Skip to main content

“முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது..”  சி.வி. சண்முகம்  

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

"The Anti-Corruption Department is working as a bribe to the Chief Minister." CV Shanmugam

 

முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சிவி சண்முகம் நேற்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திமுக அரசு எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதம் ஆன போதிலும் இன்னமும் அதிமுகவை தான் குறை சொல்லி வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு நிர்வாகம் மீது துளியும் கவனம் செலுத்தவில்லை. அதிமுக மீதான பழிவாங்கும் நடவடிக்கையை செய்து வருகிறது. அதை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க உள்ளோம். 

 

அரசு ஊழியர்கள் தயவு இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க முடியாது. இதை அவர்கள் மறந்துவிட்டனர். இன்று முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரி கந்தசாமி முதலமைச்சரை சந்திக்கிறார். காரணம், வேலுமணியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. ஆனால், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் வேலுமணி கைது செய்யப்படவில்லை. 

 

இந்த அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். நேற்று முன்தினம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மிகவும் நேர்மையான அதிகாரி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அவரை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டதால் பின்னர் அவர் பதவி நீக்கம்செய்யப்பட்டவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பதினோரு லட்சம் பணம், 4 கிலோதங்கம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குக்காக அதிகாரி வெங்கடாசலம் அச்சப்படவில்லை. 

 

அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர் பகலில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு என்ன நடந்தது, அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது மர்மமாக உள்ளது. கடந்த மாதம் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடைபெற்று இரண்டரை கோடி பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவருக்கு 10 நாளில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் கேள்வி கேட்ட பின்பு அவர் கைது செய்யப்படுகிறார். முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்த வற்புறுத்தப்பட்டுள்ளார். அவர் மறுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி முன்னாள் அரசு மீது குற்றம் சுமத்த வேண்டும் என்று வலியுறுருத்தப்பட்டு அதற்கு வெங்கடாச்சலம் மறுத்ததால் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. 

 

எப்போதெல்லாம் திமுகவினர் மீது குற்றம்சாட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகாரிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் அங்கு பணி செய்யும் வட்டார வளர்ச்சி அலுவலர் மிரட்டப்பட்டு தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அரசின் மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லாததால் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்தின் மர்ம மரணத்திற்கான காரணத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த அரசால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அதனால் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.