Skip to main content

''அத்துமீறி கைது செய்வதை சகித்துக்கொள்ள முடியாது'' - பாமக ராமதாஸ் கண்டனம்!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

 arrests cannot be tolerated" - pmk Ramadas condemned!

 

நேற்று முன்தினம் (19.12.2021) ராமநாதபுரம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், அன்று மாலையே மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரயில் மறியலில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 14 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 55 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியும், கவலையும் விலகுவதற்கு முன்பே மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. சிங்களப்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

 

 arrests cannot be tolerated" - pmk Ramadas condemned!

 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர் இரு விசைப்படகுகளில் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே நேற்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் ரணதீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான மீனவர்கள் 14 பேரும் எல்லை தாண்டி மீன்பிடிக்கவில்லை; அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாது.

 

சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்யக் கோரி அங்குள்ள மீனவர் அமைப்பினர் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தினார்கள்.  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். அதேபோல், ஜெகதாப்பட்டினம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி அங்குள்ள மீனவர் அமைப்பினரும் இன்றுமுதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கைது செய்யப்பட்டுள்ள 69 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

 

வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுகிறார்கள். இந்தியா அளிக்கும் அழுத்தம் காரணமாக அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனாலும் அவர்களின் படகுகளை இலங்கை அரசு திரும்பத் தருவதில்லை. அதனால், அந்த படகுகளை நம்பியுள்ள மீனவர்கள் நிரந்தரமாக வாழ்வாதாரம் இழக்கின்றனர். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்களை தாங்கிக்கொள்ள முடியாத பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வேறு தொழில்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இத்தகைய நிலையைப் போக்க மீனவர்கள் பிரச்சினைக்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

 

இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியதாகும். பல நாடுகளுக்கு இடையில் உள்ளது போன்ற வரையறுக்கப்பட்ட சர்வதேச கடல் எல்லை இந்தப் பகுதியில் கிடையாது. அதனால் மீன்வளத்தைத் தேடி இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைவதும் இயல்பான ஒன்றுதான். வாழ்வாதாரம் தேடுவதை தவிர, இதில் அத்துமீறல்கள் எதுவும் இல்லை. அதனால் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாலும் கூட கைது செய்வது தேவையற்றது. மாறாக, இரு நாட்டு கடல் பகுதிகளில் தமிழ்நாடு, இலங்கை மீனவர்கள் முறை வைத்து மீன்பிடிக்க அனுமதிப்பதுதான் நியாயமான, சாத்தியமான தீர்வாக இருக்கும்.

 

இதுகுறித்து விவாதிப்பதற்காக இரு நாட்டு அரசுகளின் வழிகாட்டுதலில் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நடைபெற்று வந்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் எட்டப்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடத்தப்பட்ட இரு தரப்பு பேச்சுகளுக்கு பின்னர் அடுத்தக்கட்ட பேச்சுக்கள் நடத்தப்படவில்லை. இத்தகைய பேச்சுகள் தொடர்ந்தால் தமிழ்நாடு - இலங்கை மீனவர்கள் சிக்கலுக்கு சாத்தியமான நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

 

எனவே, உடனடியாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 69 பேரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களின் படகுகள் உட்பட இலங்கை அரசு வசம் உள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் மீட்க வேண்டும். அத்துடன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.