Skip to main content

கரோனா தொற்றால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் திவாகரன்... நலம் விசாரிக்காத சசிகலா..!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

Divakaran at Ramachandra Hospital in Chennai with corona infection; Sasikala does not inquire about health ..!

 

கரோனா பெருந்தொற்றால் மாரடைப்பு ஏற்பட்டு அவசர அவசரமாக சென்னை போளூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.

 

கரோனா பெருந்தொற்று குறித்து அதிமுகவினருக்கு ஃபோன் மூலம் நலம் விசாரித்து அந்த ஆடியோவை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை உண்டாக்கிவரும்  சசிகலா, கூடப் பிறந்த சகோதரர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிற நிலையிலும்கூட நலம் விசாரிக்காமல் இருப்பது திவாகரன் ஆதரவாளர்கள் மத்தியில் மனக்குமுறலை உண்டாக்கியிருக்கிறது.

 

மற்ற அரசியல்வாதிகளைப் போல சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பதைத் தவிர்க்கும் திவாகரன், சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள சுந்தரகோட்டை பண்ணை வீட்டில்தான் வசித்துவருகிறார். கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவும்போது அவ்வப்போது முக்கிய நிகழ்வுகளுக்குச் சென்றுவந்த திவாகரன், கரோனா இரண்டாவது அலை மிகவீரியமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறியதும் வெளியில் செல்வதையும், நெருக்கமானவர்களை சந்திப்பதைக் கூட தவிர்த்ததோடு, வீட்டின் மெயின் கேட்டைப் பூட்டி அதில் யாரும் என்னைப் பார்க்க வர வேண்டாம் என போர்டு வைத்து பாதுகாப்பாக இருந்தார். ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு திவாகரனுக்கு உடல்நிலை மோசமாக, சிகிச்சை பெற்றுவந்த திவாகரனுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட, தஞ்சாவூர் மருத்துவர்களின் ஆலோசனைபடி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட, அவரை ஆய்வுசெய்த மருத்துவர்கள் கரோனா தொற்று  இருப்பதை உறுதிசெய்து தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

 

Divakaran at Ramachandra Hospital in Chennai with corona infection; Sasikala does not inquire about health ..!

 

"திவாகரனுக்கு உதவியாக அவரது மகன் ஜெயானந்தும், அவரது மருமகன் விக்ரமன் மட்டுமே உடனிருந்து கவனித்துவருகின்றனர். திவாகரனின் உறவினர்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்தும்கூட அவர்களுள் ஒருவர்கூட திவாகரன் உடல்நிலைகுறித்து விசாரிக்கவோ, ஆறுதலுக்காக நேரில் வரவோ இல்லை. அதே நேரம் சசிகலா குடும்பத்தில் யாருக்கேனும் எதாவது நடந்தால் முதல் ஆளாக நிற்பவர் திவாகரன், அவரை பதவி வெறிக்காக திட்டமிட்டே சிலந்தி வலைகளைப்போல பின்னி புறக்கணித்துவருகின்றனர். இதற்கு காலமே சரியான பாடம் கொடுக்கும்" என்று கலங்குகிறார் திவாகரனுக்கு மிகமிக நெருக்கமான பிரமுகர் ஒருவர்.

 

இதுகுறித்து திவாகரன் ஆதரவாளர்கள் சிலரிடம் விசாரித்தோம், "ஒருகாலத்தில் ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்தமானவர் திவாகரன். அதேபோல சசிகலா, திவாகரனை சகோதரன் என்கிற பாசத்தைத் தாண்டி பெற்ற பிள்ளையைப் போல பாசம் வைத்திருந்தார். மனதில் பட்டதை சற்றும் யோசிக்காமல் பட்டென்று பேசிவிடுவது அவரது வழக்கம். அதுபோலதான் தஞ்சை திருமண விழாவில் திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அதேபோல தினகரனின் சுயநலம்தான் அதிமுக பிளவுக்கு காரனம் என தடாலடியாக பேசினார். அதே போல திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் பேசினார். சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கு முதல்நாள் கரோனா தொற்று இருப்பதாக கூறி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், எதைப் பற்றியும் யோசிக்காமல் இரவோடு இரவாக பெங்களூருவுக்கு சென்று சசிகலா குறித்து நலம் விசாரித்துவிட்டு, ஏதோ சதி நடக்கிறது என்றும் சிறைத் துறையினர் சார்பில் எந்த வசதியும் செய்துகொடுக்காமல் சாதாரண மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவருக்கு எந்தவித சிகிச்சையும் கொடுக்கப்படவில்லை, என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் சண்டையிட்டுவிட்டு மன்னார்குடி வந்ததும், ‘என்னமோ சதித்திட்டம் நடக்கிறது. சசிகலாவிற்கு ஆபத்து ஏற்பட போகிறது’ என மீடியா முன்பு பேசி பரபரப்பை உண்டாக்கி ஒட்டுமொத்த பார்வையையும் சசிகலாவின் பக்கம் திருப்பினார். அதேபோல சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் முதல் ஆளாக சசிகலா சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்திருக்கிறார். இது அவரது உடல்நலனுக்கு நல்லது என அக்கறையோடு பேட்டியளித்தார். இப்படி சசிகலாவின் சுக துக்கங்களில் இருந்த திவாகரனை பதவி வெறிக்காக சிலர் சசிகலாவிடம் இருந்து பிரித்து வைத்திருப்பதோடு திட்டமிட்டே திவாகர்மீதும் அவரது மகன்மீதும் சசிகலாவை வெறுப்படைய செய்துவிட்டனர். திவாகரனின் மகன் ஜெயானந்த் திருமணத்திற்கு கூட வாழ்த்து சொல்லவிடாமல் தடுத்துவிட்டனர்." என்றனர்.

 

மேலும், "சசிகலா சிறையில் இருந்து வந்தபோது பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு சிறப்பாக அமைய திவாகரனின் மகன் ஜெயானந்தும் அவரது மருமகன் டாக்டர் விக்ரமனும் பெரும்பாடுபட்டனர். அவர்கள் சசிகலா சென்னைக்கு வரும்போது கான்வாயில் வந்த ஜெயானந்தின் கார் ஆக்சிடண்ட் ஆனது. அதுகுறித்து கூட சசிகலாவின் காதிற்கு செல்லவிடாமல் கச்சிதமாக பார்த்துக்கொண்டனர். திவாகரன் சசிகலாவோடு நெருங்கிவிட்டால் புஸ்வானமாக போய்விடுவோம் என்பதாலேயே அவருக்கு எதிராக காய்நகர்த்திவருகின்றனர். கூடபிறந்த தம்பி என்கிற முறையில் விசாரிக்கவில்லை என்றாலும் தொண்டர்களிடம் பேசி ஆடியோவை வெளியிட்டு பரபரப்பாக்குவது போலவாவது தொண்டனாக நினைத்து நலம் விசரிக்கலாமே" என ஆதங்கப்படுகிறார்கள்.

 

இதற்கிடையில் திவாகரன் பூரண குனமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோயில்களில் பூஜை செய்துவருகின்றனர். ஆதரவற்றோர் பள்ளி சிறுமிகளும் மனமுறுகி வேண்டுதல் நடத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.