Skip to main content

வரலாற்றை மறந்து ஆவேச முழக்கமிடும் பழனிசாமிக்கு எடப்பாடியில் டெப்பாசிட் கூட கிடைக்காது... எஸ்.எஸ்.சிவசங்கர்!

Published on 15/09/2020 | Edited on 16/09/2020

 

eps

 

இன்று (15-09-2020) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் 'நீட்' குறித்த விவாதம் அனல் பறந்தது. நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது, நீட் தேர்வுக்கு தி.மு.க தான் காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஆகியுள்ளது.

 

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

 

''நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட 13 மாணவர்கள் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். 

 

அதற்குப் பதில் அளிக்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதை சில தொலைக்காட்சி சேனல்கள் "முதலமைச்சர் ஆவேசம்" எனத் தலைப்பிட்டு ஒளிபரப்பின. 

 

பொய் பேசும் பதற்றம் அவர் முகம் முழுதும் அப்பட்டமாகத் தெரிந்தது. சட்டப்பேரவை தலைவரான சபாநாயகரின் அதிகாரத்தைக் கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பதில் தர அனுமதி தராமல், தான் மட்டுமே பேசி, அ.தி.மு.க உறுபினர்களின் மேசைத் தட்டல் சத்தத்தைக் கொண்டு வாதத்தில் வென்று விட்டதாக நினைத்தால், அதைவிட முட்டாள்தனம் இல்லை.

 

தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் மட்டுமல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும் நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். 

 

2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அழுத்தத்தால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் முகம் இன்னும் தமிழ்நாட்டு மக்கள் மனதை விட்டு அகலவில்லை. இந்த ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சுபஸ்ரீ, விக்னேஷ், ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோதிலால் ஆகிய மாணவர்களின் மறைவின் தீ அணையாத நிலையிலேயே இப்படிப் பொய் பேசத் துணிந்திருக்கிறார் என்றால் எடப்பாடி மக்களை மக்களாக நினைக்கிறாரா என்பதே சந்தேகம் உள்ளது.

 

Ad

 

தன்னிடம் கமிஷன் பங்கு பெறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் என மக்களை நினைத்து விட்டார் போல எடப்பாடி, அதனால் தான் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

 

சட்டசபையில் ஓங்கி, ஓங்கிக் கத்தி குரல் உயர்த்தி பேசி, அதைத் தொடர்ந்து ஊடகத்தில் ஒளிபரப்பவைத்தால் நாட்டு மக்கள் நம்பி விடுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி நம்பிக் கொண்டிருக்கிறார் போலும். எடப்பாடி முதலமைச்சர் என்பதையே அ.தி.மு.கவைச் சேர்ந்த முக்கால்வாசி பேரே இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

 

Sivasankar.SS

 

கூட்டுக் கொள்ளை அடிக்கும் அ.தி.மு.க அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், காண்ட்ராக்டர்களும்தான் இவரை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மீதி அ.தி.மு.கவினர் எடப்பாடியை அ.தி.மு.கவின் தற்காலிக குத்தகைதாரராக தான் பார்க்கிறார்கள். நாட்டு மக்களோ ஒரு கமிஷன் தரகு மண்டி முதலாளியாகத் தான் பார்க்கிறார்கள்.

 

மக்கள் வாக்களித்த எம்.எல்.ஏக்கள் தான் எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவுக்கு தான் வாக்களித்தார்கள். எடப்பாடி அந்த சட்டமன்ற உறுப்பினர்களை கூவாத்தூர் ஏலத்தில் பேசி முடித்து முதல்வர் ஆனவர் என்பதை மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

 

நீட் தேர்வு மட்டுமல்ல, மின் துறையில் உதய் திட்டத்தை அனுமதித்தது, ஒரே நாடு ஒரே ரேஷன் அமல்படுத்தியது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை எதிர்க்காதது, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காதது என தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வேட்டையாட அனுமதித்திருப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

 

Nakkheeran

 

இன்னொரு பக்கம் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதையும், தி.மு.கழகம் தொடர்ந்து போராடி வருவதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

1991 - 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில், சட்டப்பேரவையில் ஒரே ஒரு தி.மு.க உறுப்பினர் தான், பரிதி இளம்வழுதி. அவரையும் தூக்கி வெளியே போட்டு விட்டு, நினைத்ததை எல்லாம் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பேசி வந்தார். தி.மு.கவை தேசவிரோத கட்சி, தீய சக்தி என நேரம் கிடைக்கும் போதெல்லாம் சபையில் முழங்கினார். அதுவே தினம், தினம் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக வரும். தி.மு.க என்ற ஒரு கட்சி இல்லாத போன்ற மாயையை ஏற்படுத்தினார். இரும்பு மங்கை தோற்றத்தை தனக்கு கட்டமைத்தார்.

 

1996 தேர்தலில், ஆனானப்பட்ட அந்த இரும்பு மங்கை ஜெயலலிதாவே தன் தொகுதி பர்கூரில் தோற்றுப் போனார். 4 இடங்களில் தான் அ.தி.மு.க வென்றது. தி.மு.க ஆட்சிக்கு வந்தது. வரலாற்றை மறந்து "ஆவேச முழக்கம்" இடும் பழனிசாமிக்கு எடப்பாடியில் டெப்பாசிட் கூட கிடைக்காது. 

 

எனர்ஜியை வேஸ்ட் செய்ய வேண்டாம்!'' என்றார் தனக்கே உரிய பாணியில் எஸ்.எஸ்.சிவசங்கர். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.