Skip to main content

விசுவாசமாக இருந்தவர்..! - முன்னாள் அமைச்சர் மறைவுக்கு OPS-EPS இரங்கல்

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

ddd

 

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான அ.பாப்பாசுந்தரம் மறைவுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் அ.பாப்பாசுந்தரம் (86). உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில், நேற்று (18.04.2021) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

 

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது கட்சியில் இணைந்தார். அப்போது குளித்தலை ஒன்றியச் செயலாளராக இருந்தார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக செயல்பட்டபோது ஜெயலலிதா அணியில், 1989இல் சேவல் சின்னத்தில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

 

அதனைத் தொடர்ந்து 1991, 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று நான்கு முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். மாவட்டச் செயலாளர், மாவட்ட அவைத்தலைவர் என கட்சியிலும் பதவி வகித்தார். 

 

மாநில அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த பாப்பாசுந்தரம், வயது முதிர்வால், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலமானார். மறைந்த பாப்பாசுந்தரத்திற்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

 

பாப்பாசுந்தரம் மறைவுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

அதில், “பாப்பாசுந்தரம் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தோம். ஆரம்பகால கழக உடன்பிறப்பு பாப்பாசுந்தரம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் ஜெயலலிதா ஆகியோர் மீதும், தொடர்ந்து தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

 

பாப்பாசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளக் கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும்  என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என கூறியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.