Skip to main content

உச்சநீதிமன்றத்திற்கு இருக்கின்ற புரிதல் மத்திய அரசுக்கு இல்லை: ஈ.ஆர்.ஈஸ்வரன் வருத்தம்!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

E.R.Eswaran

 

புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது. உச்சநீதிமன்றத்திற்கு இருக்கின்ற புரிதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசுக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. 

 

கடந்த 49 நாட்களாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராடியதற்கு உச்சநீதிமன்றம் இன்றைய தினம் அளித்துள்ள தீர்ப்பு, விவசாயிகளின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்க முடியும். உச்சநீதிமன்றம் அமைத்து இருக்கின்ற குழு விவசாயிகளிடம் முழுமையாக விசாரணை செய்து விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை எடுக்கும் என்று நம்புவோம். 

 

ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன் அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் சர்வாதிகாரப் போக்கில் மத்திய அரசு தொடர்ந்து செயல்படுவது நல்லதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு மக்கள் மீதுள்ள அக்கறையின்மையை வெளிக்காட்டியிருக்கிறது. 


விவசாயிகளின் குரலை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் விவசாயிகளின் உணர்வைப் புரிந்து உத்தரவிட்டிருப்பதை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு மனதோடு வரவேற்கிறது'' எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.