Skip to main content

“எனக்கு நானே வருத்தப்பட்டுக்கொண்ட 4ஆம் ஆண்டின் நினைவு நாள் இன்று..” ஆஸ்பயர் சுவாமிநாதன் ட்விட்! 

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

Aspire Swaminathan tweet about Edappadi Palanisamy

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று மறைந்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 5 பிப்ரவரி 2017 அன்று, அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதல்வர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ். விலகுவதாக ஆளுநரிடம் மனு கொடுத்தார். ஆனால், ஆளுநர் அடுத்த ஏற்பாடுகள் முடியும்வரை ஓ.பி.எஸ். முதலமைச்சராக தொடர்வார் என அறிவித்தார். ஆனால், பிப். 7ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். “என்னை கட்டாயப்படுத்தியதால் பதவியிலிருந்து விலக கடிதம் கொடுத்தேன்” என்றார். இது சசிகலாவிற்கு டென்ஷன் ஏத்த, சசிகலா, அவரை பொறுப்புகளிலிருந்து முதலில் நீக்கினார். அதனைத் தொடர்ந்து சசிகலா சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அதன்பின் தர்மயுத்தம், கோரிக்கை, சமாதான பேச்சு வார்த்தை, கோரிக்கைகளுக்கு உடன்பாடு என பல கட்டங்களை கடந்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. 

 

அப்படி இணைந்தும் அவர்களுக்குள் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என அவர்களின் அரசியல் செயல்பாடுகளில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அதன்படி நேற்று (24.11.2021) நடந்த அதிமுக மா.செ. கூட்டத்திலும், அதிமுகவின் வழிகாட்டு குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11இல் இருந்து 18ஆக உயர்த்த வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பு வலியுறுத்தியது. 

 

இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் ஐ.டி.விங்கை கொண்டுவந்தவரும், அதிமுகவிற்கு தனி ஐ.டி.விங்கை உருவாக்கியவருமான, ஆஸ்பயர் சுவாமிநாதன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். இது மீண்டும் அதிமுகவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதிமுக இரண்டாகப் பிரிந்து மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் மற்றும் எம்.ஜி.ஆரின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பெயர் விடுபட்டிருந்தது. அதுமட்டுமின்றி அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என பரவலாக ஒரு பேச்சு இருந்தது. 

 

 

இந்நிலையில் இப்போது ஆஸ்பயர் சுவாமிநாதன், தனது ட்விட்டர் பக்கத்தில், “இரட்டை இலை மீட்பு, மாபெரும் கொண்டாட்டமாம்.. மும்பெரும் விழாவாம்.. கட்சி கொடி ஏற்றுவார்களாம்... மாண்புமிகு அமைச்சர் அறிவிப்பு..  “யாருக்கும் அழைப்பும் இல்லை தகவலும் இல்லை, தலைவர்கள் உட்பட...” மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போல..” என்று குறிப்பிட்டிருந்ததையும், அன்றை அழைப்பிதழையும் இன்றைய பதிவில் இணைத்துள்ளார். மேலும், அதில் அவர், ‘ஒரு முதலமைச்சரே என்னை தரம் கெட்டு திட்டி பேசும் அளவிற்கு இருந்ததுபோல என் ட்விட். ஒரு வெள்ளந்தி விவசாயியை  இப்படி கேவலமாக பேசவைத்து விட்டோமே என்று, எனக்கு நானே வருத்தப்பட்டுக்கொண்ட 4ஆம் ஆண்டின் நினைவு நாள் இன்று..’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.