைத் திருப்பி அளிப்பதாகச் சொல்லிச் சமாளித்த ஆட்சியாளர்கள், இப்போது 'தெர்மல் ஸ்கேனர்' வாங்குவதில் ஊழல் செய்திருப்பது ஊடகங்கள் வாயிலாக ஊருக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது.

 

குதிரை களவு போன பிறகு லாயத்தைப் பூட்டி வைப்பதைப் போல, சென்னையில் கரோனா தொற்று அதிகமாகி, உயிர்ப்பலிகளும் கூடிக்கொண்டிருக்கிற அச்சம் மிகுந்த சூழலில், ஊரடங்குக்குள் ஊரடங்கு என நிலைமை கடுமையாக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒவ்வொரு வீடாகச் சென்னை மாநகராட்சிக் களப்பணியாளர்கள் நேரில் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பதற்காக, இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் சீனாவிலிருந்து 'பி.கே.58.பி.' என்ற வகையைச் சேர்ந்த 12 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவியைச் சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்திருப்பதை ‘தினகரன்’ நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டு, அதிலுள்ள ஊழல்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

 

இந்தத் தெர்மல் ஸ்கேனர் கருவியின் அதிகபட்ச (எம்.ஆர்.பி.) விலை ரூபாய் 9 ஆயிரத்து 175 ஆகும். மொத்தமாகக் கொள்முதல் செய்த காரணத்தால் விலைக் குறைப்பு செய்து, ஒரு கருவியின் விலை 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவில் வாங்கியிருக்க முடியும் என மருத்துவப் பணி சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலையைவிடக் குறைவான விலையில், 2 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 5 ரூபாய் வரையில் தரமான தெர்மல் ஸ்கேனர்கள் தமிழகத்திலேயே கிடைக்கின்றன. ஆன்லைன் மூலமாக 1,500 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாய்வரை தரமான தெர்மல் ஸ்கேனர்களை பல மருத்துவமனைகளும் மருத்துவர்களும் வாங்கியுள்ளனர். மொத்தமாக வாங்கும்போது இதைவிடக் குறைவான விலையில் வாங்க முடியும் என்றும், சீனத் தயாரிப்பு தெர்மல் ஸ்கேனரை இடைத்தரகர்கள் மூலமாக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமென்ன என்றும் மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என ‘தினகரன்’ நாளேடு வெளியிட்டுள்ளது.

 

அதிக விலை கொடுத்து வாங்கிய தெர்மல் ஸ்கேனர் கருவிகளின் தரமோ படுமோசமாக இருக்கிறது என்றும், வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் மாநகராட்சி களப்பணியாளர்கள் யார் யாரைச் சோதனை செய்கிறார்களோ அவர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையையும் இந்தத் தெர்மல் ஸ்கேனர், ஒரே மாதிரியாக 100 டிகிரிக்கு மேல் காட்டுகிறது என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. மனித உடல் வெப்பநிலையின் சராசரி அளவைக் கடந்து, கடும் காய்ச்சல் உள்ளது போலக் காட்டும் தெர்மல் ஸ்கேனரால், நோய்த் தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகிறார்கள்.

 

எத்தனை பேரிடம் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது என்பதைக் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு களப்பணியாளர்களுக்கு இருப்பதால், இதனை எப்படிப் பதிவேற்றுவது எனப் புரியாமல் தவிக்கிறார்கள். உயரதிகாரிகளோ, நீங்கள் பரிசோதிக்காவிட்டாலும் பரவாயில்லை; ஆய்வு நேரங்களில் கருவிகள் இல்லாமல் இருக்கக்கூடாது. அதனால் பெயரளவுக்கு, தெர்மல் ஸ்கேனரை கையில் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

  

முன்யோசனையோ - தெளிவான திட்டமிடலோ - தொலைநோக்குப் பார்வையோ, எல்லாவற்றுக்கும் மேலாக வெளிப்படைத்தன்மையோ இல்லாமல், முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தலைமையிலான அ.தி.முக. அரசு செயல்படுவதைப் பல முறை ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டியபிறகும், அவற்றைத்  திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி, எதிர்க்கட்சியினர் ‘அரசியல்’ செய்வதாகச் சொல்லி, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் வேலைகளே தொடர்ந்து  நடைபெறுகின்றன.

 

வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்படுகிறோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊடகங்களிடம் சொல்கிறார். ஆனால்,  அவரது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள மாஸ்க் ஒன்றின் விலை 15 ரூபாய் என ‘பில்’ போடப்பட்டுள்ளது. ஆயிரம், இரண்டாயிரம் என மொத்தமாக மாஸ்க் வாங்கும்போது, அடக்க விலை 3 ரூபாய் அளவில்தான் வரும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர். 500 ரூபாய் விலையுள்ள ஒரு லிட்டர் கிருமிநாசினியை 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக ‘நக்கீரன்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கிருமி நாசினியைத் தெளிப்பதற்கான 8 ஆயிரம் விலையுள்ள பவர் ஸ்பிரேயரை, 22 ஆயிரத்து 500 ரூபாய் என பில்லில் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் அந்த ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.

 

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்த ஒன்றியமான அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கும் தலா 1 என வாங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர்களுக்காக செலவிடப்பட்டிருப்பது 2 லட்சத்து 68 ஆயிரத்து 922 ரூபாய். அதாவது, ஒரு தெர்மல் ஸ்கேனர் விலை ரூ.7,909 என்றாகிறது. சென்னை மாநகராட்சி வாங்கியுள்ள தெர்மல் ஸ்கேனர்களைவிட, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்த ஒன்றியத்தில் வாங்கிய ஸ்கேனர்கள் விலை அதிகம் என்பதையே இது காட்டுகிறது.

 

http://onelink.to/nknapp

 

இதுபற்றி விரிவாக எழுதியுள்ள ‘நக்கீரன்’ இதழ், கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சி மன்றத் தலைவர்கள், இந்த அநியாயக் கொள்முதலைக் கண்டித்து, சரியான விலைக்கு பில் அனுப்பினால் மட்டுமே காசோலை கொடுப்போம் என்று தெரிவித்திருப்பதையும் எடுத்துக்  காட்டியுள்ளது. அநியாய கூடுதல் விலையில் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து ஊராட்சி ஒன்றியக் கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதுடன், கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பல சேர்மன்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர் என்றும் 'நக்கீரன்' செய்தி வெளியிட்டுள்ளது.

 

பிளீச்சிங் பவுடர் முதல் பரிசோதனைக் கருவிகள் வரை, இந்தக் கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் ஊழல் செய்து, கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, மக்களின் உயிரோடு மரண விளையாட்டு ஆடிக்கொண்டிருப்பதை இனியாவது நிறுத்தி, இதுவரை நடந்தவை குறித்து, வெளிப்படைத்தன்மையுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்திட வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.