Skip to main content

“மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொழுதுபோக்காக உட்கார்ந்துவிட்டு திரும்பி வந்து விடுவார்கள்..” - ஜி.கே.வாசன்

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

“Chief candidate; BJP Will express in their meeting ”- GK Vasan


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வாரியாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின், மாவட்ட வாரியாக மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். அதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு  வியூகங்களை அமைத்து வருகின்றன. அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரும் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ளனர்.


த.மா.கா., அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி 3ஆம் தேதி கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த ஈரோட்டுக்கு வந்தார்.

 

ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கு த.மா.கா. சார்பில் மண்டலக் கூட்டங்களைத் தொடங்கியுள்ளோம். நேற்று தென் மண்டல கூட்டம் வெற்றிகரமாக நடந்தது. இன்று கோவை மண்டல கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. நாளை திருச்சியில் டெல்டா மண்டல கூட்டம் நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை சென்னை மண்டல கூட்டம் சென்னையில் நடக்கவுள்ளது. அதன்பின், இந்த மாதத்தில் தமிழகத்தை இரு மண்டலமாகப் பிரித்து த.மா.கா. இளைஞர் அணியின் செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது.

 

சட்டப்பேரவைத் தேர்தலில் த.மா.கா. மற்றும் கூட்டணி கட்சிகளுடைய வெற்றி வாய்ப்பை உறுதி செய்துகொள்வதே இந்தக் கூட்டங்களின் நோக்கமாகும். தேர்தல், அதற்குண்டான தொகுதி எண்ணிக்கை இவற்றைவிட கூட்டணி வெற்றி பெற வேண்டும்; அதுதான் எங்கள் இலக்கு மற்றும் நோக்கமாகும். தொடர்ந்து படிப்படியாக த.மா.கா. தனது பலத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளை, எண்ணிக்கைகளைப் பெற்று அதில் முழு வெற்றியைப் பெற வேண்டும் என்று நாங்கள் எங்கள் செயல்பாட்டிலே இறங்கியுள்ளோம்.

 

தென்மண்டல கூட்டம் மற்றும் இன்றைய கோவை மண்டல கூட்டத்திலும், எந்தெந்த பகுதியில், எந்தெந்த மாவட்டத்தில், எந்தெந்த தொகுதியில் நம் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் நிற்கக்கூடிய வாய்ப்பு, நிலை போன்றவற்றை அறிந்து, அந்தந்த பகுதியில் அவர்களது செல்வாக்கு, இயக்கப் பணிகளைத் தெரிந்துகொண்டு, அந்தந்த தொகுதிகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அடித்தளப் பணியைத் தொடங்க வேண்டும் என்றும், மற்ற தொகுதிகளில், நம்முடைய கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறக் கூடிய நிலையை ஏற்படுத்த பணிபுரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளேன்.

 

தமிழகத்தில், மக்களுடைய மனநிலையைத் தொடர்ந்து பிரதிபலிக்கிற ஆட்சியாக, அ.தி.மு.க. அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பொதுவாக எல்லா மாநிலத்திலும் ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சியாகத்தான், எதிர்கட்சிகள் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் செயல்படும். ஆனால், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எதிர்கட்சியாக இல்லாமல், மக்களுக்கே எதிர்க்கட்சியாகச் செயல்படக் கூடிய நிலையிலேயே உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிரிக் கட்சியாகச் செயல்பட்டால் பராவாயில்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து அடுக்கடுக்காக, தவறான செய்திகளைப் பரப்புவது, பொய்ப்பிரச்சாரம் செய்வதை வழக்கமாக வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்ற நினைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல. இதன் காரணமாக தமிழகத்தின் எதிர்கட்சி, இன்றைக்கு வாக்காளர்களுக்கு எதிரிக்கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது.

 

கடந்த மக்களவைத் தேர்தலில் த.மா.கா. தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டது. அதனால், எங்கள் கூட்டணியில் தனிச் சின்னம் என்பது போன்ற சங்கடங்கள், பிரச்சனைகள் எல்லாம் இல்லை. தி.மு.க. கூட்டணியில்தான் அவை உள்ளன. சட்டமன்றத் தேர்தலில் இன்னும் அது தொடர்கிறதாக தெரிகிறது.

