Skip to main content

மா.செ. நியமனம் எப்போது? ஏங்கும் வேலூர் அ.தி.மு.க.-வினர்!

Published on 14/06/2020 | Edited on 15/06/2020

 

Vellore


தமிழகத்தில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்த வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்பது வேலூர் மாவட்ட மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை. இதற்காகப்  பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், கடையடைப்புகள் என நடத்திப்பார்த்தனர்.
 


தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இவ்வளவு பெரிய மாவட்டத்தை ஒரு மா.செவால், ஒரு மாவட்ட தலைவரால் நிர்வாகம் செய்ய முடியாது என கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது. திமுக அதனை கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்றாகப் பிரித்தது வைத்திருந்தது. காங்கிரஸ் 3 மாவட்டமாக, பா.ஜ.க. 2 மாவட்டமாக, பா.ம.க. 6 மாவட்டமாகப் பிரித்து நிர்வாகம் செய்தது.

அரசின் சார்பில் நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2019 அக்டோபர் மாதம் வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதியதாக திருப்பத்தூர், இராணிப்பேட்டை என உருவாக்கப்பட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் என 50 சதவித நிர்வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுவிட்டனர்.

தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க. போன்ற கட்சிகளும் புதியதாக உருவான மாவட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்களை, மாவட்ட தலைவர்களை நியமித்துவிட்டது. ஆனால் ஆளும்கட்சியான அ.தி.மு.க. மட்டும் இதில் தடுமாறிக்கொண்டு இருக்கிறது என புலம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், வேலூர் மாவட்டத்திற்குக் கிழக்கு, மேற்கு என கட்சி சார்பில் இரண்டாக பிரித்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சிப் பணி நடந்து வந்தது. கிழக்கு மா.செவாக அரக்கோணம் எம்.எல்.ஏ ரவியும், மேற்கு மா.செவாக அமைச்சர் வீரமணியும் இருந்துவந்தனர். இப்படி கிழக்கு, மேற்காக பிரித்ததிலேயே ஏகப்பட்ட குழப்பம் எங்க கட்சியில் இருந்துவந்தது. அதாவது வேலூர் மாநகரம் மேற்கு மாவட்டத்துக்குள் இருந்தது. வேலூர் மாநகரத்துக்குள் வரும் காட்பாடி தொகுதி கிழக்கு மாவட்டமாக இருந்தது. அதெல்லாம் புதிய மாவட்டம் உருவாக்கத்திற்குப் பின் தீர்ந்துவிடும் என நினைத்தோம், இப்போது வரை அந்தப் பிரச்சனை தீரவில்லை.
 


மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதும், வேலூர் கிழக்கு மா.செவாக இருந்த ரவி, ராணிப்பேட்டை மா.செவாக மாறிவிட்டார். வேலூர் மேற்கு மா.செவாக இருந்த அமைச்சர் வீரமணி, திருப்பத்தூர் மா.செவாக மாறிவிட்டார். வேலூர் மாவட்டத்துக்கு மா.செ என யாரும் இல்லாமல் உள்ளது. அதுமட்டும்மல்ல கட்சி கழக அமைப்பும் இங்கு இல்லை.

அதாவது மேற்கு மாவட்டமாக இருந்தபோது வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகளில் இருந்த சீனியர் கட்சியினர் மாவட்ட கமிட்டியில் நிர்வாகிகளாக இருந்தார்கள். இப்போது மாவட்டம் பிரிக்கப்பட்டபின்பு அவர்கள் எந்தப் பொறுப்பில் உள்ளார்கள் என்கிற குழப்பம் ஏற்படுகிறது.

கடந்த டிசம்பரல் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது, முக்கிய நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பி.எஸ்சிடம், வேலூருக்கு புதிய மா.செவை நியமியுங்கள், கட்சி மாவட்ட கமிட்டியை அமையுங்கள் எனச் சொன்னார்கள், அவர்கள் அதனைச் செய்ய முயன்றபோது, அமைச்சர் வீரமணி தடுத்துவிட்டார்.

அரசின் சார்பில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது என்பதற்காகக் கட்சி நிர்வாகத்தை மாற்ற வேண்டிய அவசியம்மில்லை. முன்பு இருந்ததுபோலவே இப்போதும் கிழக்கு, மேற்கே இருக்கட்டும் எனத் தடுத்துவிட்டார். அவர் சொன்னதை இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரும் கேட்டுக்கொண்டு அமைதியாகிவிட்டார்கள். கட்சி நிர்வாக ரீதியாக கிழக்கு – மேற்காகவே இருக்கட்டும் எனச்சொன்ன அமைச்சர் வீரமணி, வேலூர் மாவட்டத்திற்கு வந்து நிவாரண பணிகளில் அவ்வளவாக ஈடுப்படவேயில்லை. தருபவர்களையும் ஒருங்கிணைக்கவில்லை. அவர் திருப்பத்தூர் மாவட்டத்தோடு சுருங்கிக்கொண்டார். இதனால் கட்சிக்கு தான் இங்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றார்கள்.
 

http://onelink.to/nknapp


மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது முதல் வேலூர் மா.செ பதவியைப் பிடித்துவிட வேண்டுமென அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர்கள் தலைமையிடம் முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றனர். தங்களுக்கு தான் மா.செ பதவி எனக் கனவும் கண்டுவருகின்றனர். ஆனால் அவர்களின் கனவு நீண்ட மாதங்களாகக் கனவாகவே இருந்துவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.