Skip to main content

"எங்களைத் தலைநிமிரச் செய்தவர் கலைஞர்!" - வேட்புமனுத் தாக்கல் செய்த 'திருநங்கை' பேட்டி!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

DMK has set up a board for transgender people in India says transgender Riya

 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டது. அதையொட்டி, திமுக விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. அதிமுக நாளை முதல் பெறவிருக்கிறது. இதில் திமுக சார்பில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல், திருச்செங்கோட்டில் ஊராட்சி மன்ற உறுப்பினராக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருநங்கை ரியா, இன்று விருப்ப மனு அளித்தார். 


அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக முன்னாள் தலைவர் கலைஞர்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் திருநங்கைகளுக்கு முதன்முதலில் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தார். மேலும் திமுகதான் திருநங்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. அதனால், திமுகவின் சார்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடத் தலைவர் ஸ்டாலினால் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் நான் வெற்றி பெற்றேன். மேலும் 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை அளித்துள்ளேன். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், அதில் வெற்றி பெற்று ஒடுக்கப்பட்டு சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களும் மக்கள் பிரதிநிதியாகச் செயல்படமுடியும் என்பதை நிரூபிப்பேன். 


2008ஆம் ஆண்டு முன்புவரை எங்களை எவ்வளவோ அருவருக்கத்தக்கச் சொல்லாடல்களை எல்லாம் வைத்து அழைத்தனர். அதனை எல்லாம் கலைஞர் மாற்றி 2008-ல் 'திருநங்கை' என்று பெயர் சூட்டி, தலைநிமிரச் செய்து, பொது வெளியில் சாதிக்க வைத்தவர். இன்னும், அதில் சாதிக்க வேண்டும் என இந்த விருப்ப மனுவை வழங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார். 

 

DMK has set up a board for transgender people in India says transgender Riya

 

மேலும், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருநங்கைகளுக்கான நலவாரியத் திட்டங்கள் எதாவது எதிர்பார்க்க முடியுமா” எனக் கேட்டதற்குப் பதில் அளித்த ரியா, “இந்தியாவிலேயே திருநங்கைகளுக்காக வாரியம் அமைத்ததே திமுகதான். அதன் மூலமாக, சுதந்திர இந்தியாவில் தான் யார் என நிரூபிக்க முடியாத தருணத்தில் இருந்த ஒருவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள உள்ளிட்ட அனைத்தும் பெறுகிறோம். இந்த வாரியத்திலிருந்து வீடு பெறுகிறோம்” என்றார். 

 

மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, “ராசிபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது. சாலை வசதி என்பதே இல்லை. தற்போதுள்ள சமூகநலத்துறை அமைச்சர் அதிகமாக தொகுதிக்கு வருவதே இல்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களின் தேவைகளும் இன்னும் பூர்த்தி அடையாமல் இருக்கிறது. மக்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் நெருங்கி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படி இருப்பவர்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் அவர்களை அடிக்கடி சென்று சந்தித்துவருகிறேன்” என்றார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.