Skip to main content

பாஜக அரசுக்கு ஜுரம் என்றால் அதிமுக அரசுக்கு ஜன்னியே கண்டதென்ன? தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி?

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

 


காலையில் பட்ஜெட் படிப்பு என்றால் மாலையில் இஸ்லாமியர்களை அடித்து உதைத்துப் பழிதீர்ப்பு! சிஏஏ எதிர்ப்பால் ஒன்றிய பாஜக அரசுக்கு ஜுரம் என்றால் அதிமுக அரசுக்கு ஜன்னியே கண்டதென்ன? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

எஞ்சிய ஓராண்டும் எப்படியெப்படி கமிஷன் பார்ப்பது என்ற கோணத்தில் ஓர் அதிசயப் பட்ஜெட்டை கோட்டையில் காலையில் படிக்கத் தொடங்கியது என்றால் அதைப் படித்து முடித்த கையோடு மாலையில் இஸ்லாமியர்கள் மீது போலீசை ஏவி வெறியாட்டம் ஆடியது அதிமுக அரசு.

 

 Velmurugan



இஸ்லாமியர்களைக் குறிவைத்து பாசிச குடியுரிமைத் திருத்த சட்டத்தைக் (சிஏஏ) கொண்டுவந்தது பாஜக மோடி அரசு என்றால், அதன் அடிமையாக இருப்பதுடன் அடியாளாகவும் மாறி எஜமான் கட்டளைப்படி இஸ்லாமியர்களைப் பழிதீர்க்கத் தொடங்கியிருக்கிறது அதிமுக பழனிசாமி அரசு.
 

அதனால்தான் நேற்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதல்லாமல் ஒவ்வொருவராகப் பிடித்து அடித்து உதைத்துத் துவம்சமே செய்திருக்கிறது.
 

சிஏஏவுக்கு எதிராக இந்தியா முழுவதுமே கிளர்ந்தெழுந்து போராட்டங்கள் நடைபெற்றுவருவதைப் பார்க்கிறோம். இதில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிஏஏ போராட்டக்காரர்களை குருவிகளைப் போல் சுட்டுத்தள்ளியதையும் கேள்விப்பட்டோம். அப்படியிருக்க, சென்னைக் கோட்டையில் உள்ள அதிமுக அரசு என்ன சும்மாவா இருந்துகொண்டிருக்கிறது என ஒன்றிய பாஜக அரசு நினைப்பதும் வினவுவதும் நமக்குப் புரியாமல் இல்லை. இதற்கான விடைதான் தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் மீது போலீசை ஏவி பாய்ந்து பிராண்டுவதாகும்.
 

சென்னை பழைய வண்ணார்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களுமாக இஸ்லாமியர்கள் திரண்டு நேற்று மாலை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் போக்குவரத்துக்கு இடைஞ்சல், அதனால் போராட்டத்தைக் கைவிடுங்கள், கலைந்து செல்லுங்கள் என்று மிரட்டியது போலீஸ். போராட்டக்காரர்கள் மறுக்கவே வடசென்னை காவல்துறை இணை ஆணையர் தினகரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து போராட்டம் தொடர்ந்தபோது போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது ஒவ்வொருவராகப் பிடித்து போலீசார் அடித்து உதைத்ததாகத் தெரியவருகிறது. அத்துடன் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகிறது.
 

இதற்குக் கண்டனம் தெரிவித்து பெண்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் குழந்தைகள் உள்பட குடும்பமே போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


 

சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு தொடங்கிய சாலை மறியல் கிண்டி, ஆலந்தூர் போன்ற இடங்களிலும் தொடர்ந்தது.
 

கிண்டி, ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் சென்னை விமான நிலையம் செல்ல வேண்டியவர்கள் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும் செங்கல்பட்டு, கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையிலும் போராட்டம் நடந்ததால் அப்பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

அதோடு, போராட்டம் தமிழகமெங்கும் பரவியது. திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி, திருச்சி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், பழனி. தேனி, நாகர்கோவில், கன்னியாகுமரி என தமிழகம் முழுவதிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

இதற்கிடையே கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் சார்பிலான இஸ்லாமியப் பிரதிநிதிகளுடன் மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 

சிஏஏவுக்கு எதிராக பல மாநில அரசுகள் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. நமக்குப் பக்கத்திலுள்ள புதுச்சேரி மாநில அரசும் சிஏஏ எதிர்ப்புத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் அண்ணா பெயரிலேயே கட்சியை வைத்துக்கொண்டிருக்கும் அதிமுகவோ பாமகவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு மாநிலங்களவையில் சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்ததால்தான் அந்த சிஏஏ மசோதாவே சட்டமானது. அப்படியிருக்க தன் எஜமானின் கட்டளைப்படி இஸ்லாமியர்களின் இடுப்பை ஒடிக்கின்ற பழிதீர்க்கும் படலத்தில் இறங்குவதல்லாமல் வேறென்ன செய்யும் அதிமுக?
 

அதனால்தான், காலையில் பட்ஜெட் படிப்பு என்றால் மாலையில் இஸ்லாமியர்களை அடித்து உதைத்துப் பழிதீர்ப்பு!
 

சிஏஏ எதிர்ப்பால் ஒன்றிய பாஜக அரசுக்கு ஜுரம் என்றால் அதிமுக அரசுக்கு ஜன்னியே கண்டதென்ன என்று கேள்வி எழுப்பி தனது கண்டனத்தை பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.