Skip to main content

"ராசியான முதல்வர்...!" -ஜுனியரை புகழ்ந்த சீனியர் அமைச்சர்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020

 

அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா... என்ற நடிகர் கவுண்டமனியின் ஜோக் இப்போதும் லைவ்வாக உள்ளது. அதற்கு உதாரணம் நம்ம அமைச்சர் செங்கோட்டையன் தான் என வெளிப்படையாகச் சொல்லி சிரிக்கிறார்கள் ஈரோடு மாவட்ட ர.ர.க்கள்.

 

மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையிலிருந்து இன்று கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் அணையில் இருந்த ஷட்டர் பட்டனை ஆன் செய்து தண்ணீர் திறந்து வைத்தனர். 

 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "இப்போது நடைபெற்று வரும் நமது மாண்புமிகு முதலமைச்சர் ஆட்சியில்தான் பவானிசாகர் அணை மூன்று முறை நிரம்பியிருக்கிறது. நமது முதல்வர் மிகவும் ராசியான முதல்வர்" என எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் சூட்டியதோடு, "விவசாயிகளின் நலன் கருதியே குடிமராமத்துப் பணிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 

 

மேலும், பத்தாம் வகுப்பு மதிப்பெண் வெளியீட்டில் எந்தவித குளறுபடியும் நடக்கவில்லை. முதலமைச்சர் அறிவித்தது போல் மாணவர்களின் காலாண்டுத் தேர்வு அரையாண்டுத் தேர்வு மற்றும் அவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவைகளைக் கொண்டு சரியான முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதது. மாண்புமிகு முதல்வரின் வழிகாட்டுதல் படியே சிறப்பாக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது" எனக் கூறியபடியே வணக்கம் போட்டு அவ்விடத்திலிருந்து செங்கோட்டையன் புறப்பட "அரசியலுக்கு எடப்பாடியாரை கொண்டு வந்ததே இவர்தான்.

 

Ad

 

தனது ஜூனியரான எடப்பாடி அரசியலில் சகல வித்தையும் செய்து இப்போது எல்லோருக்கும் மேலே முதல்வராக அமர்ந்துள்ளார். காலத்தின் கோலம் பாருங்க அவருக்குக் கீழே பணியாற்றுவது மட்டுமல்ல அவரை அம்மா ரேஞ்ச்சுக்கு புகழ வேண்டிய கட்டாயமும் அண்ணன் செங்ஸ்க்கு ஏற்பட்டுவிட்டது என அவர் காதுபடவே ர.ர.க்கள் கின்டலாக பேசி மகிழ்ந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.