 

வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை விவசாயிகளை ஒருசிலர் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களுடைய லாபத்திற்காக விவசாயிகள் நஷ்டப்பட்டால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். விவசாயிகளிடம் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் சந்தேகங்களை, அச்சங்களைத் தீர்த்து வருகிறது. மாற்று இருந்தால் செய்வதற்கான பேச்சுவார்த்தையைத் தொடரலாம் என்று சொல்கிறது. ஆனால், கடந்த 10 நாட்களாக எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக மட்டுமல்லாமல், தரகர்களோடு சேர்ந்துகொண்டு விவசாயிகளைக் குளிரிலே பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடக்கவுள்ள நிலையில், பெரும்பாலான விவசாயச் சங்கங்கள் அந்த கூட்டத்திற்கு வருகிறார்கள். ஏற்கனவே நடந்த கூட்டங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது, பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த 99 சதவீதத்தினர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அப்பாவி விவசாயிகளை, எதிர்கட்சிகள் அரசியல் நோக்கத்திற்காக பழிவாங்க வேண்டாம். அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெற்றி காண வேண்டும். சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் நலன் சார்ந்த அரசாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மாநில அரசு பல கோடி ரூபாய்க்கு இடுபொருட்களை வாங்க நிதியுதவி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாஜ்பாய் பிறந்தநாளின்போது மத்திய அரசு, விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் சலுகைகளைக் கொடுத்துள்ளது. விவசாயிகளின் வளர்ச்சி, வாழ்வாதாரத்தை உயர்த்தும் அடிப்படையிலேயே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் மாற்றங்களைக் கொண்டுவர அரசு தயாராக இருக்கும்போது, விவசாயிகள் சுமூகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

தமிழக முதல்வர் வேட்பாளர் குறித்து அகில இந்திய பா.ஜ.க. தங்களுடைய கூட்டத்தில் வெளிப்படுத்துவார்கள். அந்த அதிகாரம் எனக்குக் கிடையாது. பா.ஜ.க.தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். எங்களது கூட்டணி வெற்றிக் கூட்டணி, அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் வரும்போதெல்லாம், மக்களை ஏமாற்றுவதற்கு ஊழல் புகார் கூறினால், அதை வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டு எதிர்கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்றால், யார், யாரை ஏமாளியாக்குவார்கள் என்பது தேர்தல் முடிவின்போது தெரியும்.

 

இந்த ஆட்சி, அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்ந்து செய்யக்கூடிய பணிகள், தொடர் அறிவிப்புகள், முதல்வர் - துணைமுதல்வர் செயல்பாடு, சுற்றுப்பயணத்தைப் பார்க்கும்போது, தமிழக மக்களின் எண்ணங்களைத் தொடர்ந்து பிரதிபலிக்கின்றனர் என்பதிலே மாற்றுக் கருத்து கிடையாது. பல கூட்டங்களில் துணை முதல்வர் பங்கேற்றுள்ளார். இந்த தேதியில்தான் பிரச்சாரம் ஆரம்பிக்க வேண்டும் என்று கணக்கு எந்தக் கட்சிக்கும் கிடையாது. எந்த கூட்டணிக் கட்சியும் இன்னும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரு கணக்கு உண்டு. பொதுவாக, அரசியல் களம், தேர்தல் என்றால் எப்படி நடக்கும் என உங்களுக்குத் தெரியும். இந்தமுறை சிலர் முன்னதாகத் தொடங்குகின்றனர்.

 

தே.மு.தி.க. எவ்வளவு சீட் கேட்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. த.மா.கா.வின் பலத்திற்கு ஏற்றவாறு எல்லா மாவட்டங்களிலும், தொகுதிகளைப் பெறும் வகையில் அ.தி.மு.க.வுடன் கலந்து சுமூகமான முடிவினை ஏற்படுத்துவோம் என்று எங்கள் கட்சி மண்டல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் த.மா.கா.வின் விருப்பம். த.மா.கா.வின் அரசியல் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை பொதுவாழ்விற்கு வருவார் என்று ரஜினிக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அவர் வரவில்லை என்பதற்கான காரணமும் சரியானது. இந்த தேர்தலில் நல்லவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

 

கரும்பு விவசாயிகளுக்குப் பலகோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ளது. அதை அவ்வப்போது படிப்படியாக அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் அது போதாது. விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிலுவைத்தொகையைக் கொடுக்க வேண்டும் என நாங்களும் வலியுறுத்துகிறோம். எந்த கட்சியும் எந்த தொகுதி, எத்தனை இடம் என வெளிப்படையாக நிபந்தனை விதித்து கூட்டணியில் சேர்வதில்லை. அதற்கென ஒரு முறை இருக்கிறது, ஒரு நேரம் இருக்கிறது. அதைப் பின்பற்றுவதுதான் நல்ல கூட்டணிக்கு அழகு. நாங்க அதைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறோம்.

