Skip to main content

''ஒவ்வொரு குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது...'' -அன்வர்ராஜா பேட்டி குறித்து சி.ஆர்.சரஸ்வதி!

Published on 18/09/2020 | Edited on 19/09/2020

 

 C. R. Saraswathi - Anwhar Raajhaa

 

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் இன்று (18.09.2020) ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளருமான அன்வர் ராஜா, "சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் வந்ததற்குப் பிறகு என்ன முடிவு எடுக்கிறாரோ அதனைப் பொறுத்துதான் அரசியலில் தாக்கம் இருக்கும்" என்றார். 

 

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று (18.09.2020) நடைபெற்று வந்த நிலையில், அன்வர் ராஜாவின் இந்தக் கருத்து அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இதுகுறித்து, அ.ம.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையத்தளத்திடம் பேசுகையில், ''சசிகலா விரைவில் சிறையில் இருந்து வர வேண்டும் என்பது எங்கள் பிரார்த்தனை.  சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு என்ன முடிவு எடுப்பார் என்பது அவருக்குதான் தெரியும். அவர்தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகுதான் நாங்கள் அதைப் பற்றி பேசுவோம்.

 

சிறையில் இருந்து அவர் வந்த பிறகு எடுக்கப்போகும் முடிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அன்வர்ராஜா சொல்லியிருக்கிறார். இப்போது பதவியில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களில் 95 சதவீத பேர் சசிகலாவால், டி.டி.வி தினகரனால் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். இதனை அவர்களால் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. 

 

அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுடன் 34 வருடங்கள் பயணம் செய்திருக்கிறார் சசிகலா. கஷ்டப்பட்ட காலத்திலும், வெற்றிபெற்ற காலத்திலும் உடனிருந்தவர். இது எல்லோருக்குமே தெரியும். சசிகலாவை அ.தி.மு.க.வில் இருப்பவர்களால் புறக்கணிக்க முடியாது. ஆகையால் இப்போது ஒவ்வொரு குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது'' என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.