Skip to main content

“ஒழுங்கீனமும் முறைகேடும் நடந்தால் சர்வாதிகாரியாக மாறுவேன்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Chief Minister M.K.Stalin gave a stern warning in the conference of local body representatives.

 

“ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்” என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார். 

 

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டை பகுதியில், திமுகவைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். அவர் பேசியதாவது; “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று நிறைய பெண்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். பெண்களுக்கு பயமோ, கூச்சமோ, தயக்கமோ இருக்கக் கூடாது. தரப்பட்ட பொறுப்புகளை நீங்களே கையாள வேண்டும். தரப்பட்ட பொறுப்பை உங்கள் கணவரிடம் ஒப்படைத்துவிடாதீர்கள். நிமிர்ந்த நடை; நேர்கொண்ட பார்வை; நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டவர்களாக தன்னிச்சையாக செயல்பட வேண்டும். 


சட்டப்படி, விதிமுறைப்படி, நியாயத்தின்படி மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கிறேன். கட்சி ரீதியாக மட்டுமல்ல; சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் அதிகப்படியான ஜனநாயகவாதியாக மாறிவிட்டேன் என்று எனக்கு நெருக்கமான சில நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். அனைவரின் கருத்தையும் கேட்டு, அவர்கள் கருத்துக்கும் மதிப்பளித்து செயல்படுவதுதான் ஜனநாயகம். யாரும் எதையும் செய்யலாம் என்பது ஜனநாயகம் அல்ல. அப்படி நான் மாறிவிடவும் இல்லை. 


ஒழுங்கீனமும், முறைகேடும் தலை தூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமின்றி,  இங்குள்ள அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். நான் ஒன்றும் ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்க தாம்பாளத்தில் வைத்து தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி எனக்குத் தரப்படவில்லை. 50 ஆண்டு கால உழைப்பின் பலன் இது. கோடிக்கணக்கான தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பின் பயன் இது. 


என்னை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்தக் கட்சியை ஒப்படைத்து இருக்கிறார்கள். என்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆட்சியை ஒப்படைத்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதே திமுக கையில்தான் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் செய்து விடக்கூடாது. 


யாரோ ஒரு சிலரின் தவறான செயல்களின் காரணமாக தமிழ்நாட்டின் முதலமைச்சரான நானோ, கோடிக்கணக்கான தொண்டர்களோ அவமானத்தால் தலை குனியக் கூடிய நிலையை யாரும் உருவாக்கி விடக்கூடாது என தாழ்மையோடு உங்களை கேட்டுக்கொள்கிறேன். பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள், முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாம். உங்களில் ஒருவனான எனது சகோதர, சகோதரிகள் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து செயல்படுங்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள் தமிழினத்தின் இனமானம் காக்க, சுயமரியாதை காக்க, முற்போக்கு சிந்தனையோடு பேரறிஞர் அண்ணாவின் பின்னாலும் கலைஞர் பின்னாலும், ஏன்... இன்று என் பின்னாலும் அணி திரண்டு இருப்பவர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 


பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை கழகத்தினருக்கு அழகு. இதை கட்டளையாகச் சொன்னார்கள். இந்த மூன்றையும் மூச்சென கடைபிடியுங்கள். உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு வந்திருக்கக் கூடிய உங்களுக்கு முதலில் தேவை ஒற்றுமை. உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோர் ஒற்றுமையோடு இருந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அப்படி ஒற்றுமை இல்லாவிட்டால் அனைத்துப் பணிகளும் முடங்கிப் போய்விடும். மேயரும், துணை மேயரும் பேச மாட்டார்கள். நகராட்சித் தலைவருக்கும் கவுன்சிலருக்கும் ஆகாது. பஞ்சாயத்துத் தலைவருக்கு உள்ளேயே பஞ்சாயத்துதான். இந்த செய்திகள் எல்லாம் என் கவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதற்கு அறவே இடம் கொடுக்கக் கூடாது. உங்களில் சிலருக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒற்றுமையுடன் மக்கள் பணி ஆற்றுங்கள். ஒற்றுமையாக இருங்கள். ஊருக்காக உழையுங்கள்.


சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, மொழிப்பற்று, இன உரிமைகள், மாநில சுயாட்சி, கூட்டாட்சி கொண்டதுதான் இந்தியா. அடிப்படை கருத்தியலைக் கொண்டதுதான் திராவிட இயக்கம். அந்த கருத்தியலை உள்வாங்கி செயல்படக்கூடிய திராவிட மாடல் அரசுதான் இந்த அரசு. இந்தக் கோட்பாடுகளை நீங்கள் முழுமையாக அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்க வேண்டும். 


நகராட்சி தலைவருக்கு, பேரூராட்சி தலைவருக்கு, வார்டு கவுன்சிருக்கு இவையெல்லாம் எதற்கு என்று நீங்கள் யாரும் கருத மாட்டீர்கள் என நான் நினைக்கிறேன். திராவிட இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் இந்த கோட்பாடுகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதை செயல்படுத்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும். சாலைகள் போடுவதோ, தண்ணீர் தொட்டி கட்டுவதோ, பாலங்கள் கட்டுவதோ, கழிவுநீர்க் கால்வாய்கள் அமைப்பதற்கான பணிகளோடு உங்கள் பணி முடிந்து விடுவதில்லை. சமத்துவப் பாதைகள் அமைப்பதும், சகோதர பாதை அமைப்பதும், சமூகத்தின் கழிவுகளை துடைப்பதும் உங்கள் கடமைதான். அதனால்தான் இதனை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். நம் இலக்குகளை நோக்கி உழையுங்கள். 


அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறைகளின் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி வரிசையில் அனைத்து சமூகங்களின் வளர்ச்சி என்று அடிக்கடி சொல்லி வருவது இதுதான். அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல் அனைவருக்குமான வளர்ச்சியை நீங்கள் உருவாக்கி விட முடியாது. அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று நீங்கள் பேச முடியாது; கீழடியில் 3200 ஆண்டுக்கு முன்பே தமிழன் எழுத்தறிவோடு இருந்தான் என்று பெருமை பேச முடியாது. 


பெரியார் பிறந்த நாளன்று சமூகநீதி உறுதிமொழியையும், அம்பேத்கர் பிறந்த நாளன்று சமத்துவ நாள் உறுதொழியையும் எடுத்துக்கொள்ளும் தகுதியை நாம் பெற்றாக வேண்டும். இந்த தகுதியை கொண்டவர்கள்தான் திமுகவை சேர்ந்தவர்கள். எது திராவிட மாடல் என்று கேட்பவர்களுக்கு இதுதான் என்னுடைய பதில். பதவி, பட்டம், பொறுப்பு, மாலை, பாராட்டு ஆகிய எல்லாமே கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடிய பாதையில் வந்து போகின்றவை. கொள்கையும் கோட்பாடும்தான் நிரந்தரமானது.  


பெரியார், அண்ணா, பேராசிரியர், கலைஞர் ஆகியோர் தங்களை மறந்து தமிழ்ச் சமூதாயத்திற்காக உழைத்தார்கள். அவர்களின் உழைப்பால் உருவான இயக்கம், இந்த இயக்கம். இது இயக்கம். அதனால்தான் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நமது இயக்கம், தமிழ்நாட்டின் தமிழினத்தின் விடியலுக்காக இருந்தாக வேண்டும். இந்தக் கழகம் உருவாக்க நினைப்பது, தலை நிமிர்ந்த தமிழகம். உன்னதமான தமிழகம். அனைத்திலும் மேம்பட்ட தமிழகம். அத்தகைய தமிழகத்தை உருவாக்க என்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள். 


இந்த ஓராண்டு காலத்தில், தேர்தல் அறிக்கையில் சொன்னது போல 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இதெல்லாம் சரித்திர சாதனைகள். இந்த சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். நாம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கும் திட்டங்களால் பலன் பெற்ற மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். வீட்டுக்கு வீடு சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள். தெருமுனைக் கூட்டம் போடுங்கள். 


நாம் பெற்றிருப்பது பதவி அல்ல; பொறுப்பு. பதவி என்பது தோளில் போடக்கூடிய  துண்டு. கொள்கை என்பது இடுப்பில் கட்டக்கூடிய வேட்டி என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணன் காட்டிய பாதைதான் நமது பாதை. அந்தப் பாதையில் மக்கள் உறுதியேற்றுக் கொள்ளுங்கள். மக்களின் பாராட்டைப் பெறுங்கள். திமுகவுக்கும் தமிழகத்திற்கும் பெருமையைப் பெற்றுத் தாருங்கள்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.