Skip to main content

''தி.மு.க. கொள்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார்" -இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தாக்கு!

Published on 10/08/2020 | Edited on 11/08/2020

 

arjun sampath

 

 

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட அதிகாரி ஒருவரிடம் மனு கொடுத்தார்.

 

பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நமது நாட்டின் சுதந்திர தின விழாவைக் கச்சத்தீவில் கொண்டாட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதை செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தப்படி நம்முடைய மீனவர்கள் அங்கு தங்குவதற்கும், ஓய்வெடுக்கவும் எந்த விதமான தடையும் கிடையாது. ஆனாலும் இலங்கை அரசுதான் கச்சத்தீவில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடக்கக்கூடிய அந்தோணியார் விழாவில் கூட இலங்கை அரசின் ஆதிக்கம் தான் இருக்கிறது. தமிழகத்துக்கு கச்சத்தீவில் உள்ள உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு சார்பில் அங்கு சுதந்திர தின விழாவைக் கொண்டாட வேண்டும்.

 

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெருமழை, வெள்ளம் காரணமாக 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பலியாகி உள்ளனர். உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தேயிலை நிறுவனம் ரூபாய் 5 லட்சம், கேரள மாநில அரசு ரூபாய் 5 லட்சம் அறிவித்துள்ளது. இந்தத் தொகை போதாது ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 

 

மக்களுக்கு அங்கு வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழக மக்கள் என்பதால் இறுதிச்சடங்கிற்கு உறவினர்கள் அங்கு சென்றுவர இ-பாஸ் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். 

 

தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி அரசியல் நாடகத்தை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார். விமான நிலையத்தில் உள்ள பெண் அதிகாரி ஹிந்தியில் பேசியிருக்கிறார். கனிமொழி இதனைத் திசைதிருப்பி ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இத்தகைய போக்கை கனிமொழியும், தி.மு.க.வினரும் பின்பற்றினால் தி.மு.க.வினர் நடத்தக்கூடிய சி.பி.எஸ்.இ. பள்ளிகள் முன்பு நாங்கள்  போராட்டம் நடத்துவோம்.    

 

http://onelink.to/nknapp

 

நாடு முழுக்க மும்மொழிக் கல்வி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் திட்டமிட்டு வேண்டுமென்றே அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் இதனை எதிர்க்கின்றன. எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதா இருந்திருந்தால் மும்மொழி கல்விக்கொள்கையை அமல்படுத்தியிருப்பார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்த்து பேசுவார் எனக் கருதி, தி.மு.க.வின் கொள்கைகளை அ.தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறார்.  தமிழக அரசு தைரியமாக மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் முதல்வருக்கு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்துகிறார் என்ற பெயர் கிடைக்கும்.

 

தமிழகத்தில் அசுர பலத்தோடு இருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் ரஜினிகாந்த் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார். ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை அளிக்கும் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து பிரசாரத்தை விரைவில் அவர் துவங்க போகிறார்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.