Skip to main content

‘கவனிப்பால்’ காணாமல்போன தே.மு.தி.க. வேட்பாளர்? - அருப்புக்கோட்டை குமுறல்!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

aruppukkottai assembly constituency dmdk candidate

 

தேர்தல் முடிந்ததும், அருப்புக்கோட்டை தொகுதியில், தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. தரப்பில், ஒருவித கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் நம்மிடம் குமுறினார்.

 

“எப்படியிருந்த கட்சி? இப்படி ஆயிருச்சு! எல்லாம் நேரகாலம்தான். இத்தனைக்கும்.. உடம்புக்கு முடியாத கேப்டன், இந்தத் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்தாரு. டிடிவி தினகரன் வந்தாரு. எங்க விஜயபிரபாகரனும் வந்தாரு. ஸ்டார் தலைவருங்க இவங்கள்லாம் வந்தப்ப, அப்படி ஒரு கூட்டம் கூடுச்சு. ஆனா.. எல்லாம் வீணாப் போச்சு.” என்று பெருமூச்சுவிட்டவர் “தேர்தலுக்கு நாலு நாளைக்கு முன்னால இருந்தே எங்க வேட்பாளர் ரமேஷ் காணாம போயிட்டாரு. அடுத்து ஆட்சிக்கு வர்ற கட்சி வேட்பாளர்கிட்ட விலை போயிட்டாரு. இங்கே 36 வார்டு இருக்கு. ஒரு வார்டுல கூட ரமேஷ் எட்டிப்பார்க்கல. நகர, ஒன்றியம் எதுலயும் பூத் கமிட்டி அமைக்கல. கட்சி ஆபீசுல உட்கார்ந்து தண்ணியடிச்சதுனால, பிரச்சனை பெரிசாகி பூட்டு போட்டு மூடிட்டாங்க. வேட்பாளர் அறிமுகக்கூட்டம் கூட நடத்தல. எல்லாமே குறைகளாத்தான் தெரியுது. மத்த கட்சிக்காரங்க எங்ககிட்ட, உங்க வேட்பாளர் அந்த வேட்பாளர்கிட்ட எவ்வளவு வாங்கினாரு? உங்களுக்கும் பங்கு கொடுத்தாரா? இந்த மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்க. வெளிய தலைகாட்ட முடியல.” என்று வேதனைப்பட்டார்.

 

aruppukkottai assembly constituency dmdk candidate

 

தே.மு.தி.க. வேட்பாளர் ரமேஷை தொடர்புகொண்டோம். “ரெண்டு முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடற தொகுதி. பொருளாதார ரீதியா நாங்க பலவீனமாத்தான் இருக்கோம். ஆனா.. உழைப்புல குறை சொல்ல முடியாது. தண்ணியடிச்சு கட்சி ஆபீசு பூட்டினதுக்கு நானா காரணம்? டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாதுன்னு நான் சொல்ல முடியுமா? கேப்டன் வந்தப்ப எவ்வளவு கூட்டம் வந்துச்சு? நயாபைசா செலவில்லாம, தலைவருக்காக வந்த கூட்டம். டிடிவி தினகரன், விஜயபிரபாகரன் வந்தப்பவும் நல்ல கூட்டம். இதுக்கு மேல என்ன பண்ண முடியும்? பெரிய கட்சிங்க பூத் கமிட்டிக்கு இருபத்தஞ்சாயிரம் கூட செலவழிப்பாங்க. எங்களால எப்படி முடியும்? அந்த வேட்பாளர்கிட்ட நான் பணம் வாங்கிட்டேனா? எங்க கட்சிலயே குறை சொன்னாங்கன்னா.. நான் என்ன சொல்ல முடியும்? மொதமொதல்ல தேர்தல்ல நின்னேன். எனக்கு இது ஒரு பாடம்.” என்றார்.

 

aruppukkottai assembly constituency dmdk candidate

 

கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்து, தங்கள் கட்சிகளின் வாக்கு வங்கி தேறவே தேறாது எனத் தெரிந்தும், வீரவசனம் பேசி தேர்தலில் களமாடுபவர்களிடமிருந்து, தொண்டர்கள் எப்போது ‘பாடம்’ கற்றுக்கொள்ளப் போகிறார்களோ?

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.