Skip to main content

டெல்லி கலவரம்... கண்டுகொள்ளாத முதல்வரை கண்டிக்கிறது த.வா.கட்சி... வேல்முருகன் 

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

 

சமூகத்திற்கு எந்த வகையிலும் உதவாத மேல்சாதி-மேல்தட்டு மக்களின் ஆர்எஸ்எஸ்-பாஜக, சிஏஏ சட்டத்தால் தனிமைப்பட்டதன் விளைவே, மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி அடித்தட்டு மக்களைத் தூண்டிவிட்டு டெல்லியில் கலவரம் ஏற்பட்டிருக்கிறது. 18 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதற்குக் காரணமான ஒன்றிய உள்துறையை, அதன் கீழ் உள்ள டெல்லி காவல்துறையை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தனை நடந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்ற டெல்லி முதல்வரை கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.


 

velmurugan




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாவதற்காகவே வீதிக்கு வந்து போராடினால், பின்பு அவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்?” இப்படிப் பேசியவர் வேறு யாருமல்ல; உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.


யோகி ஆதித்யநாத் பேச்சை வழிமொழிகிறார் கபில் மிஸ்ரா; இவர் டெல்லி கலவரம் நடந்த பகுதி உள்ளடங்கிய சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர்; ஏற்கனவே 2015 தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிறகு 2019இல் பாஜகவில் சேர்ந்தவர்.


இந்த கபில் மிஸ்ரா, “ஜாஃபராபாத், சந்த்பாக் பகுதிகளில் போராடுபவர்களைக் கலைக்க டெல்லி போலீசுக்கு நாங்கள் மூன்று நாட்கள் கெடு விதிக்கிறோம். அதன் பிறகு நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க மாட்டோம். டிரம்ப் திரும்பிச் செல்லும் வரையில்தான் நாங்கள் அமைதி காப்போம்” என்று டுவிட்டரில் பதிவிட்டதோடு, “ஜாஃபராபாத் போராட்டத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாம் வீதிகளில் இறங்க வேண்டும்” என்றும் கூறியவர்.


 

இவ்வாறு கபில் மிஸ்ரா சொல்லி சிலமணி நேரத்திலேயே அங்கு கலவரம் வெடித்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராகப் போராடுபவர்கள் மீது போலீசார் மட்டுமல்லாமல் சிஏஏ ஆதரவாளர்களும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் கொடூர தாக்குதல் நடந்தது.


மூன்று நாட்களாக டெல்லியின் ஜாஃபராபாத், சந்த்பாக், மாஜ்பூர், குரேஜிகாஸ், பஜான்பூரா, கர்டாம்புரி ஆகிய பகுதிகள் கலவரக் காடாயின. இதுவரை 18 பேர் பலியாகினர். அதில் தலைமைக் காவலர் ரத்தன் லால் என்பவரும் ஒருவர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.


கலவரத்தின்போது 200க்கும் மேற்பட்ட நபர்கள் மூவர்ணக்கொடி மற்றும் காவிக்கொடிகளை ஏந்தியபடி ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘வந்தே மாதரம்’ என்று முழக்கமிட்டுச் சென்றனர். அவர்கள் கண்ணில் பட்ட, தங்களுக்கு இடறலாகத் தெரிந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள்; பெட்ரோல் பம்புகள் மற்றும் கடைகளைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள். முஸ்லிம்களாகப் பார்த்து அடித்தோ சுட்டோ கொன்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.


கலவரத்தின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் இருந்ததாகக் குற்றம்சாட்டடப்படுகிறது. அந்த அமைப்புகளும் பாஜகவினரும் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி அடித்தட்டு மக்களைத் தூண்டிவிட்டுத்தான் இந்தக் கலவரத்தை அரங்கேற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.


இந்தக் கலவரத்தையடுத்து ஜாஃபராபாத் பகுதியில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளனர் என்றது டெல்லி போலீஸ். “வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியில் புதன்கிழமை (26.02.2020) பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். எல்லா மாநிலத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ தேர்வுகளையும் ஒத்திவைக்கும்படி சிபிஎஸ்இ வாரியம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார் டெல்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியா.

 

டெல்லியின் முதல்வர் கெஜ்ரிவாலோ, “வன்முறை வெடித்த தொகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே கலவரம் நீடிக்கக் காரணம்” என்று குற்றம்சாட்டினார். இப்படி அவர் சொல்லக் காரணம், டெல்லி போலீஸ் ஒன்றிய உள்துறையின் கையில் இருப்பதே. ஆனாலும் மூன்று நாட்களாகக் கலவரம் தொடர்ந்தும் அதை முடிவுக்குக் கொண்டுவர அவர் எடுத்த நடவடிக்கையோ முயற்சியோ ஏதுமில்லை என்பதுதான் மொத்த இந்தியாவும் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு.


 

Arvind Kejriwal




எனவேதான் சொல்கிறோம்: சமூகத்திற்கு எந்த வகையிலும் உதவாத மேல்சாதி-மேல்தட்டு மக்களின் ஆர்எஸ்எஸ்-பாஜக, சிஏஏ சட்டத்தால் தனிமைப்பட்டதன் விளைவே, மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி அடித்தட்டு மக்களைத் தூண்டிவிட்டு டெல்லியில் கலவரத்தில் 18 பேர் பலி!


இதற்குக் காரணமான ஒன்றிய உள்துறையை, அதன் கீழ் உள்ள டெல்லி காவல்துறையை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தனை நடந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்ற டெல்லி முதல்வரை கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

கெஜ்ரிவால் வழக்கு; அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (15.04.2024) விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (15.04.2024) முடிவடைவதையொட்டி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.