Skip to main content

எனக்குக் கால் முடியல, அதனால போகல, மற்றபடி எதுவும் தெரியாது... கமிஷன் வராததால் பிரச்சனையைக் கிளப்பிய அ.தி.மு.க. தரப்பு!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

admk

 

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க.-வின் கும்பகோணம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் அசோக்குமாரின் மனைவி காயத்திரி அசோக்குமார். இவர் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக தேர்வாகிய பிறகு இரண்டாவது கூட்டத்தை ஒன்றிய கூட்ட அரங்கில் நடத்தினார். ஒன்றிய ஆணையர் பூங்குழலி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர், கூட்டத்திற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் சொந்தக் கட்சியான தி.மு.க.-வைச் சேர்ந்த கும்பகோணத்தின் மற்றொரு ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய துணை சேர்மனுமாகிய கணேசனும், அவரது ஆதரவு கவுன்சிலர்கள் 6 பேரும் புறக்கணித்து விட்டனர்.

 

கூட்டத்தில் சுமார் 100 பங்கங்களில் எழுதப்பட்ட 118 தீர்மானங்கள் வாசிக்கப் பட்டன. இதில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்களை 90 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டதாக வாசிக்கப்பட்டது. அப்போதே அ.தி.மு.க.-வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரான சசிகலா 90 லட்சத்திற்கு கிருமிநாசினி வாங்குனீங்களா என முறைகேடு குற்றச்சாட்டை எழுப்ப, இரு கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

 

தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம், ஊழல் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர் சசிகலாவின் மாமனாரும், கும்பகோணம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான அறிவழகன் புகார் அளித்துள்ளார். இதனைச் சாதகமாக்கிக் கொண்ட அ.ம.மு.க.-வில் உள்ள சிலர், அ.தி.மு.க.-வுக்கு ஆதரவு தெரிவிப்பது போல போஸ்டர் அடித்து நகர் முழுவதும் ஒட்டி பரபரப்பாகினர். தி.மு.க. தரப்போ அ.தி.மு.க. அரசு வாங்கிய கிருமிநாசினிகளின் விலைப்பட்டியலையும் தி.மு.க. நிர்வாகத்தில் ஆணையர் வாங்கிய கிருமிநாசினிகளின் விலைப் பட்டியலையும் போஸ்டர் அடித்து ஒட்டி பதிலடி கொடுத்திருப்பது பரபரத்துக்கிடக்கிறது.

 

அ.தி.மு.க. கவுன்சிலர் சசிகலா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், "அதிக ஊராட்சிகளைக் கொண்ட திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் கூட ஒரு லட்சத்து 60,000 ரூபாய்க்குதான் கிருமிநாசினி வாங்கியிருக்காங்க. இங்கு மட்டும் ரூ.90 லட்சத்துக்கு வாங்கியிருப்பதாகக் கணக்கு காட்டுகின்றனர். இதில் 65 லட்சம் ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. 118 தீர்மானங்களில் 11 தீர்மானங்களில், ஒவ்வொரு தீர்மானத்திலும் ஒவ்வொரு மாதிரியான விலையைக் குறிப்பிட்டிருக்கின்றனர். கும்பகோணத்தில் உள்ள ருமாங்கோ என்கிற கம்பெனியில் குளோரின் பவுடர் வாங்கியதாகச் சொல்கிறார் அப்படி ஒரு கம்பெனி இந்த மாவட்டத்திலேயே இல்லை'' என்கிறார்.

 

admk

 

ஊழல் குறித்து ஒன்றியக்குழு தலைவர் காயத்திரி அசோக்குமாரிடம் விளக்கம் கேட்டோம், "ஒன்றரை மாதங்களுக்கு உண்டான கிருமி நாசினிகள் இருப்பு இருக்கவேண்டும் எனத் தபால் மூலம் ஆட்சியர் உத்தரவு போட்டார். அரசு விதிப்படி, தரமானதைக் குறைவான விலையில் வாங்க உத்தரவிட்டேன். அதை எந்தக் கம்பனியில் வாங்க வேண்டும் என்பதெல்லாம் ஆணையரின் வேலை. இதற்காக மூன்று பேரிடம் கொட்டேஷன் வாங்கி குறைந்த விலையில் கொடுத்த கம்பனியில் வாங்கி அனைத்து ஊராட்சிக்கும் பிரித்துக் கொடுத்தோம், இதில் ஜி.எஸ்.டி. 18 சதவிகிதம், வருமானவரி 2 சதவிகிதமே 20 லட்சம் வந்து விட்டது. இதுல எப்படி ஊழல் நடக்கும். வேண்டுமென்றே குற்றம் கூறுகிறார்கள்'' என்கிறார்.

 

ஒன்றியக் குழு கூட்டத்திற்கு ஆதரவு கவுன்சிலர்களோடு வராமல் இருந்த ஒ.செ.வும், வைஸ்சேர்மனுமான கணேசனிடம் கேட்டோம், "எனக்கு கால் முடியல, அதனால போகல, மற்றபடி எதுவும் தெரியாது, மற்றபடி ஏதேதோ குற்றம் சொல்லுவது அனைத்துமே பொய்யானது'' என்கிறார்.

 

உள் அரசியல் அறிந்தவர்களோ, "சேர்மன் பதவியைக் குறிவைத்து அ.தி.மு.க. ஒ.செ. அறிவழகன் தனது மருமகள் மூலம் ஆரம்பத்தில் இருந்தே காய்நகர்த்தி வருகிறார். அதேபோல் துணை சேர்மனாக இருக்கும் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கணேசன் கும்பகோணம் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகனின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். இவர் சேர்மன் தன் கட்டுபாட்டில்தான் இருக்க வேண்டும், தனக்கும் தனிசேர் ரூம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதைச் சேர்மன் தரப்பு மறுத்துவிட்டது, அதனால் சேர்மன் காயத்திரிக்கு எதிராகச் செயல்பட்டுவரும் அ.தி.மு.க. ஒ.செ. அறிவழகனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறார். அவரது ஆதரவு கவுன்சிலர்களும் கூட்டத்தில் ஆப்சென்ட்.

 

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தி.மு.க. சேர்மன் காயத்ரியை நீக்கிவிட்டு, தனது மருமகளைச் சேர்மன் பதவியில் உட்காரவைத்து, சேர்மனுக்கு இணையான அந்தஸ்தை கணேசனுக்கு தருவதுதான் அ.தி.மு.க. ஒ.செ. அறிவழகனுக்கும் தி.மு.க ஒ.செ. கணேசனுக்குமான டீலிங்’’ என்கிறார்கள் விவரமாக. அதுபோலவே அ.தி.மு.கவிலும், அறிவழகனின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையிலான அரசியல் காய் நகர்த்தல்களுக்கு எதிராக ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

 

http://onelink.to/nknapp

 

கும்பகோணத்தில் அ.ம.மு.க.-வும் அ.தி.மு.க.-வும் ஒன்றுதான். உடையாளூர் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அ.தி.மு.க.-வும், அ.ம.மு.க.-வும் கூட்டணி போட்டாங்க, அதேபோல மருதாநல்லூர் சொசைட்டியிலும் தி.மு.க.-வோடு கூட்டணிப் பதவியில் இருக்காங்க, கிருமிநாசினி விவகாரத்தில் கூட எதிர்பார்த்த கமிஷன் வராததால்தான் அ.தி.மு.க. தரப்பு பிரச்சினையைக் கிளப்பியது என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்