Skip to main content

“நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும்” - சி.வி. சண்முகம் ஆரூடம்

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

cv sanmugam talk about parliamentary elections and assembly elections come to same

 

அ.தி.மு.க -வின் 51-வது பொன்விழா ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக விருத்தாச்சலம் வானொலி திடலில் பொன்விழா  பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் தலைமையில் நடைபெற்றது.

 

சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசுகையில், " எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. 50 ஆண்டுகால கட்சி வரலாற்றில் 32 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த மாபெரும் இயக்கமாகத் திகழ்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிளவுபடுத்தி விடலாம் என கனவு காண்கிறார். முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த, அ.தி.மு.க தொண்டர்களின் கோவிலாக இருக்கக்கூடிய தலைமைக் கழகத்தை தி.மு.கவுடன் இணைந்து காவல்துறை துணையுடன் உள்ளே புகுந்து சூறையாடிச் சென்ற ஓ.பி.எஸ் ஒரு கருங்காலி, துரோகி. இங்கு இருந்து எல்லாப் பதவிகளையும் சுகங்களையும் அனுபவித்த  கருங்காலி ஓ.பி.எஸ்ஸை வைத்துக் கொண்டு அ.தி.மு.கவை அழித்து விடலாம் என நினைக்க வேண்டாம். அது முடியவே முடியாது.

 

தி.மு.க ஆட்சி முடிவதற்கு 5 வருடம் காத்திருக்கத் தேவையில்லை. தி.மு.க ஆட்சி எப்போது போகும் என திமுகவினரே புலம்புகின்றனர். மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்க்கவில்லை. தேர்தலின் போது கொடுத்த 525 வாக்குறுதிகள் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 46 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதில் 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. சொத்துவரி உயர்ந்துவிட்டது.  கிராமப்புறங்களிலும் வீடுகளுக்கான சொத்துவரி வசூலிக்கப்படவுள்ளது. மேலும் மக்களுக்கு அடுத்த பரிசாக பேருந்து கட்டணம் உயர உள்ளது. தமிழகத்தில்  அனைத்து மாவட்ட மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் கூட அரசு மருத்துவமனையில் இல்லை. 

 

மக்கள் பிரச்சனைகளை மறக்கடிப்பதற்காக தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் நடத்தும் சன் சைன் பள்ளியில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்பள்ளியில் ஹிந்தி கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்" எனத் தெரிவித்தார்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், சிவசுப்பிரமணியன், நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை, ரகுராமன், பச்சமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.