Skip to main content

“நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது” - திருமா பேட்டி

Published on 21/06/2023 | Edited on 21/06/2023


 

nn

 

விஜய் நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சிலர் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நோக்கத்தில் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளார் எனவும் தெரிவித்து வந்தனர்.

 

nn

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ''நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. மக்களுக்கு பணியாற்றி சிறைக்குச் சென்றவர்களை ஓரம் கட்டிவிட்டு மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என நடிகர்கள் நினைக்கிறார்கள். கேரளாவில் நடிகர் மம்மூட்டி, கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் என பலர் சினிமா புகழை பயன்படுத்தவில்லை. அரசியலுக்கு வந்து மக்களை கவர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கருத்தியல் சார்ந்து களப்பணியாற்றி அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும் வரவேற்கிறோம். நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறோம். பொதுவாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழகத்தில் மட்டும்தான் மார்க்கெட்டை இழக்கும் நேரத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள்.'' என்றார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலர்களாக ஈடுபட வேண்டும்” - நடிகர் விஜய்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Vijay People's Movement administrators should be involved as volunteers Actor Vijay

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாகச் செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்புப் பணிகளில் தன்னார்வலர்களாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளைச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர் துடைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை உதவி ஆணையர் ஷேக் மன்சூரின் 9791149789 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் பாபுவின் 9445461712 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் சுப்புராஜ் 9894540669என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், பொதுவாக 7397766651 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான்” - பாரிவேந்தர் 

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Vijay entering politics is good says parivendhar

 

விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான் ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் வருவதை விட, புதியவர்கள் வருகையால் மக்களுக்கு நல்லது நடக்கும் என ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

 

கரூர் மாநகரில் இந்திய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சித்ரா என்பவரின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். விழாவை முடித்துக் கொண்டு புறப்பட்ட அவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

 

அதற்கு, “விஜய் அரசியலுக்கு வருவது நல்லதுதான். மக்கள் நல்லது நடக்குமா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே பதவியில் இருந்தவர்களே வருவதை விடவும், நல்லவர்கள், சாமர்த்தியமானவர்கள், தேசப்பற்றுடன் இருப்பவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக வரவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நல்லது நடக்கும்” என்று பதிலளித்தார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்