Skip to main content

“அனைத்திற்கும் பாஜகவே காரணம்; இன்றும் அதையே சொல்கிறேன்” - டிடிவி தினகரன்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

“BJP is responsible for everything; I say the same today”- DTV Dhinakaran

 

அதிமுகவில் நடப்பது அனைத்திற்கும் பாஜகவே காரணம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

 

சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். பழனிசாமிக்குத்தான் இரட்டை இலை என வந்தாலும், அவர் கைகளில் வருவதாலேயே எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இயக்கம் பலவீனப்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து அதிமுகவை மீட்போம் எனச் சொன்னேன். அதுதான் வரும் காலத்தில் நடக்கும். எம்.ஜி.ஆர் அவருக்கு நடந்த துரோகத்தை தட்டிக்கேட்கத்தான் அதிமுகவை தொடங்கினார். இப்பொழுது துரோகத்தின் மூலம் ஒருவர் பதவியை பிடித்திருப்பதற்கு வரும் காலத்தில் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

 

ஏற்கனவே அதிமுக, பாஜக கூட்டணியில் தான் உள்ளது. 2024 தேர்தலுக்கு அமமுக கூட்டணி குறித்து முடிவு செய்து கொள்ளலாம். அமமுக பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. எந்த குழப்பமும் இல்லை. 

 

பழனிசாமி வாலியைப் போல் வெற்றி பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். வாலி என்பவர் ராமாயணத்தில் தீயசக்தியாகக் காட்டப்பட்டுள்ளார். அதனால் தான் ராமர் அவரை உயிரிழக்கச் செய்கிறார். அதனால் இன்று வெற்றி பெற்றதாலேயே பழனிசாமி புரட்சித் தலைவர் ஆகிவிட முடியாது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அடைந்துள்ளார். கட்சியை தன்வசப்படுத்தியுள்ளார். அதிமுக பழனிசாமி எனும் சுயநல மனிதனிடம் சிக்கித் தவிக்கிறது. தொண்டர்களே அதைவிட்டு வெளியேறிவிடுவார்கள். ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் காரணம் மத்தியில் ஆள்பவர்கள் தான். அவர்கள் நினைத்தால் தான் மீண்டும் பழனிசாமி, பன்னீர்செல்வம் இணைய முடியும் எனச் சொன்னேன். அதைத்தான் இன்றும் சொல்கிறேன்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.