Skip to main content

“நிவாரணத் தொகை அனைத்தும் மத்திய அரசு கொடுக்கிறது..” - அண்ணாமலை 

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

"All the relief amount is given by the central government.." - Annamalai

 

சீர்காழி தாலுகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

சீர்காழி தாலுகா பகுதியில் கடந்த 11 ஆம் தேதி அதீத கனமழை பெய்தது. இதன் காரணமாக சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச மழை அளவு பதிவானது. சீர்காழியில் 44 சென்டிமீட்டர், கொள்ளிடத்தில் 32 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது. இதனால் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்தது. இந்தப் பாதிப்புகள் குறித்து பார்வையிடவும் நிவாரணம் வழங்கவும் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார்.

 

கொள்ளிடம் ஒன்றியம் கொடிக்கால்வெளி கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 120 குடியிருப்புகளையும், குறிப்பாக இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் உட்பகுந்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டிருந்த வீடுகளைப் பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, நூறு பேருக்கு அரிசி, காய்கறி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

அங்கிருந்து நல்லூர், அகரவட்டாரம், வேட்டங்குடி பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டார். அங்கு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்து திருவெண்காடு, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பூம்புகார் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பார்வையிட்டார்.

 

"All the relief amount is given by the central government.." - Annamalai

 

இதனிடையே, ராதாநல்லூர் கிராமத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், “தமிழக அரசின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது எந்த வகையிலும் போதாது. ஐயாயிரம் ரூபாயாக வழங்க வேண்டும். மேலும் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது பயிர்கள் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். ஆனால், தற்பொழுது பத்தாயிரம் ரூபாய் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வேலையில்லாமல் உள்ள குடும்பங்களுக்கு 30 நாட்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்” என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியை சென்னை வந்த உள்துறை அமைச்சர் சந்திக்காதது பற்றி கேட்டதற்கு, “பிரதமரையோ உள்துறை அமைச்சரையோ சாதாரண மக்கள் கூட யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்” என்றார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் பேருந்து எறிந்தது. அதற்கு தமிழக அரசு கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை. முறையாக விசாரணை செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். இதற்காக கருப்பு முருகானந்தம் தலைமையில் ஒரு குழு அமைத்து டெல்லி சென்று இரண்டு நாட்களில் நிதி அமைச்சரையும், வேளாண் துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட உள்ளனர்” என்றார்.

 

‘2024-ல் மெகா கூட்டணி அமையும். அதில் டிடிவி தினகரனுக்கு ஒரு சதவீதம் கூட இடமில்லை’ என எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார் என்பது குறித்துக் கேட்டதற்கு, “இது தொடர்பாக கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. எடப்பாடி இங்கு வந்திருக்கிறார்கள். பத்திரிகை நண்பர்களைச் சந்தித்துள்ளார்கள். குறிப்பாக இன்னொரு கட்சியைப் பற்றி பேசி உள்ளார்கள். இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டியது எடப்பாடியிடம்.

 

முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகை அனைத்தும் மத்திய அரசு கொடுக்கின்ற நிதியிலிருந்து வருகிறது. எனவே, மத்திய அரசு கொடுக்கின்ற நிதியோடு மாநில அரசும் சேர்த்து கூடுதலாக கொடுக்க வேண்டும்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி! - அண்ணாமலை சொல்வது என்ன? 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவரிடத்தில் இருந்து லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். 

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

இதில் பேரம் நடந்து பிறகு 51 லட்சம் ரூபாய் லஞ்சமாக தருவதில் வந்து முடிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாய் முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையைக் கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

 

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவிய 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார். இதன் பிறகு அவரிடத்தில் 15 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல், அவர் பணியாற்றி வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 13 மணி நேரமாக சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அவர் தெரிவித்ததாவது, “இதை அரசியலாக பார்ப்பதைவிட, ஒரு நபர் லஞ்சம் வாங்க முற்பட்டு, லஞ்சம் வாங்கியுள்ளார். அவரை கைது செய்திருக்கிறார்கள் என்றுதான் நான் பார்க்கிறேன். இது மிகவும் புரஃபஷ்னலா அணுகவேண்டிய விஷயம். இதற்காக மொத்த அமலாக்கத்துறை மீதும் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. அமலாக்கத்துறை மீது தவறு இல்லை. மனிதர்கள் செய்யும் தவறுக்கு அமலாக்கத்துறை மீது தவறு சொல்ல முடியாது. தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்குபவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

 

இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. அவர்களுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி குறைவு. அதுவும் தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். சம்மந்தமே இல்லாமல் ஒரு கட்சியையும், கட்சியின் தலைவரையும் தொடர்புபடுத்தி பேசும் அளவிற்கு மெச்சூரிட்டி குறைவான தமிழ்நாடு அரசியல்வாதிகளை வைத்தே தமிழ்நாடு வாழ்ந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

கே.டி.  ராகவனுக்கு பொறுப்பு! - அண்ணாமலையின் அதிரடி முடிவு! 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

K.T. Raghavan! The action of Annamalai!

 

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா முழுக்க இருக்கும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் துவங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க.வுக்கு எதிரான 35க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி எனும் மெகா கூட்டணியை அமைத்துள்ளன. அதேவேளையில், பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு அடுத்து பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க. சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது. 

 

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டதும் இது ஒரு தேர்தல் நாடகம் விரைவில் அவர்கள் ஒன்றிணைவார்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என உறுதியாகத் தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதியில் 9 தொகுதிகளைக் கைப்பற்ற பா.ஜ.க. தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களே பேசி வந்தனர். 

 

அதற்கான பணிகளும் தமிழ்நாடு பா.ஜ.க.வில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிட திட்டமிட்டிருக்கிறதோ என சிந்திக்கும் வகையில், 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 

K.T. Raghavan! The action of Annamalai!

 

அதன்படி, தென்காசி தொகுதிக்கு பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஈரோடு தொகுதிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக கே.டி. ராகவன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு எஸ்.ஜி. சூர்யா, நாமக்கல் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, திருவள்ளூர் தொகுதிக்கு என்.எல். நாகராஜன், தென்சென்னைக்கு பாஸ்கர், அரக்கோணம் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, சேலத்துக்கு தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், மத்திய சென்னைக்கு ஜி. ராதாகிருஷ்ணன், தர்மபுரிக்கு முனிராஜ், வட சென்னைக்கு பெப்சி சிவகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைமை அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது.