Skip to main content

84 வயதில் தி.மு.க. யூனியன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகுருசாமி!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருசாமி. 1937ம் வருடம் பிப்ரவரி 27ம் தேதி பிறந்த அவர் இளம் வயதிலேயே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுடன் இருந்துள்ளார். அதன் பிறகு திமுகவில் 1977ம் ஆண்டு முதல் இன்றுவரை (2020) ரெட்டியார்சத்திரம் ஒன்றிய திமுக செயலாளராக பதவி வகித்து வருகிறார். தற்போது ரெட்டியார்சத்திரம் இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளராக பதவியில் உள்ளார்.

 

dindigul dmk candidate become union president

 

 

1986ம் வருடம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய திமுக சேர்மனாக (ஒன்றியக்குழு தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 03.03.1991 வரை சிறந்த முறையில் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றார். அதன் பின்னர் கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, 1991ம் வருடம் மாவட்ட கவுன்சிலராகவும், அதன்பின்னர் தொடர்ந்து 2011 வரை ஒன்றியகுழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது திமுகவின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக இன்றும் உள்ளார். கடந்த 27ம் தேதி நடைபெற்ற 
உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண் 11ல் திமுக சார்பாக ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார்.

தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.கண்ணனை விட 753 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். வெற்றி பெற்ற அன்றே ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என திமுக மற்றம் அனைத்துக்கட்சி நிர்வாகிகளும் கூறிவந்தனர். 11.01.2020 சனிக்கிழமை அன்று ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். 34 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே பதவிக்கு 84 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப.க.சிவகுருசாமிக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். சென்னை சென்று திமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி அவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகுருசாமி, பின்னர் அண்ணா சமாதிக்கும், கலைஞர் சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

தேனியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Chief Minister M.K. Stalin's campaign In Theni

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சுற்றப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் நாளை (புதன் கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதனையொட்டி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இதில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு மதுரையில் இருந்து தேனி வருகிறார். தேனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்குகிறார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க செல்லும் ஊர்களில் எல்லாம் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி தேனியிலும் அவர் நாளை காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மாலையில் லட்சுமிபுரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது ஏராளமான தொண்டர்கள் அமருவதற்காக பொதுக்கூட்ட திடல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில  நாட்களாக மும்முரமாக நடந்து வருகின்றது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பிரம்மாண்ட கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. 

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இந்த பொதுக்கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 12 தொகுதிகளில் இருந்தும் கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சம் பேரை திரட்ட இருக்கிறார்கள். அதற்கான பணியில் தொகுதி பொறுப்பாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட பொறுப்பாளர்களும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.