Skip to main content

கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை வரைமுறைப்படுத்த த.மு.மு.க. வழக்கு!

Published on 02/06/2020 | Edited on 03/06/2020

 

high court chennai


கரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் மிதமிஞ்சிய கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் பலர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். 
 


வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்ரமணியம், டி. பெர்டினென்ட் மற்றும் கே. எம். ஆசிம் செஹ்ஜாட் அகில் பன்சாலி, எம். மீரா, ஆதித்ய முகர்ஜி மற்றும் எஸ். வேதவேல் ஆகியோர் உள்ளிட்ட பி.எப்.எஸ். சட்ட நிறுவனம் இந்த வழக்கை த.மு.மு.க. அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநரும் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

1. நோய்க்கான மருத்துவச் செலவு/கட்டணத்தை வரைமுறைப் படுத்தவும், (தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில்)

2. பெருந்தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் பொதுச் சுகாதாரத் துறை எதிர் கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு அதற்கு உதவும் வகையில் தனியார் மருத்துவமனைகள் தார்மீக அடிப்படையில் தங்களிடம் உள்ள இட வசதியை ஒதுக்கித் தருமாறும்,

3. மருத்துவ ஆய்வுக் கூடங்கள் சட்டத்தின்படி, COVID 19 நோய்க்கான சிகிச்சையில் குறைந்தபட்ச தர நிர்ணயத்தை விதிக்குமாறும் மேற்கூறிய கோரிக்கைகளுக்கு உரிய வழிகாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும், வேண்டி இந்தப் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொது நல வழக்கின் விபரம்:

கரோனா என்னும் கோவிட் 19 நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்வதில் தொடங்கி முழு சிகிச்சை அளிப்பது வரை லட்சக்கணக்கில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகள் தங்கள் மனோ இச்சையின் படி கட்டுக்கடங்காத, மிகைப்படுத்தப்பட்ட, செயற்கையாக உயர்த்தப்பட்ட கட்டணங்கள் வசூலிப்பதாகவும் செய்தித் தாள்களிலும், கள விசாரணையிலும் த.மு.மு.க. அறிந்துள்ளது.
 


மத்திய அரசிடம் இருந்து கரோனா நோய் சிகிச்சைக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) வழங்கப்படாததால் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன. நிலையான கட்டணமோ அல்லது சிகிச்சை அடுக்கு முறையோ இல்லை. அதிகப் பணம் தருவோருக்குச் சிகிச்சை அளிப்பதும், மற்றவர்களைத் திருப்பி அனுப்பும் செயலையும் தனியார் மருத்துவமனைகள் செய்கின்றன. 

ஆனால் இந்நோயோ குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டால் அனைவருக்கும் தொற்றிக் கொண்டுவிடுகிறது. ஒருவருக்கே லட்சக்கணக்கில் மருத்துவச் செலவு என்றால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆகும் செலவை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அநியாயமாக வசூலிக்கப்படும் இத்தொகை பேராபத்தாகவும் இருக்கிறது. 

எனவே உடனடியாக அரசின் தலையீடு அவசியமாகிறது. நாட்டிலேயே மராட்டியத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் COVID 19 நோயாளிகள் உள்ளனர். எனவே இந்த அவசர நிலையில் உடனடியாக அரசு தலையிட்டு தனியார் மருத்துவமனைகளின் அதிக கட்டண வசூலுக்கு எதிராக உரிய நெறிமுறைகளை வரைமுறை செய்ய வேண்டும். அப்பொழுது தான் குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் குணம் பெற முடியும்.

போதிய பணம் இல்லை என்ற காரணத்தால் பொதுமக்களுக்குச் சிகிச்சை மறுக்கப்படுவது என்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் எடுத்தும் கூறியுள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது தனியார் மருத்துவத் துறையின் கடமையாகும். 
 

nakkheeran app


மேலும் இதுபோன்ற ஒரு பெரு நோய்த் தொற்று சமயங்களில் அரசின் பொதுச் சுகாதாரத் துறைக்கு தோளோடு தோள் நின்று ஒத்துழைத்து உதவ வேண்டியது தனியார் மருத்துவத் துறையின் மீது உள்ள காலத்தின் கட்டாய கடமையாகும்.

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குஜராத் உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனை கட்டணங்கள் தொடர்பாக வழிகாட்டு உத்தரவுகளை வழங்கி உள்ளது. மராட்டிய அரசும் இது தொடர்பான ஒழுங்கு விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அத்தகைய விதிமுறைகள் வெளியிடப்படவில்லை.

ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் அரசு பொது மருத்துவமனைகள் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுக்காகப் பள்ளி, கல்லூரிகளைத் தேடி அரசு ஓடுகின்றது.

எனவே பெருந்தொற்று நோய்கள் சட்டம் 1897, மற்றும் இயற்கைப் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும் 1MC இந்திய மருத்துவக் கழகம் ஒழுங்கு விதிமுறைகள் 2002, மருத்துவமனைகள் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2010 மூலம் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க உத்தரவிடக் கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் வேண்டுதல்:

1. தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள்/ பல்நோக்கு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் குறைந்த பட்சம் 50 விழுக்காடு கரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு ஒதுக்க அரசு உரிய அறிவிக்கையை வெளியிட இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும்.

2. மேற்கூறிய மருத்துவ மனைகளில் படுக்கை எண்ணிக்கை கிடைக்கும் நிலைகுறித்து கண்காணிக்க ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுக் குறைந்தது வாரம் ஒரு முறை பொது மக்களுக்கு அது அறிக்கை வெளியிட வேண்டும்.

3. மேலும் COVID 19 நோய் சிகிச்சைக்கான கட்டணத் தொகையை  ஒழுங்குமுறைப் படுத்தும் அறிவிக்கையை வெளியிட வேண்டும். அதில் சிகிச்சை கட்டணம் குறித்த தலைப்பு வாரியாக விரிவான கட்டணத் தொகை விளக்கப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். மேலும் நோய் சிகிச்சைக்கான குறைந்த பட்ச தர நிர்ணயமும் வெளியிடப்பட வேண்டும். இவ்வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் அப்ரார் அஹ்மது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.