Skip to main content

‘’கரோனா கால முறைகேடுகளுக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்!‘’ -எடப்பாடியை தாக்கும் காங்கிரஸ் எம்.பி. !

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

ddd

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத் சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில், முதல்வர் எடப்பாடி அரசின்  மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.

 

பத்திரிகையாளர்களிடம் பேசிய டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி. , ‘’ தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றபின் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களையும், சாதனைகளையும் செய்திருப்பதாக ஊடகங்களில்   விளம்பரப்படுத்தி வருகிறார். ஜெயலலிதாவின்  சாதனைகளை முறியடித்து விட்டேன் என்பது போல தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறார். இது அனைத்தும் வெறும் மாய ஜாலம் தான்.

 

கடந்த 2019, பிப்ரவரி மாதம் 11ம் தேதி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை  கூட்டத்தில் 110-விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், ‘கஜாபுயல் தாக்கத்தினாலும் பருவ மழை பொய்ததின் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் கிராமப்புறத்திலுள்ள சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்களுக்கும், நகர்ப்றத்திலுள்ள சுமார் 25 லட்சம் ஏழை குடும்பங்களுக்கும் என மொத்தம் 60 லட்சம் குடும்பங்களுக்கும் வழங்கப்படும். இதற்காக 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் ’’ என்று அறிவித்திருந்தார்.

 

ஆனால், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த இரண்டு தொகுதிகள் தவிர்த்து, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும் என்றும் சொல்லியிருந்தார் முதல்வர் எடப்பாடி. இந்த அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலையும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலையும் மனதில் வைத்துதான் வழங்கப்படவுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினோம். இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்வரின் அறிவிப்புக்கு தடை விதித்ததுடன், நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. இதனால், அந்த 2,000 ரூபாய் அப்போது வழங்கப்படவில்லை. அதேசமயம், தேர்தல் முடிந்ததும், அந்த 2000 ரூபாயை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை வழங்கவில்லை.  

 

இதற்கிடையே, கொரோனா நோய் தொற்று பரவலால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அவர்களுக்கு வெரும் 1000 ரூபாய் மட்டுமே வழங்கியது. ரேசன் பொருட்கள் கூட 5 மாதங்களுக்கு மட்டுமே வழங்கினார்கள். மக்கள் மீது உண்மையாகவே முதல்வர் எடப்படிக்கு அக்கறை இருக்குமானால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, சிறப்பு நிதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,200 கோடி ரூபாயை கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு வழங்கியிருக்கலாம். ஆன, அதையும் செய்யவில்லை. அந்த 1,200 கோடி ரூபாய் என்னவானது ?            

 

அதேபோல, கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியம் உள்ளிட்ட 14 அமைப்புச்சார வாரியங்களில் பதிவு பெற்ற சுமார் 27 லட்சம் தொழிலாளர்கள் கொரோனாவால் வேலையிழந்து தவித்தனர். அவர்களுக்கு தலா 1000 ரூபாய் என 2 முறை அறிவிக்கப்பட்டு அவர்கள் வங்கி கணக்கில் டொபாசிட் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.ஆனால், வாரியத்தில் தங்கள் உறுப்பினர் கார்டை புதுப்பிக்கவில்லை என்று சொல்லி சுமார் 10 லட்சம் பேருக்கு இதுவரை எந்த நிவாரணம் உதவியும் கொடுக்கப்படவில்லை.

 

கட்டுமானத் தொழிலாளர்களின் சேம நல நிதி தொகுப்பிலிருக்கும் தொகையை எடுத்து, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அந்த வகையில் டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ரூபாய் 5 ஆயிரம் வீதம் வழங்கியது. ஆனால், தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான சேம நல நிதி தொகுப்பில்  3,700  கோடி நிதி இருந்தும்  வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டுள்ளன.

 

தற்பொழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படப்போவதாக செய்திகள் வருகிறது. இது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி வழங்கப் போவதாக ஆளும் கட்சியில் உள்ளவர்களே கூறி வருகிறார்கள். எனவேதான் சர்க்கரை கார்டுதாரர்களை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று 5 ஆம் தேதி அறிவிப்பு  வெளியிடப்பட்டு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

 

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலே முடங்கியிருந்த மக்களுக்கு அப்போதே இந்த நிதி உதவியை ஏன் கொடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய கேள்விஎனவேஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்கெனவே 2019-ல் அறிவித்த ரூபாய் 2 ஆயிரம்இப்போது வழங்கவிருப்பதாக சொல்லப்படும்  ரூபாய் 2 ஆயிரம், மேலும் ஆயிரம் ரூபாய் சேர்த்து ஆக மொத்தம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 வழங்க வேண்டும்.

 

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மீட்பதற்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக்குழு 275 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதில் மிக முக்கியமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்களின் சேம நல நிதி ரூபாய் 3,700 கோடியிலிருந்து  நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும்கிராமத்திலுள்ள 100 நாள் வேலை போன்று நகரத்திலும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற எண்ணற்ற பரிந்துரைகளை கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால் அந்த பரிந்துரைகளை இதுவரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. அப்புறம் எதற்கு இத்தகைய பொருளாதார கமிட்டிகளை அமைக்கிறீர்கள் ? அதனால் கமிட்டி என்பதே கண் துடைப்பாகவே இருக்கிறது.

ddd

 

 

கொரோனா காலத்தில் அடித்ததோ கொள்ளையோ கொள்ளை. கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளிலும், அரசு ஒதுக்கிய மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. அவர்களுக்கு உணவுகளை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், என்ஜிஓக்கள் (சூழுடீ க்கள்) , தொண்டு நிறுவனங்கள் உணவுகளை வழங்கினார்கள். ஆனால் இதற்கெல்லாம் கணக்கில்லாமல் அரசே உணவு வழங்கியதைப் போல் பில் போட்டு எடுத்து கொண்டார்கள் என்று பேசப்படுகிறது. அதே போல் முகக்கவசம், சானிடைசர் கேன் கனக்கில் வழங்கினார்கள். ஆனால் இதற்கும் அரசு கணக்கிலேயே வரவு வைத்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. அதே போன்று அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் வீட்டுக்கு செல்லாமல் தனியார் தங்கும் விடுதிகள்,ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அதற்கு கொடுத்த வாடகையும் இருமடங்காக கணக்கு போட்டு எடுத்து கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது.

 

கொரோனா காலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மக்களுடைய துன்பத்தில் கூட தங்களை வளமாக்கிக் கொண்டவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள் என்பது தெரியும். மக்கள் பிரதிநிதியான எங்களிடம்  இந்த அரசைப் பற்றிய பல்வேறு முறைகேடுகளை பொதுமக்கள்  தெரிவித்து வருகிறார்கள். எனவே, கொரோனா காலத்தில் நடந்த முறைகேடுகளை ஆதாரங்களுடன் நாங்கள் பாராளுமன்றத்தில்  எடுத்துரைக்க இருக்கிறோம் ‘’ என்று முதல்வர் எடப்பாடியின் அரசு நிர்வாகத்தை கடுமையாக தாக்கினார் விஷ்ணுபிரசாத் எம்.பி. !

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.