Skip to main content

சீமான் மீது போட்ட வழக்கைக் கைவிட வேண்டும்: பெ. மணியரசன் 

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

 

சீமான் மீது பதிவு செய்த வழக்கைக் கைவிடுமாறு பெ. மணியரசன் முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

  

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் 12.10.2019 அன்று சொற்பொழிவாற்றும் போது, முன்னாள் தலைமை அமைச்சர் இராசீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை ஆதரித்துப் பேசியது சரியல்ல; அவ்வாறான பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.


 

P. Maniyarasan



சீமானின் இந்தப் பேச்சைக் கண்டனம் செய்வதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அந்தப் பேச்சை வைத்துக் கொண்டு, அவர் மீது தேசத் துரோக வழக்குப் போட வேண்டும்; அவரைச் சிறையில் அடைக்க வேண்டும்; அவர் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ச.க. – காங்கிரசு கட்சியினரும், திராவிடவாதத்தை ஆதரிக்கும் தனிநபர் சிலரும் கோருவது அவர்களின் மன வன்மத்தையே காட்டுகிறது.


மேற்படி பேச்சுக்காக காங்கிரசுக்காரர்கள் கொடுத்த புகாரை ஏற்று, தமிழ்நாடு காவல்துறை சீமான் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 504 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது சரியல்ல. எந்த சமூகப் பிரிவுக்கும் எதிராக வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டும் பேச்சை சீமான் பேசவில்லை. எனவே, இ.த.ச. 153ஏ பொருந்தாது. இப்பேச்சால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இ.த.ச. 504 பிரிவும் பொருந்தாது.

 

கடந்த சில நாட்களாக – இச்சிக்கலை பூதமாகப் பெரிதுபடுத்தி தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க பா.ச.க.வினரும், காங்கிரசாரும் முனைகின்றனர். தமிழ்நாடு அரசு கவனமாகச் செயல்பட வேண்டும்.

 

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றது சரி என்று கூறி, கோட்சேயை தலைவர் என்றும், ஈகி என்றும் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. வடமாநில அரசுகளும் எடுக்கவில்லை. இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்களின் ஒளிப்படங்கள் “தியாகிகளாக” அமிர்தசரஸ் பொற்கோயிலில் பொறிக்கப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பா.ச.க.வினரும், காங்கிரசாரும் ஒரு தேர்தல் கூட்டத்தில் ஆவேசத்தில் பேசிய பேச்சுக்காக சீமானை சிறையில் தள்ள வேண்டுமென்றும், அவர் கட்சியை தடை செய்ய வேண்டுமென்றும் கூக்குரலிடுவது திட்டமிட்ட தமிழினத் துரோகச் செயலாகவே கருத வேண்டியுள்ளது.



 

தமிழ்நாடு காங்கிரசுக்காரர்கள் கொடுத்த புகாரை வைத்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத் தலைமை அலுவலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு விவரங்கள் கோரி கடிதம் அனுப்பியது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பலியாவது போல் இருக்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்த வழக்கைக் கைவிடுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

‘கரும்பு விவசாயி’ சின்னம் பெற்ற வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

இத்தகைய சூழலில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் கந்தன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் சுட்டிக்காட்டி கந்தனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரபு சங்கர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தனின் வேட்பு மனுவை நிராகரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.