Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும்! ராமதாஸ்

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரியை அரசு வேளாண் கல்லூரியாக மாற்ற வேண்டும். அதை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள்  கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆளுகையில் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி  அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை  பெற்றுள்ள நிலையில், அப்பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து அடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் வேளாண் கல்லூரியை பிரித்து,  அரசு வேளாண் கல்லூரியாக அறிவித்து நடத்த வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை ஆகும்.

 

ramadoss



 


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப் பட்டதற்கு எத்தனை காரணங்களும், எவ்வளவு நியாயங்களும் இருந்தனவோ, அதைவிட அதிகமான  காரணங்களும், நியாயங்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியை தனி அரசு கல்லூரியாக மாற்றுவதற்கு உள்ளன. மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை, அண்ணாமலை பல்கலை கழகத்தில் உள்ள கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டால், மருத்துவ மாணவர்களுக்கான ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.5 லட்சம் குறையும் என்பது தான் மிகவும் முதன்மையான காரணமாக இருந்தது. ஆனால், வேளாண் கல்லூரியைப் பொறுத்தவரை கட்டணத்தையும் தாண்டி ஏராளமான காரணங்கள் உள்ளன.
 

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஈடு இணையற்ற உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும், அந்தக் கல்லூரியில் வழங்கப்படும் பட்டங்களின் தரம் குறித்து ஐயங்கள் பல்வேறு எழுப்பப்படுகின்றன. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட போது, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண்மை பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்புகளில் சேருவதற்கு தகுதியற்றவர்கள் என்று வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  வேளாண்மை படித்து பட்டம் பெற்று, பின்னாளில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வந்தவர்களே, அண்ணாமலை பல்கலைக்கழக பட்டத்தின் மதிப்பை குறைத்துக் காட்டினர். அதனால், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் படிப்பின் தரத்தை மேம்படுத்தியாக வேண்டியுள்ளது.



அண்ணாமலை பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், அதை சமாளிக்கும் நோக்குடன் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கு  தேவையான ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் கூட போதிய அளவில் இல்லை. அதுமட்டுமின்றி, அந்த பல்கலைக்கழகம் தனியார் நிர்வாகத்தில் இருந்த போது அளவுக்கு அதிகமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால் அவர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலையும் நிலவுகிறது. கூடுதலாக உள்ள ஆசிரியர்களை மற்ற கல்லூரிகளுக்கு பணி நிரவல் செய்ய முடியாத நிலை நிலவுவதால் வேளாண் கல்லூரியின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி அண்ணாமலை பல்கலை. வேளாண் கல்லூரியில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி 70 ஆண்டுகளுக்கு முன்பே 1951-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டதாகும். வேளாண் கல்லூரி வளாகம் மட்டும் 863 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கிறது. அங்கு பல வகையான பண்ணைகள் இருப்பதால், வேளாண் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் திறமையான ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர். இந்த கட்டமைப்புகளையும், மனிதவளத்தையும் கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியை மிகச்சிறந்த வேளாண் கல்வி நிலையமாகவும், ஆராய்ச்சி மையமாகவும் மாற்ற முடியும். ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகம் கடுமையான நிதிநெருக்கடியில்  சிக்கித் தவிக்கும் சூழலில் இந்த இலக்குகளை எட்டிப் பிடிப்பதும், சாதிப்பதும் சாத்தியமானது அல்ல.

எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரியை அரசு வேளாண் கல்லூரியாக மாற்ற வேண்டும். அதை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள்  கொண்டு வர வேண்டும். அதன் மூலம் அக்கல்லூரியின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், ஆராய்ச்சி வாய்ப்புகளை பரவலாக்குவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.