Skip to main content

நல்ல வேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது: கோவையில் திருமாவளவன் பேச்சு

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

இந்தியாவை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்றது. 
 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜாவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

cpi meeting Coimbatore


மாநாட்டில் புல்வாமாவில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் இந்திய விமானப்படையின் அதிரடிப் பிரிவு தாக்குதலுக்கு பாராட்டு, மதவெறி, சாதிவெறி, பணம், பதவிவெறி சக்திகளை தோற்கடிப்பீர், மதசார்பற்ற ஜனநாயக சக்தியினை ஆதரிப்பீர் உள்ளிட்ட தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது, 
 

''பல தடைகளை தாண்டி இம்மாநாடு நடைபெற்று வருகிறது. வ.ஊ.சி மைதானம், பொருட்காட்சி மைதானத்தில் மாநாடு நடத்த கேட்டோம். இரு இடத்திற்கு போலீசார் வழங்க மறுத்தனர். மேல் இடத்து உத்தரவு காரணமாக இடம் வழங்கவில்லை என போலீசார் விளக்கம் அளித்தனர். மாநாட்டில் பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் வர உள்ளனர். ஆகவே இடத்தை தர முடியாது என போலீசார் கூறினர். தனியாருக்கு சொந்தமான கொடிசியாவில் எதிர்பார்க்காத அளவிற்கு மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என எண்ணுகிறார். அது நடக்காமல் மாநாடு விமரிசையாக, சிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்கட்சி தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் தமிழக முதல்வராக பொருப்பு ஏற்பது உறுதி'' என்றார். 
 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது, ''6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு தரப்படும் என்பது ஏமாற்று வேலை, ஒட்டுக்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வந்ததும் அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வார். பிரதமரின் பணம் மதிப்பிட்டு இழப்பு காரணமாக சிறு,குறு தொழில்கள் அழிந்து விட்டன. செயல் திட்டம் இல்லாத கட்சி பாஜகவும், அதிமுகவும். இம்மேடையில் பாமக இருந்து இருக்க வேண்டும். கொள்கைக்கு மாறாக இருக்கும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. எப்படி அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க பாமகவால் முடிந்து என்று தெரியவில்லை. எந்த கொள்கையும் இல்லாமல் இருக்கும் கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணி. அதை உடைத்து எறிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
 

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது, ''மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி மோடி அரசு செயல்பட்டு வருகின்றது. ஆகவே அந்த அரசை தூக்கி எறிய வேண்டும். மோடி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது தான் எடப்பாடி அரசு. ஒரு சுதந்திரம் இல்லாத அரசு அதிமுக அரசு. பல்வேறு முரன்பாடுகள் இருந்தாலும் மோடி அரசின் திட்டத்தை எதிர்த்தவர் ஜெயலலிதா. பாமக இக்கூட்டணி வந்திருந்தால் பல்வேறு பிரச்சனைகள் கூட்டணி தலைவர்கள் சந்தித்து இருப்பார்கள். நல்ல வேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. கொத்தடிமை ஆட்சியை விரட்டுவோம், நாற்பது நமதே'' என்றார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, ''இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம். இந்த மாநாட்டில் பங்கு கொள்வது மகிழ்ச்சி. என்னை உங்களுக்கு பிடிக்கும், உங்களை எனக்கு பிடிக்கும். இதற்கு காரணம் என் பெயர் ஸ்டாலின். கலைஞர் பெயர் சூட்டும் போது முத்து வேலன் நினைவாக முத்து முதல் மகன்கும், இரண்டாவது மகன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவாக அழகிரியும், மூன்றாவது மகன் நான், ஸ்டாலின் இரங்கல் கூட்டத்தின் போது நான் பிறந்ததாலும் கம்யூனிஸ்ட் கொள்கை அடிப்படையில் பெயர் வைக்கப்பட்டது. ஸ்டாலின் என்ற பெயரால் சின்ன வயதில் பெரும் சிரமம் ஏற்ப்பட்டது. காராணம் பள்ளியில் சேர்க்க முயற்சிக்க போது ஸ்டாலின் பெயர் பிரச்சனைகுரிய பெயராக உள்ளது, பெயரை மாற்றிக்கொள்ள கூறினார்கள். அதற்கு கலைஞர் கூறியது பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேன் தவிர பெயரை மாற்ற மாட்டான் என தெரிவித்தார்.


 

cpi meeting Coimbatore


தலைவர் கலைஞர் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தார், அதை நன்றாகவும் செயல்படுத்தினார். ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஆட்சி தலைவர் கலைஞரின் ஆட்சி. ஆனால் அதற்கு மாறாக மோடி ஆட்சியும், எடப்பாடி ஆட்டியும் உள்ளது. எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக இது இல்லை. அடியாட்கள் கொண்டு நடந்து வரும் ஆட்சி. கொலை குற்றவாளி நடத்திவரும் ஆட்சி தற்போதைய ஆட்சி. தமிழகத்தை காப்பற்ற வேண்டும் இரண்டு பணிகள் உள்ளது. அது தான் இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம். இவ்வாறு பேசினார். 

சார்ந்த செய்திகள்