Skip to main content

தொகுதிகள் மாறி வாக்களித்த வேட்பாளர்கள்...

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

ddd

 

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. திமுக, அதிமுக, பாமக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக உட்பட பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 136 பேர் போட்டியில் உள்ளனர். இவர்கள் கடும் வெயிலில் இரவு பகல் பாராமல் பிரச்சாரம் செய்து முடித்தனர். இதன் விளைவாக நேற்று வேட்பாளர்கள் அனைவரும் ஓட்டளிக்கச் சென்றனர். 

 

இதில் அதிமுக வேட்பாளர்களில் கடலூரில் போட்டியிடும் அமைச்சர் சம்பத் தனது சொந்த ஊரான பண்ருட்டி தொகுதியில் உள்ள மேல்குமாரமங்கலத்தில் வாக்களித்தார். புவனகிரியில் போட்டியிடும் அருண்மொழித்தேவன் திட்டக்குடி தொகுதியில் உள்ள திட்டக்குடி அரசுப் பள்ளியில் வாக்களித்தார். குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் அவரது சொந்த ஊர் புவனகிரி தொகுதியில் உள்ளது. அங்கு சென்று வாக்களித்தார். பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரன் நெய்வேலி தொகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான சொரத்தூரில் வாக்களித்தார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் பாண்டியன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள குமராட்சி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

 

அதேபோல் திமுக சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள முட்டத்தில் வாக்களித்தார். பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தவாக தலைவர் வேல்முருகன் அவரது வாக்கை நெய்வேலி தொகுதியில் உள்ள இந்திரா நகரில் செலுத்தினார்.

 

அதேபோன்று விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் நெய்வேலி தொகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான முத்தாண்டிக் குப்பத்தில் வாக்களித்தார். புவனகிரி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் துரை சரவணன் தனது வாக்கை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அரசுப் பள்ளியில் செலுத்தினார். திட்டக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பிஜேபி கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் 'தடா' பெரியசாமி அவரது வாக்கை குன்னம் தொகுதியில் உள்ள காளிங்கராய நல்லூர் பள்ளியில் செலுத்தினார். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான சிந்தனைச்செல்வன், தனது வாக்கை விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் செலுத்தினார். விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது வாக்கினை சென்னையில் செலுத்தினார்.

 

மேற்படி வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்கை அவர்களுக்கே செலுத்த முடியாமல் தங்கள் சொந்த ஊர் அமைந்துள்ள தொகுதியில் தங்கள் கட்சி மற்றும் தங்களது கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் வாக்கினை அவரவர்களுக்குச் செலுத்தி கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து சத்யபிரதா சாகு விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Sathyaprada Sahu explained about the polling percentage error

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று (21.04.2024) அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதாவது, திருவள்ளூர் - 68.59 %, வட சென்னை - 60.11 %, தென் சென்னை - 54.17 %, மத்திய சென்னை - 53.96 %, ஸ்ரீபெரும்புதூர் - 60.25 %, காஞ்சிபுரம் - 71.68 %, அரக்கோணம் -74.19 %, வேலூர் - 73.53 %, கிருஷ்ணகிரி - 71.50, தருமபுரி - 81.20 %, திருவண்ணாமலை - 74.24 %, ஆரணி - 75.26 %, விழுப்புரம் - 76.52 %, கள்ளக்குறிச்சி - 79.21 %, சேலம் - 78.16 %, நாமக்கல் - 78.21 %, ஈரோடு - 70.59 %, திருப்பூர் - 70.62 %, நீலகிரி - 70.95 %, கோயம்புத்தூர் - 64.89 %, பொள்ளாச்சி - 70.41 %, திண்டுக்கல் - 71.14 %, கரூர் - 78.70 %, திருச்சிராப்பள்ளி - 67.51 %, பெரம்பலூர் - 77.43 %, கடலூர் - 72.57 %, சிதம்பரம் - 76.37%, மயிலாடுதுறை - 70.09 %, நாகப்பட்டினம் - 71.94 %, தஞ்சாவூர் - 68.27 %, சிவகங்கை - 64.26 %, மதுரை - 62.04 %, தேனி - 69.84 %,விருதுநகர் - 70.22 %, ராமநாதபுரம் - 68.19 %, தூத்துக்குடி - 66.88 %, தென்காசி - 67.65 %, திருநெல்வேலி - 64.10 % மற்றும் கன்னியாகுமரி - 65.44 % பதிவாகியுள்ளன. 

Sathyaprada Sahu explained about the polling percentage error

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார். அதில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் (APP) கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டது. இந்த செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வாக்கு சதவீதத்தை ஒருசிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம். இதனால் சில குளறுபடிகள் ஏற்பட்டன” எனத் தெரிவித்தார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து கடந்த அக்டோபர் மாதமே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது. வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக கேஸ் பை கேஸ் (Case by Case) விசாரணை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வாக்களர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வாக்காளர் நீண்ட காலமாக அவரது முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும். புதிய வாக்காளர் அட்டைதான் தேவையென்று இல்லை” என விளக்கமளித்துள்ளார்.