 

புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தொடர்ந்து நிதி உதவியை மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டே இருப்போம். உலக அளவில் கரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஜாக்கிரதையாக, பொறுப்பாக, மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.


அரசுக்கு நிறைய தகவல்கள் கிடைத்திருக்கும். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. ஒரே கட்டமாக தேர்தலை நடத்தலாம் என தெரிவித்திருக்கலாம். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இரண்டு கட்டமாகக் கூட நடத்தலாம் என்பது எங்களது நிலைப்பாடு.

 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் - தி.மு.க. வெற்றிபெற்றால் ஒரு யோசனை, தோற்றால் ஒரு யோசனை சொல்வார்கள். அது மக்களுக்குத் தெரியும். அவர்கள் இந்த மாநிலத்தில் ஒன்றும், அடுத்த மாநிலத்தில் வேறொன்றும் சொல்வார்கள். தேவேந்திர குல வேளாளர் எனப் பல பிரிவுகளை இணைத்து அங்கீகாரம் வழங்க எதிர்ப்பு இருந்தால், அது நியாயமான காரணமாக இருந்தால், அரசு பரிசீலித்துச் செய்ய வேண்டும்.

 

கிராம வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதுதான் முறை. இந்த கிராம சபையை, தி.மு.க. தேர்தலுக்காக அரசியல் சபையாக மாற்ற வேண்டுமென நினைத்தால், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கிராமசபை என்ற பெயரிலே, அவர்கள் மக்களை அங்கே கட்டாயப்படுத்தி உட்கார வைத்தாலும் கூட, மக்கள் அங்கே பொழுதுபோக்காக உட்கார்ந்துவிட்டு திரும்பி வந்துவிடுவார்கள். அவர்களது அரசியல் பிரச்சாரங்களைக் கிராம மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. அது தேவையற்ற ஒன்று. வேனில் பேசலாம்; நேராக கூட்டத்தில் பேசலாம்; இல்லாத ஒன்றை ஏன் ஏற்படுத்துகிறீர்கள்? ஏழை மக்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு கொடுத்தால், ரூ.5,000 கொடுக்க வேண்டும் என அதைத் தடுக்கின்றனர். நீதிமன்ற வாசல் வரை போகிறார்கள். மினி கிளினிக் அமைக்கப்பட்டதால் சிறு பகுதியில் வாழும் ஏழை மக்கள் உடல் நலம், சுகாதாரம் காக்கப்படும். அதையும் தடுக்க வேண்டும் என தி.மு.க. நினைத்தால், இவர்கள் அ.தி.மு.க.விற்கு எதிர்கட்சியா அல்லது மக்களுக்கா எனும் சந்தேகம் வந்துவிடும்.

 

ஈரோடு தேசிய நெடுஞ்சாலை அருகே சித்தோட்டில் 200 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு கிராமம் அமைக்க வேண்டும். பவானியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். ஊராட்சிக்கோட்டை புதிய குடிநீர் திட்டப் பணிகளை விரைவுபடுத்தி உடனடியாக புதிய குடிநீர் இணைப்புகளை வழங்கிட வேண்டும். பவானிசாகர் அணை அமையக் காரணமான தியாகி ஈஸ்வரனுக்கு சிலை அமைக்க வேண்டும்.

 

அவிநாசி - அத்திக்கடவு திட்டப்பணி துரிதமாக நடக்க காரணமான தமிழக முதல்வருக்கு நன்றி. இதில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும். கோவை - பவானி இடையே இருபுறம் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். கரோனாவால் திருப்பூர் பனியன் தொழில் பாதிப்பு, மூலப்பொருள் விலையேற்றம் போன்றவை கவலையளிக்கிறது. நூல் விலை, உப விலையேற்றம் உள்ளது. மத்திய அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். 15 லட்ச தொழிலாளர்கள் இதனை நம்பியிருக்கின்றனர். திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். நிலுவையில் உள்ள இ.எஸ்.ஐ பணியை முடிக்க வேண்டும். ஈரோடு, மேட்டூர் உபரிநீர் திட்டம் மூலம் குளம், குட்டைகளை நிரப்ப வேண்டும். சாயக்கழிவு காவிரி ஆற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும். கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு அடையாள அட்டை, வங்கி, வாழ்வாதாரம் என பல்வேறு கோரிக்கைகளை மக்கள் என்னிடம் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் அளித்த மனுவை மாநில துறை அமைச்சரிடம் கொடுக்கவுளோம்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.