Skip to main content

ஆந்திர முதல்வரின் தங்கைக்கு நேர்ந்த அவலம்.. காரோடு கைது செய்த காவல்துறை

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Andhra Chief Minister's younger sister was arrested by the police

 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ரெட்டியை தெலங்கானா போலிசார் காரோடு சேர்த்து இழுத்துச் சென்ற காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ரெட்டி கடந்தாண்டு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியைத் துவங்கினார். ஹைதராபாத்தில் இருந்து அரசியலில் தீவிரமாக பங்கேற்கும் ஷர்மிளா ரெட்டி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை தீவிரமாக விமர்சித்து வருகிறார். 

 

ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சியை எதிர்த்து விமர்சித்து ஷர்மிளா நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடைபயணத்தின் போது அவரது கட்சிக்காரர்களுக்கும் சந்திரசேகர் ராவ் கட்சிக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு நியாயம் கேட்டு சந்திரசேகர் ராவின் இல்லத்திற்கு காரில் புறப்பட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மீண்டும் திரும்பிச் செல்லும்படி அறிவுறுத்தினர். 

 

இதனை ஷர்மிளா கேட்காததால் காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்றனர். ஆனால், ஷர்மிளா காரை விட்டு இறங்க மறுத்ததால் கிரேனை கொண்டுவந்து காரை கிரேனுடன் டோ செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது காருக்குப் பின்னால் ஓடியபடியே சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனையறிந்த ஷர்மிளாவின் தாயார் மகளைப் பார்க்க காவல்நிலையத்திற்குப் புறப்பட்டார். அவரை வெளியில் விடாமல் காவலர்கள் தடுத்து வீட்டுக்காவலில் வைத்தனர்.

 

ஷர்மிளா ரெட்டி காருடன் காவல்நிலையம் செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.