Skip to main content

சி.வி.சண்முகம் உட்பட அதிமுகவை கடுமையாக தாக்கி பேசிய அண்ணாமலை! 

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

Annamalai Condemn ADMK including CV Shanmugam!

 

பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதேபோல், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அண்ணாமலையை விமர்சித்திருந்தார். 

 

விழுப்புரத்தில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், “சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்கள் வந்துள்ளார்கள். அண்ணாமலை அண்ணாவை விமர்சனம் செய்து பேசியதுடன் தரக்குறைவாகவும் பேசி உள்ளார்” என்று தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “அண்ணாவுக்கு ஆதரவாக வருபவர்கள் அண்ணாவின் வழி நடந்துகொள்கிறார்களா. அப்படி நடந்தால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். கருத்தை கருத்தாக மட்டுமே பார்க்கவேண்டும். சரித்திரத்தை மறைத்து பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பா.ஜ.க. யாரையும் கடவுளாக பார்ப்பவர்கள் அல்ல; எங்களை பொறுத்தவரை எல்லோரும் மனிதர்கள்தான். முத்துராமலிங்க தேவர் சனாதனத்திற்காக என்ன பேசினார் எனச் சொல்வது எனது கடமை. இன்னும் 50 வருடத்தில் சரித்திரத்தை மாற்றி எழுதிவிட்டீர்கள் என்றால் பிறகு சரித்திரத்தை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். மதுரை மீனாட்சி அம்மன் குறித்து இழிவாக பேசும்போது முத்துராமலிங்க தேவரின் கருத்து என்பதை நான் பதிவு செய்ய வேண்டும். யாரும் கடவுள் கிடையாது அனைவரும் மனிதர்கள் அப்படியான அரசியல் பாரம்பரியத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். எனக்கு அடைமொழி கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் காரணம் நான் மனிதன். 

 

அண்ணாவை நான் எங்கும் தவறாக பேசவில்லை. சரித்திரத்தில் அந்த சம்பவத்தை நான் எடுத்துக்காட்டியுள்ளேன். அதில் முத்துராமலிங்க தேவர் என்ன பேசினார் என்பதை நான் சொல்லியிருக்கிறேன். நான் யாரின் அடிமையும் கிடையாது. அதேபோல், யாரும் எங்களின் அடிமையும் கிடையாது. நான் சொல்லும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. 

 

தனிக் கட்சி, தனி கொள்கை, சனாதன தர்மம் எங்கள் உயிர் மூச்சு. அதனைத் தற்காக்க முடியவில்லை என்றால் நான் ஏன் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இருகையில் அமர வேண்டும். சனாதன தர்மத்தைப் பற்றி பேசும்போது நான் உண்மையைப் பேசுவேன். 

 

இன்னும் பல விஷயங்களை சொல்ல முடியும். பெரியார் அடிவாங்கியதையும், அப்பொழுது அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் இருந்ததை எல்லாம் சொல்லமுடியும். ஆனால், நான் அதற்குள் எல்லாம் போகவிரும்பவில்லை. சரித்திரத்தை சரித்திரமாக பாருங்கள். 

 

இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் ஆகாது. நான் மரியாதை கொடுத்து அரசியல் நடத்துவேன். எனக்கும் கடும் சொற்கள் வரும். சி.வி.சண்முகம், மாலை ஆறு மணிக்கு முன்பாக ஒரு மாதிரியும், அதற்கு பிறகு ஒரு மாதிரியும் பேசுவார். ஆனால், அதனை நான் பேச விரும்பவில்லை. 10 ஆண்டுகள் காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை இது. அதனால், நேர்மையை குறித்து சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது. அவர் அமைச்சராக இருக்கும்போது என்னென்ன செய்தார் என்பது எனக்கு தெரியும்; அதற்குள் நான் போக விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் விடமாட்டேன். இது தன்மானம் பிரச்சனை. பா.ஜ.க. சுயமரியாதை இருக்கக் கூடிய கட்சி. யார் காலில் விழுந்தும் இந்தக் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் இல்லை. 

 

கூட்டணி முக்கியம்; நான் அதிமுக மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜகவுக்கு விரோதமான கட்சி என்றெல்லாம் சொல்லமாட்டேன். அது அவர்களின் கொள்கை; இது எங்களின் கொள்கை. அடிப்படையில் அதிமுகவின் கருத்தை பாஜகவும், பாஜகவின் கருத்தையும் அதிமுகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இரண்டு கட்சியையும் ஒன்றாக்கிவிடலாமே. கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அதற்காக அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது. இதனை ஆறு மாதமாக மிக தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். 

 

கூனி கும்பிட்டு அதிகாரத்திற்கு வரவேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு கிடையாது. நீங்கள் எல்லோரும் எப்படி அமைச்சராக இருந்தீர்கள் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அதனைப் பற்றியெல்லாம் நான் பேசட்டுமா? 

 

சி.வி.சண்முகம் ஒரு விஷயத்தை பேசும்போது உணர்ந்து பேச வேண்டும். அரசியலில் சீனியர் ஜூனியர் எல்லாம் ஏது? அரசியலில் எந்த வயதில் வேண்டுமானாலும் பக்குவம் வரலாம். அண்ணாமலை புதுசு; நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன் என்கிறார்கள். அதற்காக உங்கள் காலில் விழ வேண்டுமா? அப்படியெல்லாம் விழ முடியாது. இது என்னுடைய அரசியல், பாணி, என் ஸ்டைல். இது இப்படி தான் இருக்கும். இஷ்டம் இருப்பவர்கள் உடன் இருங்கள். 

 

நான் யாரையும் எங்கையும் அவமானப்படுத்தவில்லை. குறைந்தும் மதிப்பிடவில்லை. ஆனால், வரலாற்றை வரலாறாகத்தான் பேசவேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. 2024 தேர்தல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். 2026 தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பது அதனை அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். யாருக்கும் பா.ஜ.க. தலைவணங்காது” என்றார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Chennai High Court verdict on Sasikala's removal from ADMK will go away

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சசிகலா தரப்பில் கூறியதாவது, “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. இது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ அல்லது கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து, நீதிபதிக்கும், சசிகலா தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது.  

 

இதனை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை தொடர்கிறார்கள். அதனால்,  இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும்” என்று கூறினார். 

 

அதே போல், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், “பொதுக்குழு கூட்டங்கள் கட்சி விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டது. அந்த கூட்டங்கள் செல்லும் என்பதை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அடிப்படையிலேயே சசிகலா கட்சியில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்” என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். 

 

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (05-12-23) பிறப்பித்தனர். அதில், வி.கே.சசிகலா தொடர்ந்திருந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், சிவில் கோர்ட் உத்தரவை உறுதி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். மேலும், அந்த தீர்ப்பில், “அ.தி.மு.க.வில் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரரான சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்