Skip to main content

அ.தி.மு.க முகநூலென்ன ‘ரகசிய’ பக்கமா? - ஐ.டி.விங் நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

ADMK virudhunagar FaceBook issue

 

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில்,  மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளும், ஊராட்சி மற்றும் நகர வார்டுகளில் பொறுப்பாளர்களும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
 


விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பட்டியல், அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பிரிவில்,  800 பேர் வரை புதிய நிர்வாகிகள் ஆகியுள்ளனர். 


இந்த நியமனம், இம்மாவட்டத்தில் ராஜேந்திரபாலாஜிக்கு  எதிராக,  கோஷ்டி அரசியல் செய்து வருபவர்களை உஷ்ணப்படுத்திய நிலையில், ’2016-ல் மாவட்டம்தோறும், 14 ஐ.டி விங்க் நிர்வாகிகளை ஜெயலலிதா நியமித்தார். அப்போது, ஐ.டி விங்க் தூள் கிளப்பியது. 2020-ல், இந்த ஒரு மாவட்டத்திற்கு மட்டும் 800 பேரை நியமித்துள்ளனர். ஒரு சிலரைத் தவிர, மற்ற அத்தனை பேருமே வேஸ்ட்!’ என்று சமூக வலைத்தளங்களில், அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

 

ADMK virudhunagar FaceBook issue


‘அத்தனை பேரும் வேஸ்ட்டா?’ என்று தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “பாதிக்கும் மேல அப்படித்தான்! வார்டு கவுன்சிலர்ல இருந்து, கிளைச் செயலாளர் வரைக்கும், மாமன், மச்சான், சொந்தக்காரன்னு, ஆளாளுக்கு சிபாரிசு பண்ணுன எல்லாருமே நிர்வாகிகளா ஆகிட்டாங்க. இவங்க எல்லாருமே ராஜேந்திரபாலாஜியோட வலுவான ஆதரவாளர்கள். இந்த மாதிரி சிபாரிசு பண்ணுனவங்க லிஸ்ட்ல, கட்சியோட ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ஐயாவும் வர்றாரு. 


சாம்பிளுக்கு ஒருத்தரை சொல்லுறேன். பேரு ராஜ்கமல். அவரு இருக்கிறது சென்னைல. ஆனா.. சொந்த ஊரு அருப்புக்கோட்டைன்னு சொல்லி,  தகவல் தொழில்நுட்பப் பிரிவுல, விருதுநகர் மாவட்ட இணைச் செயலாளர் ஆயிட்டாரு. இவரோட ஃபேஸ்புக்ல போயி பார்த்தேன். அப்படி ஒண்ணும் ஆக்டிவா இல்ல.” என்றவர், “முகநூலில், குறிப்பாக பெண்களும், தங்களின் சுயவிபரங்களை வேறு யாரும் தெரிந்துகொள்ளக் கூடாது என்று நினைப்பவர்களும்தான், ப்ரொஃபைலை ‘லாக்’ பண்ணி வைப்பார்கள். இங்கே கொடுமை என்னவென்றால், விருதுநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க பக்கத்தையே, லாக் செய்து வைத்திருக்கின்றனர். அது என்ன ரகசியப் பக்கமா?  இப்படி இருந்தால் எப்படி?” என்று கேட்டார்.  

 

ADMK virudhunagar FaceBook issue


விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ராஜ்கமலை தொடர்பு கொண்டோம்.  “அம்மா இந்த இயக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு வழி நடத்தினாங்க. அவருக்குப் பிறகு, ஆட்சியையும் கட்சியையும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பா நடத்திக்கிட்டிருக்காங்க. கட்சி மீது நான் வைத்திருக்கும் பற்றினையும் செயல்பாட்டையும் பார்த்துத்தான், எனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்திருக்காங்க.

 

ADMK virudhunagar FaceBook issue
                                                               ராஜ் கமல்

 

கே.கே.எஸ்.எஸ்.ஆரை எதிர்த்து அரசியல் பண்ணுற குடும்பத்தைச் சேர்ந்தவன் நான்.  ஆரம்பத்துல இருந்தே கட்சியின் அடிப்படை உறுப்பினரா இருந்துட்டு வர்றேன். கடந்த எம்.எல்.ஏ எலக்ஷன்ல, அருப்புக்கோட்டைல நடந்த பிரச்சாரக் கூட்டங்கள்ல கட்சிப் பணியாற்றி இருக்கேன். நான் மட்டுமில்ல, விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரிந்துரைத்த எல்லாருமே தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு தகுதியானவங்கதான். அத்தனைபேரும் வேஸ்ட்டுங்கிறது எம்.எல்.ஏ அணி திட்டமிட்டுப் பரப்புற வதந்தி. 

 

ADMK virudhunagar FaceBook issue

 

எங்களுக்கு எதிரான இந்த எதிர்மறையான பதிவும்கூட, எங்களுக்கு உத்வேகத்தையே கொடுத்திருக்கு. எந்த நோக்கத்தோடு புரட்சித் தலைவர் இந்தக் கட்சியை ஆரம்பிச்சாரோ, அதிலிருந்து விலகாம, ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், டிவிட்டர்ன்னு சமூக வலைத்தளங்களில், எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரத்திற்கு நிமிடத்திற்கு நிமிடம் தக்க பதிலடி கொடுப்போம்.” என்று மிகவும் சீரியஸாகப் பேசினார்.

 

அ.தி.மு.க ஐ.டி.விங் புதிய நிர்வாகிகளின் செயல்பாடு போகப்போக தெரிந்துவிடத்தானே போகிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.