Skip to main content

“இரட்டை இலை சின்னம் முடக்கம்” - எம்.பி தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் பா.ஜ.க!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Annamalai and Tamilnadu BJP members met Amith Sha for Parliament election

 

புதுச்சேரி யூனியன் பிரதேச நிகழ்ச்சிகளுக்காக கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாண்டிக்குச் செல்லும் வழியில் சென்னை ஆவடியில் ஓரிரவு (23-ந் தேதி) தங்கினார். அது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலர் கேசவவிநாயகம், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒன்றிய அமைச்சர் முருகன் ஆகியோரிடம் ஆலோசித்தார் அமித்ஷா. ஆலோசனை விவகாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

 

நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காக அடுத்த வருட துவக்கத்திலிருந்தே சில முடிவுகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டியதிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது. நாம் தனித்துப் போட்டியிடலாமா? இப்போதிருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? என்று 3 கேள்விகளை கேட்டிருக்கிறார் அமித்ஷா.

 

Annamalai and Tamilnadu BJP members met Amith Sha for Parliament election

 

அதற்கு அண்ணாமலை, "நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இப்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரலாம்'' எனச் சொல்ல, "அ.தி.மு.க.வுடன் கூட்டணின்னா அது பா.ஜ.க. தலைமையில் எப்படி அமையும்? அதற்கு அ.தி.மு.க. ஒப்புக்கொள்ளுமா?'' என சி.டி.ரவி கேட்க, "இப்போதைய அ.தி.மு.க. பலவீனமாக இருக்கிறது. அவர்களுக்கும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதனால், 50:50 சீட் ஷேரிங்கில் அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்'' என்றிருக்கிறார் அண்ணாமலை. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.தான் அண்ணாமலையின் சாய்ஸ். கேசவவிநாயகமோ, "தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்கணும்னா அ.தி.மு.க. வலிமையாகனும். ஆனா, அது அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் லாபம். தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க.வை தவிர்த்து ஒரு வலிமையான வேறு ஒரு கட்சி இங்கு இல்லை. இருந்தால் ஒருவேளை மக்களின் மனம் மாறலாம். அதனால் அ.தி.மு.க. பலவீனமாகி பா.ஜ.க. பலமாக தெரிந்தால் மட்டுமே தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

இந்த சூழலில் பேசிய சுதாகர் ரெட்டி, "அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. போட்டியிடும்போதுதான் கணிசமான வெற்றி கிடைக்கிறது. அதனால், தனித்துப் போட்டியிடலாம். அந்த முடிவை எடுத்தால், இரட்டை இலையை முடக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு பலமே அதன் சின்னம்தான். அ.தி.மு.க. பலவீனமாகிவிட்டால் பா.ஜ.க. பக்கம் மக்கள் திரும்ப வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

Annamalai and Tamilnadu BJP members met Amith Sha for Parliament election

 

இதனை உன்னிப்பாகக் கவனித்த அமித்ஷா, "இன்னும் ஆழமாக யோசிங்க. உங்கள் யோசனைகளை ஒரு ரிப்போர்ட்டாக கொடுங்கள்'' என்றிருக்கிறார். பின்னர் அமித்ஷாவை தனியாக சந்தித்து, தமிழக அரசின் சுகாதாரம், மின்சாரம், நெடுஞ்சாலை, இந்து சமய அறநிலை, தொழில், பத்திரப்பதிவு, நகராட்சி நிர்வாகம், கனிமவளம் உள்ளிட்ட துறைகளில் தி.மு.க.வுக்கு எதிராக தனக்கு கிடைத்த மெட்டீரியல் எவிடென்ஸ்களை அமித்ஷாவிடம் விவரித்திருக்கிறார் அண்ணாமலை. முதல்வர் குடும்ப நபர்களின் ஆதிக்கம் குறித்தும் பேசியிருக்கிறார்.

 

இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்கும் அசைன்மெண்ட்டை பா.ஜ.க.வும் சசிகலா தரப்பும் தனித்தனி ரூட்டில் தொடங்கிய பணிகள் தொய்வடைந்திருக்கிறது. இவர்களிடம் சிக்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தி.மு.க.வின் வலையில் விழுந்துள்ளனர். அமைச்சர்கள் ஏ.வ.வேலு, செந்தில்பாலாஜி, சேகர்பாபு, அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிடியில் அந்த 22 எம்.எல்.ஏ.க்களும் இருப்பதாக தி.மு.க. தரப்பில் எதிரொலிக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.