Skip to main content

அதிமுக, பாமக போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்..! தானாக வெளியேறிய தேமுதிக..!

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

ADMK's master sketch DMDK who left from alliance


சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (09.03.2021) காலை 11 மணிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் கட்சித் தலைமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. ஆலோசனை முடிந்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது நாளை தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்தே தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அதன் பணிகளில் வேகம் காட்டின. அதில் குறிப்பான பணி, கூட்டணி அமைப்பது. திமுகவும் அதிமுகவும் தனது தோழமை கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தின. இதில் அதிமுக முதலில் பாமகவுடனான தொகுதிகளை முடிவுசெய்தது. அதனைத் தொடர்ந்து பாஜகவுடனான தொகுதிப் பங்கீட்டை முடிவுசெய்தது. பாமகவின் தொகுதிப் பங்கீடு விரைவில் முடிய, பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு சற்று இழுபறியாகி பின் முடிவுக்குவந்தது. 

 

முன்னதாக தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, ‘கூட்டணி குறித்து இன்னும் அதிமுக எங்களை அழைத்து பேசவுமில்லை; அழைப்பும் விடவில்லை. விரைவில் எங்களை அழைத்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல இடங்களில், பலமுறை தெரிவித்துவந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி அதிமுக கூட்டணி குறித்து பேச்சுக்களை ஆரம்பித்தபோதும், தேமுதிகவுடனான பேச்சில் வேகம் காட்டவில்லை. இடையில் ஒருமுறை தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவின் அமைச்சர்கள் சிலர் தனியாக அவரது வீட்டில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் முதலில் அறிந்திருக்கவில்லை. சந்திப்பு நடந்து முடிந்த பிறகுதான் அதுகுறித்து அவர் கவனத்திற்குச் சென்றது. அதன்பின் அதிமுக - தேமுதிக இடையே சில கட்ட பேச்சுவார்த்தைகள் அதன் பேச்சுவார்த்தை குழுவுடன் நடந்துமுடிந்தது. ஆனால், பெரும் இழுபறியிலேயே இருந்துவந்தது. 

 

ADMK's master sketch DMDK who left from alliance

 

பாமக கடந்த 5ஆம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் என அதிமுக, பாமக மற்றும் பாஜகவின் சின்னங்கள் பதிவிடப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை அப்போது முடிவுபெறாத நிலையிலும் தேமுதிகவின் சின்னமோ, கட்சியின் கொடியோ, பெயரோ பதிவிடவில்லை. இது அப்போது அரசியல் மட்டத்தில் பெரும் விவாதமானது. ஆனால், இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்தோ, பாமக தரப்பிலிருந்தோ எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை. அதேவேளையில் தேமுதிகவினர், கூட்டணி கட்சிக்கான முக்கியத்துவத்தை தரவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தனர். 

 

இந்தநிலையில் இன்று தேமுதிகவின் அவசரக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள், அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில், தேமுதிக குறிப்பிட்ட சில தொகுதிகளை கேட்டுவந்தது. ஆனால், அதே தொகுதிகளை பாமகவும் கேட்டுள்ளது. பாமக பலமாக இருக்கும் தொகுதிகளில் தேமுதிகவிற்கு கொஞ்சம் செல்வாக்கு அதிகம். அதனால், அதிமுகவும் அத்தொகுதிகளைத் தேமுதிகவிற்கு விட்டுகொடுக்க முன்வரவில்லை.

 

ADMK's master sketch DMDK who left from alliance

 

அதனால்தான் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் வெளியேவந்த அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ''கேட்டத் தொகுதிகளும், எண்ணிக்கையும் தராததால் நாங்கள் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தேமுதிகவிற்கு இன்றுதான் தீபாவளி. கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அதிமுக தமிழகத்தில் டெபாசிட் இழப்பார்கள். முக்கியமாக அங்கு இருக்கின்ற கே.பி.முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சியுடைய ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார். அவர் அதிமுகவிற்கு செயல்படவில்லை'' என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக, கூட்டணி குறித்து பாஜக மற்றும் பாமகவுடன் காட்டிய மும்முரத்தை தேமுதிகவிடம் காட்டவில்லை. அதனால் தேமுதிக, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது என்கின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.